திணை : நெய்தல்.

    துறை : (1) இது, வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைவன்மீதுண்டாகிய காதலானது கைகடந்து பெருக அது தாங்க இயலாத தலைவி தோழியை நெருங்கி நாம் துயரமடைதல் போல நம் கொண்கனும் துன்பமெய்தி, 'நள்ளிரவினும் நம் காதலி துயிலாளாய் வருந்துவளோ' என்று தன் நெஞ்சிலே கருதுவதுண்டாகுமோ, ஆகும் எனில் ஒன்று கூறுவாயாகவென்று அழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதியாற் கொள்க.

    துறை : (2) சிறைப்புறத்தானென்பது மலிந்ததூஉமாம்.

    (து - ம்.) என்பது, தலைமகன் ஒருசிறைவந்து உறைவதனை அறிந்த தோழி சொல்லியதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)

    (இ - ம்.) இதற்கு, "நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
ஒலியவிந்து அடங்கி யாமம் நள்ளெனக் 
    
கலிகெழு பாக்கம் துயின்மடிந் தன்றே 
    
தொன்றுஉறை கடவுள் சேர்ந்த பராரை 
    
மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத்  
5
துணைபுணர் அன்றில் உயவுக்குரல் கேட்டொறும் 
    
துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய் 
    
நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது 
    
உண்டுகொல் வாழி தோழி தெண்கடல் 
    
வன்கைப் பரதவர் இட்ட செங்கோல் 
10
கொடுமுடி அவ்வலை பரியப் போகிக் 
    
கடுமுரண் எறிசுறா வழங்கும் 
    
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத் தானே. 

    (சொ - ள்.) தோழி வாழி - தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக; ஒலி அவிந்து அடங்கி யாமம் நள் என - ஊர் ஓசையவிந்து அடங்கி இரவு நடுயாம மாகலும்; கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்று - கட்குடியின் செருக்கு அடங்கிப் பாக்கமும் துயிலா நின்றதே இப்பொழுது நம் காதலனை நினைந்து நாம் வருந்துதல் போல; தெள் கடல் வன்கைப் பரதவர் இட்ட செங்கோல் கொடுமுடி அவ் வலை - தெளிந்த கடலின்கண்ணே வலிய கையையுடைய பரதவ மாக்கள் மீன் பிடித்தற்கு நெடுக இட்ட சிவந்த நிறத்தையும் வலித்துக் கட்டிய முடியையும் உடைய அழகிய வலை; பரியப்போகிக் கடு முரண் எறி சுறா வழங்கும் - பீறுபடக் கிழித்துச் சென்று அச்சத்தைச் செய்யும் வலிமையுடைய தன் மருப்பினாற் கொல்ல வல்ல சுறாமீன் இயங்கா நிற்கும்; நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தான் - நீண்ட நீர்த்துறையுடைய தலைவனது உள்ளத்திலும்; தொன்று உறைகடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்குமடல் குடம்பைத் துணை புணர் அன்றில் - பண்டு தொட்டு உறைகின்ற கடவுள் தங்கப்பெற்ற பருத்த அடியையுடைய ஊர்ப்பொதுவிலுள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின் கண் இருந்து தன் பெடையைப் புணர்கின்ற மகன்றிலின்; உயவுக்குரல் கேள் தொறும் - வருத்தந்தரும் குரலைக் கேட்குந்தோறும்; நல்நுதல் துஞ்சாக் கண்ணள் துயர் அட - நல்ல நுதலினையுடைய நம் காதலி கண் உறங்காது காமநோய் வருத்துதலானே; சாஅய் நம் வயின் வருந்தும் என்பது உண்டுகொல் - உடம்பு மெலிந்து நம்மீது வருத்தமடையாநிற்பள் என்பதும் உண்டாகுமோ? ஆராய்ந்து கூறாய், எ - று.

    (வி - ம்.) மன்றப்பெண்ணை - ஊர்ப்பொதுப்பனை. தம் குலதெய்வத்தையும் ஊர்ப் பொதுத் தெய்வத்தையும் பனையிலேற்றுவித்து வணங்கிவருவது தொன்றுதொட்டு வரும் நெய்தல் நிலத்து வழக்கு.

    உசாவுவாருண்டாயவிடத்துச் சிறிதாற்றலாமெனினும், அதுவும் இல்லாதபடி பாக்கந் துயில்மடிந்ததேயென்று இரங்கினாள்.

    உள்ளுறை :- பரதவரிட்ட வலையைக் கிழித்துச்சென்று சுறா இயங்கும் என்றது, நாம் நமது அன்பினாலே பிணிக்கவும் தலைவன் அதனை இகந்து சென்று வைகாநின்றானென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) சேர்ப்பன் நெஞ்சத்தும் நன்னுதல் நம் வயின் வருந்தும் என்பது உண்டு கொல்? என இயைத்துக்கொள்க, 'பரியப்போகி' என்றும் பாடம்.

(303)