(வி - ம்.) உயவு-வருத்தம். கட்டளை - பொன்னுரைக்குங் கல். சுரன்முதல்-சுரத்தினிடத்தில்; முதல்: ஏழனுருபு, படர்தல்-நினைத்தல்.
வெப்பத்தால் இலைதழைக்காது கருகுதலிற் புள்ளி போன்ற நிழலாயிற்று. ஏரால் உழுதுண்பார் போல வில்லால் ஆறலைத்துண்ணலின் வில்லேர் உழவ ரென்றார். வேம்பின் நீழற் சிறார் வட்டாடுஞ் சீறூரென்க. முன்பு பொருள் செயல் வினையை முடித்துப் பெற்ற மகிழ்ச்சியனாதலின் வினைமுடித்தன்ன வினியோளென்றான். இதனானே அம் மகிழ்ச்சி இவளை நோக்குழியேபெறக் கிடத்தலிற் பொருளை நச்சிவாரேனெனவுங் குறிப்பித்தானாயிற்று. அங்ஙனமாக என்பது முதற் குறிப்பெச்சம்.
இறைச்சிப்பொருள் :- பருந்து வருந்தியிருக்கும் வேம்பின் நிழலில் அப்பருந்தின் வருத்தத்தை ஏறிட்டு நோக்காது, சிறார் நெல்லிவட்டாடி மகிழா நிற்பர் என்றது, யான் இவளைப் பிரிதலால் வருந் துன்பத்திற்கஞ்சி வருந்தவும் அதனைக் கருதாத என்னெஞ்சே! நீ பொருள்மேற்சென்று மீளும் மகிழ்ச்சியை உடையையாயிரா நின்றாய் என்பதாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல். இதனை இத்துறையிலேயே அடக்கினார் நச்சினார்க்கினியர்; (தொல்-பொ-சூ- 43 உரை.)
(பெரு - ரை..) கட்டளையன்ன இட்டரங்கு என்றும் பாடம். வட்டினாலே கீறி என்னும் உரை பொருந்தாது. வட்டு நெல்லிக்காயே ஆதலின் அதனால் அரங்கு கீறுதல் அமையாமையும் உணர்க. இட்டரங்கு - சிறிய வகுப்பறைகளையுடைய அரங்கு என்க. உள்ளினென் அல்லெனோ என்றும் பாடம்.
இச்செய்யுளின்கண் தலைவன் முன்னிகழ்ந்த நிகழ்ச்சியை நினைந்து செலவழுங்கினமையின் இதனை, “நிகழ்ந்தது நினைத்தற் கேதுவுமாகும்.” (தொல்-அகத்- 43) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக் காட்டினர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.
(3)