திணை : குறிஞ்சி.

    துறை : இது, தலைமகளைத் தோழி குறைநயப்புக் கூறியது.

     (து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவிபாற்சென்று ஒரு தோன்றல் தினைப்புனத்து நம்மொடு கிளியோப்பித் தன் கருத்தை நிகழ்த்துமிடம் பெறானாகி அகன்றனன்; அவனைக் கண்டு என் தொடிகழல அவற்றைச் செறித்து வந்தேனென்று அவனைத் தன்னுள்ளம் விரும்பினது போலத் தலைவி அதனை ஆராய்ந்து தன்னை விரும்பினன்" எனக் கொள்ளும் வண்ணங் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு "மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.

    
அவ்வளை வெரிநி னரக்கீர்த் தன்ன  
    
செவ்வரி யிதழ சேணாறு நறவின்1  
    
நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப் 
    
பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் 
5
வளமலை நாடன் நெருநல் நம்மொடு 
    
கிளைமலி சிறுதினைக் கிளிகடிந் தசைஇச் 
    
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்த 
    
தல்ல லன்றது காதலந் தோழி 
    
தாதுண் வேட்கையிற் போதுதெரிந் தூதா 
10
வண்டோ ரன்னவவன் தண்டாக் காட்சி 
    
கண்டுங் கழல்தொடி வலித்தவென் 
    
பண்பில் செய்தி நினைப்பா கின்றே. 

    (சொ - ள்.)காதலம் தோழி - காதலையுடைய தோழி !; அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன செவ்வரி இதழ சேண்நாறு நறவின் - அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தீற்றினாற்போன்ற சிவந்த வரிபொருந்திய இதழையுடைய நெடுந்தூரம் மணங்கமழும் நறவம்பூவின், நறும்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்பொன் உரைகல்லின் நல் நிறம் பெறூஉம் வளமலை நாடன் - நறிய தாதை யளைந்த வண்டு பசிய நிறமுள்ள பொன்னை யுரைக்கும் கட்டளைக் கற்போல நல்ல நிறத்தைப் பெறாநிற்கும் வளம் பொருந்திய மலைநாடன்; நெருநல் நம்மொடு கிளைமலி சிறுதினைக் கிளி கடிந்து அசைஇ - நேற்றைப் பொழுது நம்மோடு கிளைத்தல் மிக்க சிறிய தினையில் வீழுங் கிளிகளைக் கடிந்து அங்குத் தங்கியிருந்தும்; சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் - தன்குறையைக் கூறுமிடம் பெறானாகிப் பெயர்ந்து போயினான்; அது பெயர்ந்தது அல்லல் அன்று - யான் கருதுகின்றது அங்ஙனம் அவன் பெயர்ந்ததாகிய ஓரல்லலுடைமையைக் குறித்ததன்று காண் !; தாது உண் வேட்கையின்போது தெரிந்து ஊதா வண்டு ஓரன்னவன் - தேனையுண்ணும் வேட்கையாலே நறுமலர் இன்னதென ஆராயாது யாண்டும் போய் விழுகின்ற வண்டின் ஒரு தன்மையை யொத்த அவனது; தண்டாக் காட்சி கண்டும் - கெடாத தோற்றப் பொலிவினைக் கண்டு வைத்தும்; கழல் தொடி வலித்த என் பண்புஇல் செய்தி நினைப்பு ஆகின்று - கழன்ற தொடியை மீண்டு செறித்த எனது பண்பில்லாத செய்கையைக் கருதா நின்றது என்னுள்ளம்; இஃதென்ன வியப்பு !; எ - று.

    (வி - ம்.)அவ்வளை - அழகியவளை. வெரிந் - முதுகு. அசைதல் - தங்குதல். யான் கருதியது அவன்பட்ட அல்லலையன்று; என் பண்பில் செய்தி நினைப்பாகின்று என்க. வேட்கையாற் போது தெரிந் தூதாத வண்டோரன்ன அவனென்றது உரிமைபூணத் தகுதிப்பாடில்லாத என்பாற் கருத்துடையா னென்றதாம். தண்டாக்காட்சி யென்றது அவனது தோற்றப் பொலிவு ஏனைய மகளிரும் விரும்புந் தன்மையதென்றதாம். இருவர்நோக்கும் இயையாதவழிக் காமஞ்சிறவாதாகலின் அவன் நோக்கு இயையாமையைக் கண்டுவைத்தும் என் தொடிகழன்றன என்றலின் என்பண்பில் செய்தி என்றதாம். இனி அவனுக்கு உடன்பட்டுக் கூறாமையால் என்செய்தி பண்பில் செய்தி யெனலுமாம்.

    இது குறைநயப்பாமாறு :- தோழி இங்ஙனம் தான் அவனைக் காமுற்றதாகக் கேட்ட தலைவி (தன்னுள்ளே) நம் காதலனை இவள், பிழைபட்ட நெறியில் இகழ்வுற ஒழுகுபவனெனக் கொண்டாள் கொலெனவும், இவளுடன் இன்று கிளிகடிந்தது என்பொருட்டென்று கொள்ளாது தன்பொருட்டென்று கொண்டாள் கொலெனவும், தன்னைக் கூடுமாறு கூற இடம்பெறானாய் அகன்றனன் எனக் கொண்டாள் கொலெனவும் கருதும்படியாகக் கூறினளென்றாலும், அதனுள்ளே என்னைக் கூட்டுவிக்கச் சொல்லுஞ் சொல்லுக்கு இடம் பெறாமையன்றி இவளைச் சேருமாறு கூறச் சொல்லிடம் பெறாது போயினானல்லனெனவும், வண்டு இழிந்த மலரை ஊதாவாதலால் அப்படிப்போல என்னினிழிந்தாளை அவன் புல்ல விரும்பானெனவும், இவளும் நங்களவொழுக்கத்தைச் சிறிதுணர்தலாலேஇக் குறை முடிக்க மனம் நெகிழ்ந்தமையின் மெய்சோர்வடைய வளை கழன்றனவெனவும், அவனொடு கூட்ட வேண்டி என்னை உடம்படுத்தக் கருதலின் அது தன்னியல்புக் கேற்றதல்லாமையிற் பண்பில் செய்தி யெனவுங் கூறினாளென, ஆராய்ச்சியாற் கொள்ள வைத்தமையிற் குறை நயப்பாயிற்று. மெய்ப்பாடு - இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் - குறைநயப்பித்தல்.

    (பெரு - ரை.) சேணாறுபிடவின் என்றும் நெருனல் என்றும் பாடம். நறவின் நறுந்தாது ஆடிய தும்பி பொன்னுரை கல்லின் தோன்றும் என்றது, அவனோடு நீ கொண்ட கேண்மையை நின் மெய்யிற்றோன்றிய புத்தழகும் புதுப்பொலிவும் எனக்குணர்த்திவிட்டன காண். என்னை மறையாதே கொள் என்னும் இறைச்சிப் பொருள் பயந்து நிற்றலை நுண்ணிதின் உணர்க.

(25)
  
 1. 
சேணாறு பிடவியன்.