(து - ம்.) என்பது, தோழி தலைவனை நெருங்கி 'நீ பொருளீட்டிவருக'வென்று தூண்டுதலானே இயைந்த தலைமகன் காதலியையடைந்து ஆங்கு வருந்திய நெஞ்சினை நெருங்கி 'நெஞ்சமே, பொருள் வருவாயினையும் இவள் தோளின் பிரிவினையும் ஒருசேர நினைதலானே, நீ ஒரு வழியினுஞ் சென்றாய் அல்லை; தோழி கூறியபடி பொருள் கொணருமாறு யாம் செல்லின் ஆண்டு இவளை எதிர்காணவுமியையுமோ? இயையுமாயின் நீ சென்று காணென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பண்பிற் பெயர்ப்பினும்" (தொல். கள. 13) என்னும் நூற்பாவின்கண் "ஆற்றிடையுறுதலும்" என்னும் விதியை இரட்டுற மொழிதல் என்னும் உத்தியான் தோழி பொருள் வலிப்பித்து வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவோன் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறியது எனக் கொள்க. இதற்கு கைகோள் - களவென்க. இனி இதனைக் கற்புக் காலத்துப் பொருள்வயிற் பிரிவோன் "வேற்று நாட் டகல்வயின் விழுமம்" (தொல். கற். 5) உற்றுக் கூறிய கூற்றெனினுமாம்.
| வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச் |
| செங்கணை தொடுத்த செயிர்நோக்கு ஆடவர் |
| மடிவாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட |
| எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் |
5 | அருஞ்சுரக் கவலை யஞ்சுவரு நனந்தலைப் |
| பெரும்பல் குன்றம் உள்ளியும் மற்றிவள் |
| கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் ஒருதிறம் |
| பற்றாய் வாழிஎம் நெஞ்சே நற்றார்ப் |
| பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண் |
10 | ஒருமை செப்பிய அருமை வான்முகை |
| இரும்போது கமழுங் கூந்தல் |
| பெருமலை தழீஇயுநோக் கியையுமோ மற்றே. |
(சொ - ள்.) எம் நெஞ்சே - எமது நெஞ்சமே!; வம்ப மாக்கள் வருதிறம் நோக்கி - அயல் நாட்டு மாந்தர் நெறியில் வருகின்ற தன்மையை நோக்கி; செங்கணை தொடுத்த செயிர்நோக்குஆடவர் - அவரைக் கொள்ளை கொள்ளும்பொருட்டுச் சிவந்த அம்பைச் செலுத்திய சினத்தொடு நோக்குகின்ற மறவருடைய; மடி வாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட எருவைச் சேவல் - தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையை முழக்கி எழுப்பும் ஓசையைக்கேட்ட பருந்தின் சேவல்; கிளைவயின் பெயரும் அருஞ்சுரக் கவலை - அச்சமுற்றுத் தன் சுற்றத்திடத்துச் செல்லாநிற்கும் சென்று சேர்தற்கரிய பாலைநிலத்தின்கணுள்ள கவர்த்த வழிகளையுடைய; அஞ்சுவரு நனந்தலைப்பெரும் பல் குன்றம் உள்ளியும் - கருதினவர்க்கு அச்சந்தோன்றுகின்ற அகன்ற இடத்தையுடைய பெரிய பலவாய குன்றுகளைப் பொருள்தேடும் விருப்பினாலே செல்ல நினைந்தும்; இவள் கரும்பு உடைப் பணைத்தோள் நோக்கியும் - இவளுடைய கரும்பு எழுதப்பெற்ற பருத்த தோளைப் பிரிய வேண்டியிருத்தலினால் அதனுக்கஞ்சி்ப் பலமுறை நோக்கியும்; ஒரு திறம் பற்றாய் - நீ ஒரு நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவாயல்லை; நல் தாரப் பொன் தேர்ச்செழியன் கூடல் ஆங்கண் - நல்ல மாலை அணிந்த பொன்னாலாகிய தேரையுடைய பாண்டியனது மதுரையம்பதியிலே; ஒருமை செப்பிய அருமை - இவள் தோழி ஒருதன்மையாகப் பொருள்வயிற் செல்லும்படி உறுதிப்படுத்திக் கூறிய அருமையாகிய மொழியினால்; பெருமலை தழீஇயும் - யாம் பெரிய மலைநெறியைத் தழுவிய பின்னும்; வான்முகை இரும்போது கமழும் கூந்தல் நோக்கு இயையுமோ - வெளிய அரும்பு மலர்ந்த பெரிய மலரின் மணம்வீசும் கூந்தலையுடையாளைப் பார்ப்பதற்கு இயையுமோ? இயையு மாயின் பொருள்வயிற் பிரிந்து சென்று காண்; எ - று.
(வி - ம்.) நோக்க என்பதின் அகரம் தொகுக்கும் வழித்தொக்கது.
இறைச்சி :- எருவைச் சேவல் தண்ணுமை யொலிக்கஞ்சித் தன் சுற்றத்திடத்துப் பெயர்ந்து செல்லா நிற்குமென்றது, யாம் பொருள்வயிற் சென்றாலும் ஈண்டு இவள்படும் ஏதத்தைக் கருதின் அஞ்சி மீண்டெய்துவாம் போலும் என்றதாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாகப் பிறந்த அவலம். பயன் - இல்லத்தழுங்கல்.
(பெரு - ரை.) மலை தழுவிய பின்னரும் கூந்தலை யுடையாளை நோக்குதல் பொருந்துமோ என்று நெஞ்சைக் கடிந்தான் எனினுமாம். எனவே குன்றம் உள்ளுதலொழி இன்றேல் தோள் நோக்குதல் ஒழி இவற்றுள் ஒரு திறமே பற்றுக என்றானாம்.
(298)