திணை : குறிஞ்சி.

    துறை : (1)இது, புனமடிவுரைத்துச் செறிப்பறிவுறீஇயது.

    (து - ம்.) என்பது, தலைமகன் ஒருபுறமாக வந்து மறைந்துறைதலை அறிந்த தோழி, புனங்கொய்தலையும் தலைமகளை இல்வயிற்செறிப்பதனையும் அவன் அறிந்து விரைய மணம் புரிந்து கொள்ளும்படி கூறுவாளாகி நமர் தினைப்புனங் கொய்யலுறாநின்றனர்; அன்றி, இறைவியையும் மனையகங்கொண்டு புகுவாராயினார்; இனி, அவளை நமது புனத்தின் கண்ணே காணவும் இயையாதேயென நொந்துகூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    துறை : (2) சிறைப்புறமுமாம்.

    (து - ம்.) என்பது, தலைமகன் சிறைப்புறத்தானாகக் கூறியதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)

    (இ - ம்.) இதுவுமது.

    
தந்தை வித்திய மென்தினை பைபயச் 
    
சிறுகிளி கடிதல் பிறக்கியா வணதோ  
    
குளிர்படு கையள் கொடிச்சி செல்கென 
    
நல்ல இனிய கூறி மெல்லக் 
5
கொயல்தொடங் கினரே கானவர் கொடுங்குரல் 
    
குலவுப்பொறை இறுத்த கோல்தலை இருவி 
    
விழவொழி வியன்களங் கடுப்பத் தெறுவரப் 
    
பைதல் ஒருநிலை காண வைகல் 
    
யாங்கு வருவது கொல்லோ தீஞ்சொல் 
10
செறிதோட்டு எல்வளைக் குறுமகள் 
    
சிறுபுனத்து அல்கிய பெரும்புற நிலையே. 

    (சொ - ள்.) குளிர்படு கையள் கொடிச்சி செல்க என நல்ல இனிய கூறி - 'கிளிகடி கருவி பொருந்திய கையையுடைய கொடிச்சியே! நீ மனையகம் புகுவாயாக!' என்று நல்ல இனிய மொழிகளை மொழிந்து; கானவர் மெல்லக் கொயல் தொடங்கினர் - கானவர் மெல்லத் தினைக் கதிரைக் கொய்யத் தொடங்கினர்; தந்தை வித்திய மெல் தினை பைபயச் சிறுகிளி கடிதல் யாவணது - ஆதலின் எம் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்துகொண்டு போமாறு மெல்ல மெல்ல வருகின்ற சிறிய கிளிகளை வெருட்டுதல் இனி எப்படியாகும்?; கொடுங்குரல் குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி விழவு ஒழி வியன்களம் கடுப்பத் தெறுவரப் பைதல் ஒரு நிலை - அங்ஙனம் வளைந்த கதிர்களாகிய குலவிய பொறையைக் கொய்தொழித்த கொம்பாகிய தலையுடைய தினைத்தாள்கள்தாம் திருவிழாச் செய்தொழிந்த அகன்ற அவ் விழாக்களம் போலப் பொலிவழிந்து எம்மை வருத்தாநிற்கையில் இவ் வண்ணம் கொல்லை அழிந்த தன்மையையும்; தீம் சொல் செறி தோட்டு எல் வளைக் குறுமகள் - இனிய சொல்லும் நெருங்கிய தொகுதியான ஒளி பொருந்திய வளையுமுடைய இளமையுற்ற எங்கள் தலைமகள்; சிறு புனத்து அல்கிய பெரும் புறநிலையே - முன்பு சிறிய தினைப் புனத்துப் பெரிய மேற்கூரை உடைய கட்டுப் பரணிலே நின்ற நிலைமையையும்; காண வைகல் யாங்கு வருவது கொல் - பார்க்கும் பொருட்டுக் காலையிலே தலைமகன் எப்படி வருதல் இயையுமோ? இயையாதே! எ - று.

    (வி - ம்.) பிறக்கு : அசைநிலை. பொறை - பாரம். இருவி - தினைத்தாள்.

கிளியோப்புதலில்லையாதலின் இனிப் புனத்து வந்து பகற்குறி கூடவும் இயையாதேயென்பாள், யாவணதென்றாள். செல்கவென்பதனால் இற்செறிப்பு அறுவுறுத்தினாள். இங்ஙனங் கூறவே வரைந்து கொள்கவென அறிவுறுத்தினாளுமாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) பைதல் ஒரு நிலையையும் பெரும்புற நிலையையும் காண யாங்கு வருவது கொல் என இயைத்துக் கொள்க. பைதல் ஒரு நிலை - துன்பத்திற்குக் காரணமான ஒரு நிலைமை. 'சூற்பொறை இறுத்த', என்றும் பாடம். இனி, குறுமகள் அல்கிய பெரும்புற நிலையாகிய உவ்விடத்தே குரற்பொறை இறுத்த இருவி தெறுவரப் பைதல் ஒரு நிலையைக் காண யாங்கு வருவதுகொல் என்றியைத்தலே நேரிதாம். தலைவி நின்ற நிலைக்கண் இருவி நிற்றலையே காணவியலும்; அவளை இற்செறிப்பர் என்றுணர்த்தியபடியாம்.

(306)