(து - ம்.) என்பது, பொருள்வயிற்பிரியுமாறு கருதிய தலைமகன் தலைமகள்பால் நெருங்குதலும் இவனது பிரிவின் குறிப்பறிந்த அவள் வருந்தி இவன்மீது சாய்ந்து கலங்கி வருந்துவதறிந்து இவ்வண்ணம் என்மேலழிந்து சாய்தலால் என்னுள்ளம் பிரிதலையொழித்து இவள்பால் முயங்கியுறையா நின்றது, இனிப் பொருளால் ஆவதென்னென்று செலவழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| செலவிரை வுற்ற அரவம் போற்றி |
| மலரேர் உண்கண் பனிவர ஆயிழை |
| யாம்தற் கரையவும் நாணினள் வருவோள் |
| வேண்டா மையின் மென்மெல வந்து |
5 | வினவலுந் தகைத்தலுஞ் செல்லா ளாகி |
| வெறிகமழ் துறுமுடி தயங்க நல்வினைப் |
| பொறியழி பாவையிற் கலங்கி நெடிதுநினைந்து |
| ஆகம் அடைதந் தோளே அதுகண்டு |
| ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம் |
10 | பெருமழைப் பெயற்கேற் றாங்கெம் |
| பொருண்மலி நெஞ்சம் புணர்ந்துவந் தன்றே. |
(சொ - ள்.) ஆய்இழை - ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி; செல விரைவு உற்ற அரவம் போற்றி - நாம் பொருள்வயிற் பிரிந்து செல்லுதலின் விரைவால் உண்டாகிய சொல்லை விரும்பிக் கேட்டு; மலர் ஏர் உண்கண் பனிவர - குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணில் நீரை வடியவிடுதலும்; யாம் தன் கரையவும் நாணினள் வருவோள் - அதனை யாம் அறிந்து இஃதென்னென்று அவளைப் பலபடியாகப் பாராட்டி வினாவவும் அதற்கு விடை கூற நாணினளாகி வருபவள்; வேண்டாமையின் மெல் மெல வந்து வினவலும் தகைத்தலுஞ் செல்லாளாகி - யாம் பிரிதலில் விருப்பம் இன்றி மெல்ல மெல்ல வந்து நீ எங்கே போகின்றனை யென்று வினவாமலும் போகலை என்று தடாமலும் இருக்குந் தன்மையளாய்; வெறி கமழ் துறுமுடி தயங்க நல்வினைப் பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து ஆகம் அடைதந்தோள் - மணங் கமழ்கின்ற நெருங்கிய குழல் முடியாகிய கொண்டை விளங்க நல்ல சித்திரத் தொழிலமைந்து இயக்கும் இயந்திர மற்றழிந்த பாவை ஒன்று எம்மீது விழுந்தாற்போலக் கலங்கி நெடும் பொழுது நினைந்து நின்று பின்பு எம்முடம்பின் மீது சாய்ந்து விழுந்தனள்; அதுகண்டு ஈர்மண் செய்கை நீர்படு பசுங் கலம் பெருமழைப் பெயற்கு ஏற்று ஆங்கு - அவ்வண்ணம் விழுதலும் அதனை நோக்கிய ஈரிய மண்ணாற் செய்யப்பட்டு ஈரங்காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அஃது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழியுமன்றே அப்படிப் போல; பொருள் மலி எம் நெஞ்சம் புணர்ந்து உவந்தன்று - பொருள்வயிற் பிரியக் கருதிய எமது நெஞ்சம் அவளுடன் ஒன்றுபட்டுக் கரைந்து வேறுபாடின்றி அடங்கிற்றுமன், ஆதலின் இனிப் பிரிவதுதான் எவ் வண்ணமாகும்? எ - று.
(வி - ம்.) இதனுள் ஆயிழை போற்றி நாணிவந்து செல்லாளாகித் தயங்கக் கலங்கி நினைந்து அடைந்தோளென வினையெச்ச அடுக்காகக் கொண்டு எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே கிடந்து பயனிலையை விசேடிக்கும் எச்சங்கள் உள்ளே ஒன்றனை முற்றாகக்கொண்டு திரித்துப் பாலும் இடமுங்காட்டி நிற்பச் செய்யுள் செய்தமை அறிக. தகைத்தலுஞ் செல்லாள்; ஒரு சொல்லாகக் கொள்க.
தான் அன்பின் மிகுதியாற் பாராட்டினதுகண்டு நாணினமையின் அதனைக் கூறுவான்போன்று தன் அன்பைப் புலப்படுத்தினான். பாவையிற் கலங்கி ஆகமடைதந்தோளென அவளது அன்பின்மிகுதியும் அவட்குத் தானின்றியமையாமையுங் கூறினான். இருவரும் அன்பின் மேலீட்டினாற் கலந்து மகிழ்வதனினும் பொருள் சிறப்பிலதென்பான் 'பொருள்மலி நெஞ்சம் புணர்ந்துவந் தன்று' என்றான். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.
(பெரு - ரை.) இச் செய்யுட்கு ஆயிழை யாம் விரைவுற்ற அரவத்தை ஓர்ந்து தன் கண் நீர்வர நிற்றல் கண்டு யாம் அவளை ஆற்றுவித்தற் பொருட்டு அவளை அழைப்ப, அவள் நாணி எம்பால் வருகின்றவள்; எம்முடைய பிரிவை விரும்பாமையால் மென்மெல வந்து எம்மை ஏதும் வினவலும் தடைசெய்தலுஞ் செய்யாளாய்ப் பொறியழி பாவையிற் கலங்கி நினைந்து எம் ஆகத்தைத் தழீஇக் கொண்டனள்; அதுகண்டு எம் நெஞ்சம் புணர்ந்து உவந்தது; இனி யாம் எங்ஙனம் பிரிதலாற்றுவேம்? என்று பொருள்கோடல் நேரிதாம்.
(308)