திணை : பாலை.

     துறை : (1) இது, தோழி வாயின்மறுத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைமகன் தலைவிகொண்ட ஊடலைத் தணித்தற்பொருட்டுத் தூதாகவிடுக்கப்பட்ட வாயிலவரைத் தோழி நெருங்கி நம் காதலர் இறைவியின் கண்கள் தம்மைப் பிணிக்குமென்றெண்ணாது கடுஞ்சுரஞ் செல்பவர் பின்பு எதைத்தான் செய்யார்? பரத்தையிற் பிரிதலோ அவர்க்கு அரிது, அவர் கருதியவை யாவர் அறிவார் என்று மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பரணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.

     துறை : (2) செலவழுங்குவித்ததூஉமாம்.

     (து - ம்.) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

     (இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" என்னும் விதி கொள்க. இத்துறைக்கு இதனை முன்னிலைப் புறமொழியாகக் கொள்க.

    
குரும்பை மணிப்பூண் பெருஞ்செங் கிண்கிணிப் 
    
பாலார் துவர்வாய்ப் பைம்பூண் புதல்வன் 
    
மாலைக் கட்டின் மார்பூர்பு இழிய 
    
அவ்வெயிறு ஒழுகிய வெவ்வாய் மாண்நகைச் 
5
செயிர்தீர் கொள்கைநம் உயிர்வெங் காதலி  
    
திருமுகத்து அலமருங் கண்நினைந்து அல்கலும் 
    
பெருமர வள்ளியிற் பிணிக்கும் என்னார் 
    
சிறுபல் குன்றம் இறப்போர் 
    
அறிவார் யாரவர் முன்னி யவ்வே. 

     (சொ - ள்.) குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணி - குரும்பை போன்ற மணியையுடைய பூணாகிய பெரிய செவ்விய கிண்கிணியையும்; பால் ஆர் துவர் வாய்ப் பைம்பூண் புதல்வன் - பாலுண்ணுஞ் சிவந்த வாயையும் மற்றும் பல பசிய கலன்களையுமுடைய புதல்வன்; மாலைக்கட்டு இன் மார்பு ஊர்பு இழிய - மாலையணிதலையுடைய இன்பத்திற்குக் காரணமாகிய மார்பிலூர்ந்து இறங்குதலால்; அவ் எயிறு ஒழுகிய வெவ் வாய் மாண் நகைச் செயிர்தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி - அழகிய எயிற்றினின்றொழுகிய விருப்பமுற்ற மாட்சிமைப்பட்ட நகையையும் குற்றமற்ற கோட்பாட்டினையுமுடைய நம்முயிர் போன்ற விருப்பமிக்க காதலியினது; திருமுகத்து அலமரும் கண் நினைந்து அல்கலும் பெருமர வள்ளியின் பிணிக்கும் என்னார் - அழகிய முகத்திலே உலாவுகின்ற கண்கள் துன்பமெய்தி நாள்தோறும் பெரிய மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடியைப் போல நம்மைப் பிணிக்குமே என்று கருதாராய், சிறு பல் குன்றம் இறப்போர் - எப்பொழுதும் சிறிய பலவாய குன்றங்கடந்து சுரஞ்செல்வாராயினர், அத்தகையார் பின்பு எதனைத்தான் செய்யார்? பரத்தையிற் பிரிந்து செல்லுதலோ அவர்க்கு அரியது, அஃதியல்புதானே; அவர் முன்னிய யார் அறிவார் - இன்னும் அவர் கருதி உள்ளவை யாவர்தாம் அறியவல்லார்? எ - று.

     (வி - ம்.) குரும்பை மணிப்பூண் - அரையிற் கட்டும் கிண்கிணி.

     காதலனது முயக்கம் வேண்டாது புதல்வன் முகத்தில் ஆறியிருக்கவும் அமையுமென்பாள், புதல்வனை முற்கூறினாள், காதலி முயக்கத்தை வெறுத்ததன்றிச் செறுநரும் விரும்புஞ் சேயின் காட்சியையும் வெறுத்துச் செல்பவர், யாதுதான் செய்யாரெனக் கொண்டு கூறினாளுமாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.

     (பெரு - ரை.) இரண்டாவது துறைக்கு மெய்ப்பாடு அழுகை. பயன் - செலவழுங்குவித்தல் என்க. 'பெரும வள்ளியிற் பிணிக்கும்' என்றும் பாடம்.

(269)