திணை : நெய்தல்.

    துறை :(1) இது, தோழி செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது.

    (து - ம்.) என்பது, தோழி தலைமகனை நெருங்கி 'எம் தலைவியின் களவொழுக்கத்தினை அன்னை யறிந்து அவளை இல்வயிற் செறித்தனள்; இனிக் களவின் இயலாமையால், யாம் எந்நலனழியச் செல்லாநிற்பேம்; நீ வாழிய'வென நொந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    துறை :(2) சிறைப்புறமுமாம்.

    (து - ம்.) என்பது, தலைவன் சிறைப்புறத்தானாக அவன் கேட்பக் கூறியதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)

    (இ - ம்.) இதுவுமது.

    
முரிந்த சிலம்பி னெரிந்த வள்ளியின் 
    
புறனழிந்து ஒலிவருந் தாழிருங் கூந்தல் 
    
ஆயமும் அழுங்கின்று யாயுமஃ தறிந்தனள் 
    
அருங்கடி அயர்ந்தனள் காப்பே எந்தை 
5
வேறுபல் நாட்டிற் கால்தர வந்த 
    
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக் 
    
கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம் 
    
இளநலம் இற்கடை ஒழியச் 
    
சேறும் வாழியோ முதிர்கம் யாமே. 

    (சொ - ள்.) முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் - தலைசரிந்த மலைப்பக்கத்தில் முதலொடு கருகிய வள்ளிக் கொடிபோல; புறன் அழிந்து ஒலிவருந் தாழ் இருங் கூந்தல் ஆயமும் அழுங்கின்று - மேலின் அழகெல்லாம் அழிந்து தழைந்த தாழ்ந்த கரிய கூந்தலையுடைய தோழியர் குழாமும் வருந்தி அழுங்கா நின்றது; அது யாயும் அறிந்தனள் அருங்கடி அயர்ந்தனள் காப்பு - அக் களவொழுக்கத்தை அன்னையும் அறிந்தனளாகி இல்வயிற் செறித்து அரிய காவல் செய்வாளாயினள்!; வேறு பல் நாட்டின் கால் தர வந்த எந்தை பல வினை நாவாய் தோன்றும் பெருந்துறை - ஆதலின் வேறாகிய பலபல தேயங்களினின்றுங் காற்றுச் செலுத்துதலால் வந்த எந்தையினுடைய பலவாய தொழிலின் பொலிவு பெற்ற கலங்கள் ஓங்கித் தோன்றும் பெரிய துறையின் கண்ணே; மடைக்கலி கள்ளின் சாடி அன்னஎம் இளநலம் - வைத்துடைய உண்ணுதலால் செருக்குமிகுகின்ற கள்ளின் சாடி போன்ற எம்முடைய இளமையும் அழகும்; இல்கடை ஒழிய - இல்லின் கண்ணே வைகிக் கெடும்படியாக; யாம் சேரும் - யாங்கள் எம் மனையகத்துச் செல்லாநிற்பேம்; முதிர்கம் - அம் மனைவயினிருந்தே முதிர்ந்து முடிவேம்; வாழி - இன்ன தீங்கினை உறுவித்த நீ நெடுங்காலம் வாழ்வாயாக! எ - று.

    (வி - ம்.) கலி - செருக்கு. மடை - மடுத்தல். சாடி தலைவிக்கும் கள் அவளது நலத்துக்கும் உவமையாகக் கொள்க; இது கிழக்கிடு பொருளாக முதலோடு முதலே வந்த பலவுவமம். வாழிய: இகழ்ச்சிக் குறிப்பு. களவுக் கியலாது என்றமையின் வரைந்தெய்துக என வரைவுகடாயதாயிற்று.

    இளநலம் நீ உண்ணாதவாறு ஒழியவென்றதனால் இனிக் களவுக்கியலாது என்று அறிவுறுத்தினாள். முதிர்கமென்றதனால் நீ வரைந்தெய்தாமையின் முதிர்ந்தொழிவோ மென்று குறிப்பித்தாள். இதனால் தமர் வேற்றுவரைவு படுத்தின் உடன்படாது இறந்தொழிவோ மென்று அறிவுறுத்தினாளுமாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளி எனக் கண்ணழித்து அதற்கேற்பப் பொருள் கூறலுமாம். அஃது என்றது களவொழுக்கத்தை. யாயும் என்ற எச்சவும்மையான் ஊரவர் அறிந்ததல்லாமலும் என்றும் கொள்க. துறையில் வைக்கப்பட்ட கள் கலம் வந்துழி நுகரப்பட்டு எஞ்சிய பொழுதெல்லாம் வாளா வைகுதல் போன்று இவளும் இதுகாறும் நீ வந்துழி நுகரப்பட்டு எஞ்சிய பொழுதெல்லாம் வறிதே கிடப்பாள் என்பாள்; 'பெருந்துறைக் கள்ளின் சாடி அன்ன இவள் நலம்' என்றாள் என்க.

(295)