திணை : பாலை.

    துறை :(1) இது, தாய் மனைமருண்டு சொல்லியது.

    (து - ம்.) என்பது, களவினொழுகுந் தலைமகன் தலைவியை உடன்கொண்டு சென்றமை செவிலியாலறிந்த ஈன்றதாய் வருந்தி "எம் புதல்வியுடனிருந்த தோழியரை யாம் காணுந்தோறும் நடுங்கி நொந்தொழிதல் போல, எம்மகளை உடன் கொண்டகன்ற காளையாவானை ஈன்ற தாயும் நடுங்கி நொந்தழிவாள் ஆக"வென்று தன் மனையின் கண்ணேயிருந்து மருண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "தன்னும் அவனும் . . . . . போகிய திறத்து நற்றாய்ப் புலம்பலும்" (தொல். அகத். 36) என்னும் விதிகொள்க.

    துறை :(2) அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉமாம்.

    (து - ம்.) என்பது, தலைவனைச் சார்ந்தவரைக் கண்டு சொல்லியதுமாகும். (உரை இரண்டற்கு மொக்கும்.)

    (இ - ம்.) இதுவுமது,

    
மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப் 
    
பலிகள் ஆர்கைப் பார்முது குயவன் 
    
இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து 
    
விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்ப் 
5
பூங்கண் ஆயங் காண்தொறும் எம்போல் 
    
பெருவிதுப் புறுக மாதோ எம்மில் 
    
பொம்மல் ஓதியைத் தன்மொழிக் கொளீஇக் 
    
கொண்டுடன் போக வலித்த 
    
வன்கண் காளையை ஈன்ற தாயே. 

    (சொ - ள்.) மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடிப்பலிகள் ஆர்கைப் பார்முது குயவன் - நீலமணி போலும் பூங்கொத்தினையுடைய நொச்சிமாலையைச் சூடிப் பலிகளிடுதற்கு அமைந்த கையையுடைய பரிய முதிய குயவன்; இடு பலி நுவலும் அகல்தலை மன்றத்து - தன்னால் இடப்படும் பலியை உண்ணுதற்கு அணங்குகளையும் காக்கைகளையும் அழையாநிற்கும் அகன்ற இடத்தையுடைய மன்றத்தின்கண்ணே; விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர் - திருவிழாச் செய்தலை மேற்கொண்ட பழைமையான வெற்றியையுடைய இம் மூதூரிடத்தில்; பூங் கண் ஆயம்காண் தொறும் - எம் புதல்வியுடன் விளையாடும் நெய்தன் மலர் போலும் கண்ணையுடைய தோழியரைக் காணும்போதெல்லாம்; எம்போல் - யாம் பெரிய நடுக்கமுற்றுத் துன்பப்படுவதுபோல; எம் இல் பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ - எம் மனையகத்திருந்த பொலிவு பெற்ற கூந்தலையுடைய எம் புதல்வியை மருட்டிப் பலவாய பொய்ம்மொழிகளைக் கூறி; உடன் கொண்டுபோக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாய் - தன் சொற்படி ஒழுகச் செய்து தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்ற வன்கண்மையுடைய காளையாவானை ஈன்ற தாயும்; பெருவிதுப்பு உறுக - இத்தகைய கொடிய புதல்வனை ஈன்றதனாலே அவள் பெரிய நடுக்கமுற்றுத் துன்பம் அடைந்தொழிவாளாக!; எ - று.

    (வி - ம்.) விதுப்பு - நடுக்கம். பழவிறல் - பழைய வெற்றி. பொம்மல் - பொலிவு. இங்ஙனம் கூறியதனால் தலைவனுக்குத் தாயும் தலைவிக்குத் தாயுமாவார் ஒருவரை ஒருவர் கடிந்து கூறுதல் பண்டைக் காலமுதல் தமிழ்நாட்டில் நிகழும் வழக்குப்போலும். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - ஆற்றுதல்.

    (பெரு - ரை.) 'பலிக்கள்' என்றும் பாடம். இதுவே சிறந்த பாடம். பலிக்கள் ஆர்கை - பலியாகிய கள்ளை யுண்ணுதலையுடைய குயவன் என்க.

(2")