(து - ம்.)என்பது, அங்ஙனம் மழைமேல் வைத்துப் பருவமறுக்கின்றாள் தலைவர் தாம் கார்ப்பருவத்து வருவேமென்றார்; அதற்குள்ளாக மேகமே நீ இவள்பால் அன்பின்மையால் இடையில் வந்து பெய்யத் தொடங்கி மருட்டிப் பெய்தலையுடைய நின் பொய்நீர்மையை மெய்ந்நீர்மையாகக் கொண்டு மயங்குகின்ற மயிலின்குழாம்போல, யான் மயங்கேனென மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பிறவும் வகைபட வந்தகிளவி" (தொல். கள. (23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| சிறுவீ முல்லைத் தேங்கமழ் பசுவீ |
| பொறிவரி நன்மான் புகர்முகங் கடுப்பத் |
| தண்புதல் அணிபெற மலர வண்பெயல் |
| கார்வரு பருவம் என்றனர் மன்இனிப் |
5 | பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர் |
| அன்பின் மையிற் பண்பில பயிற்றும் |
| பொய்யிடி அதிர்குரல் வாய்செத்து ஆலும் |
| இனமயில் மடக்கணம் போல |
| நினைமருள் வேனோ வாழியர் மழையே. |
(சொ - ள்.) மழையே சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ நல் மான் பொறி வரி புகர் முகம் கடுப்ப - மேகமே ! நம் காதலர் தாம் வினைவயிற் பிரிந்து செல்கின்ற பொழுது இனி என்று வருவீரோ என்று யாம் வினாவியதற்கு அவர் "சிறிய பூவையுடைய முல்லையின் தேன்மணம் வீசும் பசிய மலரெல்லாம் நல்ல யானையின் புள்ளிகளையும் வரிகளையும் உடைய புகரமைந்த முகம் போல; தண் புதல் அணி பெற மலர வண் பெயல் கார்வரு பருவம் என்றனர் - மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பொருந்தும்படி மலராநிற்ப மிக்க மழை பெய்தலையுடைய கார்ப்பருவம் அன்றோ யாம் வரும் பருவம்" என்று கூறிச் சென்றார்; இனி அன்பு இன்மையின் பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் - அங்ஙனமாக நீ இப்பொழுது மிகுதியும் இவள்பால் அன்பில்லாமையால் இவளுடைய பிரிவினாலுண்டாகிய பெரிய துன்பம் பொருந்திய உள்ளம் நடுங்குதலைச் செய்யும் பொருட்டு; பண்பு இல பயிற்றும் பொய்இடி அதிர் குரல் - இயல்பில்லாதவற்றை மேற்கொள்ளுகின்ற பொய்ம்மையாக இடிக்கின்ற அதிர்ச்சியையுடைய நின்முழக்கத்தை; வாய் செத்து ஆலும் மயில் இனம் மடக் கணம் போல - மெய்ம்மையாகக் கொண்டு ஆரவாரிக்கின்ற மயிலினமாகிய அறிவில்லாத அக் கூட்டம்போல; நினை மருள்வேனோ - நின்னைக் கண்டவுடன் அவர் இப்பொழுது வருகுவர் என்று யானும் மயங்குவேனோ? அங்ஙனம் செய்யேன்; அவர் இயல்பாகிய கார்ப் பருவத்திலேதான் வருகுவர்; நீ வீணே முழங்காதே கொள்; வாழியர் - நீடு வாழ்வாயாக!; எ - று.
(வி - ம்.)வாழியர் : இகழ்ச்சிக்குறிப்பு.
கார்ப்பருவந் தொடங்கியுங் காதலர் வாராமையால் வருந்தியதலைவி தேறுதல்வேண்டி மழையைப் பொய்ம்மழையென்று மறுத்தாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியையாற்றுவித்தல்.
(பெரு - ரை.) நன்மான் - ஈண்டு யானை. வாய் - உண்மை. மடக்கணம் - அறியாமையுடைய கூட்டம். வாய்மையுணரமாட்டாமைக்கு ஏதுக்கூறுவாள் மடக்கணம் என்றாள்.
(248)