திணை : நெய்தல்.

     துறை : இது, வரைவிடை மெலிந்தது.

     (து - ம்.)என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் வரைவிடை வைத்துச் சென்றான் நீட்டித்தலும் வருந்திய தலைவி, முன்பு நமது சேரியில் அலரெழுந்தமையால் அதுபொறாத கொண்கனது தேர் தடுக்கவும் நில்லாது சென்றுவிட்டதன்றோ? ஆதலின் அவன் மீண்டுவந்து வரைவது முளதாமோ என அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் .................... தானே கூறுங் காலமு முளவே" (தொல். கள. 21) என்னும்" விதி கொள்க.

    
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை 
    
நீலத்து அன்ன பாசிலை அகந்தொறும் 
    
வெள்ளி அன்ன விளங்கிணர் நாப்பண் 
    
பொன்னின் அன்ன நறுந்தா துதிரப் 
5
புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல் 
    
வரிவண் டூதலிற் புலிசெத்து வெரீஇப் 
    
பரியுடை வயங்குதாள் பந்தின் தாவத் 
    
தாங்கவுந் தகைவரை நில்லா ஆங்கண் 
    
மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி 
10
அம்பல் மூதூர் அலரெழச் 
    
சென்றது அன்றோ கொண்கன் தேரே. 

     (சொ - ள்.) இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும் - இரும்புபோன்ற கரிய கிளையையுடைய புன்னை நீலம் போன்ற பசிய இலையிடமெங்கும்; வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் பொன்னின் அன்ன நறுந்தாது உதிர - வெள்ளிபோன்ற விளங்கிய பூங்கொத்தினிடை உள்ள பொன்போன்ற நறிய மகரந்தம் உதிராநிற்ப; புலிப்பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் வரி வண்டு ஊதலின் - புலியினது புள்ளியைக் கொண்ட அழகு விளங்கிய நல்ல நிறமுள்ள மேற்புறத்தையுடைய வரியமைந்த வண்டுகள் ஊதுதலினாலே; புலிசெத்து வெரீஇத் தாங்கவும் தகை வரை ஆங்கண் நில்லா - இது புலி யோசையோ வென்று அயிர்த்து அச்சமுற்றுப் பல முறை இழுத்து நிறுத்தவும் நிறுத்திய இடத்தில் நில்லாவாகி; பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ - தேரிற்பூட்டிய குதிரையினுடைய வயங்கிய கால்கள் பந்துபோலத் தாவாநிற்ப; மல்லல் அம் சேரி கல் எனத் தோன்றி அம்பல் மூதூர் அலர் எழ - வளப்ப மிக்க நம்முடைய சேரியிலே கல்லென்னும் ஓசையோடு வெளிப்பட்டுச் சிறிய பழிச்சொல்லைக் கூறும் முதிய ஊரெங்கும் பெரிதாய பழி தூற்றுதலினாலே; கொண்கன் தேர் சென்றது அன்றோ - கொண்கனது தேர் முன்பு இங்கு நில்லாது சென்றதன்றோ? அது நாம் அறிந்ததே! அத்தகைய தலைவன் வெள்கலின்றி மீண்டு வந்து மணஞ்செய்து கொள்ளவும் இயையுமோ? இனி என் செய்து உய்குவேன் ?; எ - று.

     (வி - ம்.)ஆங்கண் - ஊர். ஊரிலுள்ள சேரியெனக் கூட்டுக. பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி. ஆங்காங்கு உவமையும் பொருளு மொத்தமையின், உள்ளுறையின்மையறிக. கைகோள் - களவு, கேட்போர் யாருமில்லையாதலில் தானே கூறியாறுதல். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) இதன்கண் இரும்பு வெள்ளி பொன் என்னும் இவை முரணணியைத் தோற்றுவித்துச் செய்யுளின்பம் மிகுதல் உணர்க. தகைவரை ஆங்கண் என மாறினுமாம். தகைந்த எல்லையாகிய அவ்விடத்தே என்க. இஃது அவன் ஒரோவழி அலரஞ்சி வாராதொழிவானோ? என்று வருந்தியபடியாம்.

     இதன்கண் வண்டின் முரற்சியைப் புலியின் ஓசையாகக் கருதிக் குதிரைகள் விரைந்தன என்றதன்கண் மாக்களின் பழிச்சொற்குப் பயந்து நம்மை நீத்துப் போவானோ என்னும் உள்ளுறையுந் தோன்றுதலறிக.

(249)