திணை : பாலை.

    துறை : இது, பொருள்வயிற்பிரியுமெனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிவானெனக் குறிப்பாலறிந்து வருந்திய தலைமகளைத் தோழி, இவளுடைய குணங்கள் தலைவர் சூழ்ந்து மேற்கொண்ட வினையிலே குறுக்கிட்டுத் தடுத்தல் செய்திலபோலும்; ஆதலின் ஆற்றியிருக்கற்பாலதன்றி வேறு செய்யக் கடவதியாதெனக் கருதித் தேற்றாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனாற் கொள்க.

    
உலவை ஓமை ஒல்குநிலை ஒடுங்கிச் 
    
சிள்வீடு கறங்குஞ் சேய்நாட்டு அத்தம் 
    
திறம்புரி கொள்கையொடு இறந்துசெயின் அல்லது 
    
அரும்பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல்லென 
5
வலியா நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த 
    
வினையிடை விலங்கல போலும் புனைசுவர்ப் 
    
பாவை யன்ன பழிதீர் காட்சி 
    
ஐதேய்ந்து அகன்ற அல்குல் மைகூர்ந்து 
    
மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் 
10
முயல்வேட்டு எழுந்த முடுகுவிசைக் கதநாய் 
    
நன்னாப் புரையுஞ் சீறடிப் 
    
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே. 

    (சொ - ள்.) சுவர்ப் புனை பாவை அன்ன பழிதீர் காட்சி ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் - சுவரில் அலங்கரித்து எழுதிய பிரதிமை போன்ற குற்றந்தீர்ந்த காட்சியையும் மெல்லியதாய்ப் பொருந்தியகன்ற அல்குலையும்; மை கூர்ந்து மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழைக்கண் - மையெழுதப்பட்டு நீலமலரை எதிரிட்டுப் பிணைத்தாற் போன்ற கரிய இமைகளையுடைய குளிர்ச்சியுற்ற கண்ணையும்; முயல்வேட்டு எழுந்த முடுகு விசைக் கதநாய் நல் நாப் புரையும் சீறடி - முயலைப் பிடிக்க வெழுந்த விரைந்த செலவும் சினமுமுடைய நாயினது நல்ல நாவினை யொத்த சிறிய அடிகளையும்; பொம்மல் ஓதிப் புனை இழை குணனே - செறிந்த கூந்தலையும் புனைந்த கலன்களையுமுடைய இவளுடைய குணங்கள்; ஓமை உலவை ஒல்கு நிலை ஒடுங்கிச் சிள் வீடு கறங்கும் சேய்நாட்டு அத்தம் - கிளைகளையுடைய ஓமை மரத்தின் பட்டகிளைகளுள் மறைந்து தங்கிச் சிள்வீடு ஒலியாநிற்கும் வேற்றுநாட்டின்கண்ணே; திறம்புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது - செல்லுகின்ற நெறியில் இன்னவாறு செல்வோமென்னுங் கோட்பாட்டினோடு சென்றிருந்து பொருள் சேர்த்தாலல்லாமல்; இருந்தோர்க்கு அரும்பொருள் கூட்டம் இல் என - வீட்டின்கண் கவலையுடன் மனமடிந்து இருந்தவர்க்கு அரிய பொருளின் சேர்க்கை ஒருபொழுதும் சேர்வதில்லை யென்று; வலியா நெஞ்சம் வலிப்ப - இதுவரையிலும் உடன்பட்டெழாத நெஞ்சம் ஒருப்படுதலால்; சூழ்ந்த வினைஇடை விலங்கல் போலும் - தலைவர் ஆராய்ந்து தொடங்கிய காரியத்தின்கண்ணே குறுக்கிட்டுத் தடுத்தல் செய்தில போலும்; ஆதலின் ஆற்றியிருக்கற்பால தன்றி வேறு செய்யக்கடவது யாதுமில்லை; எ - று.

    (வி - ம்.) சிள்வீடு - ஒருவகை வண்டு.

    இறைச்சி :- சிள்வீடு ஓமைமரத்தின் பட்ட கிளையிலுள்ளாலொடுங்கி ஒலியாநிற்குமென்றது, இவள்கொண்ட காமமானது கற்பின் மிகுதியால் வெளிப்படத் தோன்றாது உள்ளகத்தொடுங்கிக் கனற்றாநிற்குமே யென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல். கைகோள் - கற்பு.

    (பெரு - ரை.) உலவை - ஒரு மரமுமாம். உலர்ந்த ஓமை மரத்தின்கண் ஒடுங்கியிருந்து சிள்வீடு கறங்கும் என்றது, இன்மையதிளிவீனிடையே தலைவர் நெஞ்சத்தே பொருட்பிணி ஒடுங்கியிருந்து அவரை இடையறாது ஊக்குதலால் என்னும் இறைச்சிப்பொருள் தோன்ற நின்றதுணர்க. திறம் - முயற்சி. வலியாநெஞ்சம் என்றது, நின்னைப் பிரிதற்கு இயலாமையால் உடன்பட்டெழாத நெஞ்சம் என்பதுபட நின்றது. எனவே அவர் பொருளீட்டியவுடனேயே விரைந்துவருவர் என்பது குறிப்பு.

    தலைவர் நெடிது ஆராய்ந்தபின்னரே பிரிந்தனர். ஆதலின் அப்பிரிவு இன்றியமையாமையின் யாமும் ஆற்றியிருத்தல்வேண்டும் என்று ஏதுக்காட்டியபடியாம். இருந்தோர் என்றது மடிந்திருந்தோர் என்பது பட நின்றது. எண்ணித் துணிந்த செயலை இடைநின்று தடுத்தல் அறமாகாமையின் குணங்கள் விலங்கல என்றாள். பொருள் இன்றியமையாமையிற் பிரிந்தாரேனும் நின் பேரழகும் நற்குணங்களும் அவரை விரைவில் மீட்டுக்கொடுவருங்காண் என்பாள் புனைசுவர்.....................குணன் என்று நலம் பாராட்டினள்.

(252)