(து - ம்.) என்பது இல்வயிற் செறித்துக் காவல் செய்யப்படுதலாற் புறத்தே போதற்கியலாது ஆற்றாமைமிக்க தலைவி, முன்பு தலைவன் நம்பால் வந்தபொழுதெல்லாம் அஞ்சாத என்னெஞ்சம் இப்பொழுது இல்வயிற்செறித்தலால் இரவிலே புள்ளொலி கேட்குந்தோறும் தலைவனது தேரின் மணிக்குரலோவென்றஞ்சித் துயில்கொண்டிலதென நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "தமர் தற்காத்த காரண மருங்கினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.
| விசும்புறழ் புரிசை வெம்ப முற்றிப் |
| பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்த |
| நல்லெயில் உடையோர் உடையம் என்னும் |
| பெருந்தகை மறவன் போலக் கொடுங்கழிப் |
5 | பாசடை நெய்தல் பனிநீர்ச் சேர்ப்பன் |
| நாம முதலை நடுங்குபகை அஞ்சான் |
| காமம் பெருமையன் வந்த ஞான்றை |
| அருகா தாகிய வன்கண் நெஞ்சம் |
| நள்ளென் கங்குற் புள்ளொலி கேட்டொறுந் |
10 | தேர்மணித் தெள்ளிசை கொல்லென |
| ஊர்மடி கங்குலுந் துயின்மறந் ததுவே. |
(சொ - ள்.) கொடுங் கழிப் பாசடை நெய்தல் பனி நீர்ச் சேர்ப்பன் - வளைந்த கழியின் கண்ணே பசிய இலைகளையுடைய நெய்தன்மிக்க குளிர்ந்த நீரையுடைய கொண்கன்; நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் காமம் பெருமையின் வந்த ஞான்றை - அச்சஞ் செய்கின்ற முதலையின் நடுக்க முறுத்தும் பகைமைக்கும் அஞ்சானாகிக் காம மிகுதியால் இங்கு வந்தபொழுது; விசும்பு உறழ் புரிசை வெம்பமுற்றிப் பைங்கண் யானை வேந்து புறத்து இறுத்த - விசும்பிலே நீண்டுயர்ந்த மதிலை உள்ளிருப்பவர் நடுங்கும்படி முற்றுகை செய்து பசிய கண்ணையுடைய யானைப் படையொடு பகையரசன் அதன் புறத்தே தங்கப் பெற்றதனால்; நல் எயில் உடையோர் உடையம் என்னும் பெருந்தகை மறவன் போல - அப் பகையரசனை உள்ளே புகுதவிடாதபடி நல்ல மதில்காவலுடையாரை யாம் பெற்றுடையோமென்று கருதியிருக்கின்ற பெருந்தன்மையுடைய உள்ளடைப்பட்டிருந்த வீரனைப்போல; அருகாது ஆகிய வன்கண் நெஞ்சம் - கெடாத வன்கண்மையுடைய என்னெஞ்சமானது இப்பொழுது; நள் என் கங்குல்புள் ஒலி கேள் தொறும் - செறிந்த இருளையுடைய நடுயாமத்திலே பறவையொலிப்பதைக் கேட்குந்தோறும்; தேர் மணித் தெள் இசை கொல் என - நங்காதலன் ஊர்ந்து வருகின்ற தேரிலே கட்டிய மணியின் தெளிந்த ஓசையோ? என்று; ஊர் மடிகங்குலும் துயில் மறந்தது - ஊராரெல்லாரும் உறங்குகின்ற இராப்பொழுதினும் துயில் கொள்வதனை மறந்துளதாயிரா நின்றது; எ - று.
(வி - ம்.) தான் காவலுட்பட்டிருந்தமையை முற்றுகையுட்பட்ட வீரனோடு உவமித்தாள். அவ்வீரன் எயில்காவலரை உடையேமென்றிருத்தல்போல யானுந் தலையளி செய்யுந் தலைவனையுடையேனாயிருந்தேன் அது கழிந்த தென்பாள், இப்பொழுது காவன்மிகுதியாலும் அவன் வாராமையாலும் புள்ளொலி ஓருந்தன்மையாதாகியதென்றாள். புள்ளொலி கேட்டலென்றது, எதிர்பெய்துபரிதல். துயின்மறந்ததென்றது, கண்டுயின் மறுத்தல். ஏனை மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) நல்லெயிலும் அதனைக் காத்தற் றொழில் உடையாரும் உடையம் என உம்மை விரித்துரைப்பினுமாம். யானை வேந்து என்றது, உழிஞை வேந்தனை; பெருந்தகை மறவன் என்றது, நொச்சி மன்னனை என்க.
(287)