திணை : நெய்தல்.

     துறை : இது, தோழி வாயினேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி வாயிலெதிர்கொண்டது.

     உடனிலைக்கிளவிவகையால்.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனை இறைமகளுடன் எதிர்கொண்ட தோழி! நின்னைப் பிரிந்து வருந்துவதல்லாமல் நின்னைத் தன்பால் வயமாக்க அறியாத இத் தலைவிபால் வைத்திருக்கும் அன்பினும் என்பால் அன்புடையைதான்; ஆயினும் நீ பிரிந்தது நன்னன் செய்த கூந்தற்கயிற்றினுங்காட்டிற் கொடியதன்றோ? அத் தகுதியை யான் மறப்பேன்காணென்று வெகுண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி, இழைத்துஆங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத் 
    
தண்தலை கமழும் வண்டுபடு நாற்றத்து 
    
இருள்புரை கூந்தல் பொங்குதுகள் ஆடி 
    
உருள்பொலி போல எம்முனை வருந்தல் 
5
அணித்தகை அல்லது பிணித்தல் தேற்றாப்  
    
பெருந்தோள் செல்வத்து இவளினும் எல்லா  
    
எற்பெரி தளித்தனை நீயே பொற்புடை  
    
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்  
    
வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன் 
10
கூந்தல் முரற்சியின் கொடிதே 
    
மறப்பன் மாதோநின் விறல்தகை மையே. 

     (சொ - ள்.) எல்லா தடந் தாள் தாழைக் குடம்பை - ஏட! நீ பிரிந்தக்கால் பெரிய தூற்றினையுடைய தாழைப் புதலினாலே கட்டப்பட்ட எமது சிறிய வீட்டின்கண்ணே! நோனாத் தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து இருள் புரை கூந்தல் - பொறுக்க முடியாதபடி சோலையிலுள்ள புன்னை முதலாகியவற்றின் மலரை முடித்தலால் வண்டுகள் மொய்க்கின்ற நறுநாற்றத்தையுடைய இருளொத்த கூந்தலில்; பொங்குதுகள் ஆடி உருள்பொலி போல எம்முனை வருந்தல் அணித்தகை அல்லது - மிக்க துகள்படிய நிலத்திலே புரண்டு சாய்ந்தாற் போலாக எம்முன்னே வருந்துதலையுடையளாகி அழகழிந்த தன்மை யொன்றல்லாது; பிணித்தல் தேற்றாப் பெருந்தோள் செல்வத்து இவளினும் - நின்னை வசமாக்குதலைத் தெளியாத பெரிய தோளையுடைய செல்வமகளாகிய இவளினுங்காட்டில்; என் பெரிது நீ அளித்தனை - என்னைப் பெரிதும் நீ அன்பு செய்தொழுகா நின்றனை அங்ஙனமாயினும் நீ பிரிந்து சென்றதானது; பொற்பு உடை விரி உளைப் பொலிந்த பரி உடை நல் மான் வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் - அழகு பொருந்திய விரிந்த பிடரிமயிர் பொலிவுபெற்ற விரைந்த செலவினையுடைய நல்ல குதிரைப் படைகளையுடைய பகையரசராகிய பிண்டன் முதலாயினோரைப் போரிலே தோற்றோடச் செய்த ஏந்திய வேற்படையையுடைய நன்னன்; கூந்தல் முரற்சியின் கொடிது - தான் அப் பகையரசரின் உரிமை மகளிரைப் பற்றி வந்து அவர் தலையை மழித்து அக் கூந்தலைக் கயிறாகத் திரித்து அக் கயிற்றாலே அப் பகைவரின் யானையைப் பிணித்த கொடுமையினும் கொடியதாயிராநின்றது; நின் விறல் தகைமையே மறப்பன் - ஆதலால் நினது வலிய தகுதிப்பாட்டினை யான் மறந்தே விடுகின்றேன்காண்; எ - று.

     (வி - ம்.) நோன்றல் - பொறுத்தல்; நோனாமை - பொறுக்க முடியாமை. முனை - ஐ: சாரியை. அணித்தகை - அழகைத் தடுப்பது. எல்லா: ஏடவென்னும் முன்னிலைச் சொல். கணவனை வயமாக்க அறியாதாள் வருந்தியென்னென்றதாம். இதனை "பஞ்சிறைகொண்ட" (கேம - 127) என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளானுமறிக. முரற்சி - கயிறு. தலைவியுடனெதிர் கொண்டமையால் உடனிலைக் கிளவியாயிற்று. இவளெனக் சுட்டினமையின் உடனின்றமை தெளிக.

    புலவி தீர்க்கும் வாயிலாக யான் அமையாதவழி என்னுடனும் பேசாது வெறுத்தல் செய்வாய் அமைந்தமையால் என்னுடன் பேசுவாயாயினை என்று கொண்டு எற்பெரிதளித்தனை யென்றாள்.

    மெய்ப்பாடு - உவமையைச் சார்ந்த பெருமிதம். பயன் - வாயினேர்தல்.

 (பெரு - ரை.) 
"பொங்கு துகள் ஆடி  
  
 உருள்பொறி போல எம்முனை வருதல்  
  
 அணித்தகை யல்லது பிணித்தல் தேற்றா" 

என்றும் பாடவேறுபாடுண்டு. இந்தப் பாடமே சிறப்புடையதுமாகும். இந்தப் பாடம் கிடைக்கப்பெறாமையால் இந்தச் செய்யுட்கு உரையாசிரியர் பெரிதும் இடர்ப்பட்டு உரைகூறியிருத்தலும் அவ்வுரை பொருந்தாமையும் அறிக.

     உருள்கின்ற பொறி போல (இயந்திரம் போல) எமக்கு முன்னரே வருவதன்றி தன் அணித்தகையால் நின்னைப் பிணித்தல் தேற்றா இவளைத் தலையளி செய்யாயாய் உனக்கு வாயில் நேர்விக்கும் என்னை மட்டும் நீ நன்கு அளிசெய்கின்றனை, அதனால் நீ சிற்சில செவ்வியில் வெற்றியும் கண்டனை, நின்னுடைய இவ்விறற்றகைமை நன்னன் கூந்தல் முரற்சியினும் கொடியதாயிருந்தது; ஆதலால் 'நன்றல்லது அன்றே மறப்பது அறன்' என்பது பற்றி நின் தகைமையை நான் மறப்பன்காண் என்று பொருள் காண்க. விறற்றகைமை என்றது, இகழ்ச்சி. தலைவியின் எளிமை கூறுவாள் அவள் தன்மாட்டு நினக்குச் சில செவ்வியில் இனியவாயிருக்கின்ற தனது தோட்செல்வம் ஒன்றே யுடையாள் என்று இரங்குவாள் பெருந்தோட் செல்வத்து இவள் என்று சுட்டினாள்.

(270)