(து - ம்.) என்பது, அங்ஙனம் தலைமகன் கேட்குமாறு கூறுகின்றவள், குன்ற நாடன் இரவில் வருதலன்றியும் அயலார் கூறும் பழிச்சொல்லுக்கும் அகலானாகிப் பகற்பொழுதினும் புனத்தே வருகின்றனன்; அவனது கேண்மை நல்லதில்லையென இருவகைக்குறியையு மறுத்து உள்ளுறையாலே உடன்கொண்டு சென்றாயினும் வரைந்து கொள்ளும்படி சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் கொள்க.
| அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள் |
| இரவின் வருதல் அன்றியும் உரவுக்கணை |
| வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி |
| உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு |
5 | மனைவாய் ஞமலி ஒருங்குபுடை ஆட |
| வேட்டுவலம் படுத்த உவகையன் காட்ட |
| நடுகாற் குரம்பைத்தன் குடிவயிற் பெயரும் |
| குன்ற நாடன் கேண்மை நமக்கே |
| நன்றால் வாழி தோழி என்றும் |
10 | அயலோர் அம்பலின் அகலான் |
| பகலின் வரூஉம் எறிபுனத் தானே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; வல்கைக்கானவன் வெம்சிலை வணக்கி உரவுக் கணை உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு - திண்ணிய கையையுடைய கானவன் தனது வெய்ய வில்லை வளைத்து வலிய கணையை எய்து நெஞ்சிலே பாய்த்திக் கொன்ற முட்பன்றியேற்றையைக் கைக்கொண்டு; வேட்டு வலம் படுத்த உவகையன் - வேட்டையிலே தான் பெற்ற வென்றியாலாய உவகையுடையவனாகி; மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட - மனையகத்துள்ள நாய்கள் எல்லாம் ஒரு சேரப் பக்கத்திலே வந்து குரைத்து விளையாட; காட்ட நடுகால் தன் குரம்பைக் குடிவயின் பெயரும் குன்ற நாடன் - காட்டகத்துள்ள நட்டகாலிலே கை சேர்த்துப் பிணித்த தானிருக்கும் குடிசையையுடைய சேரியின்கண்ணே செல்லாநிற்குங் குன்ற நாடன்; அரவு இரைதேரும் ஆர் இருள் இரவு நடுநாள் - பாம்புகள் தமக்கு வேண்டிய இரையைத் தேடி உழலாநின்ற இயங்குதற்கரிய இருள்மிக்க இரவு நடுயாமத்தில்; வருதல் அன்றியும் - நம்பால் வருவதல்லாமலும்; என்றும் அயலோர் அம்பலின் அகலான் - எப்பொழுதும் அயலவர் கூறும் பழிச்சொல்லைக் கேட்டும் அகன்றுபோகானாகி; எறி புனத்தான் பகலின் வரூஉம் - வெட்டியுழுது விதைத்த தினைப்புனத்தின் கண்ணே பகற் பொழுதினும் வாராநின்றான்; கேண்மை நமக்கு நன்று - ஆதலின் அவனுடைய நட்பானது நமக்கு நல்லதோ? நல்லதன்றாயிற்றுக் காண்; எ - று.
(வி - ம்.) நன்று - நல்லதன்று என்னும் பொருள்தோன்ற எடுத்தலோசையாற் கொள்க. இஃது, அவன் புணர்வுமறுத்தல்.
உள்ளுறை :- கானவன் எய்துபெற்ற முளவுமானேற்றையொடு உவகையனாய் நாய்கள் மனையகத்து எதிரேபோந்து குரைத்து மகிழா நிற்பக் குடிவயிற் பெயருமென்றது, தலைமகன் தான் களவொழுக்கத்துப் பெற்ற தலைவியை இரவில் உடன்கொண்டுசென்று தன்னூர்வயிற் புகுந்து தன்மனையின்கணுள்ள தமர் மகிழாநிற்ப மணம்புணர்வானாக என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) அரவு இரைதேரும் ஆர் இருள் நடுநாள் என்றது ஆறின்னாமை கூறி இரவுக்குறி மறுத்ததாம்; அம்பலின் அகலான் பகலும் வரூஉம் என்றது அலரறிவுறீஇப் பகற்குறியும் மறுத்ததாம். எனவே இனி வரைந்துகோடலே தகுதி என்று வரைவு கடாவியதாயிற்று.
(285)