திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரைவுநீட ஆற்றாளெனக் கவன்று தான் ஆற்றாள் ஆகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.

    (து - ம். ) என்பது, தலைவன் மணஞ்செய்துகொள்ள நீட்டித்தலானே தலைமகள் வருந்துவளே என்று கவலைகொண்டு தோழி ஆற்றாதிருத்தலை அறிந்த தலைமகள், அவளை நெருங்கி நின்னால் எனக்குத் தீங்குவந்ததென்று அழாதேகொள்; அவனது கேண்மை நமக்குத் துன்பமுடைத்தென நீ கூறாநிற்பை; அவருடைய நட்பினியல்பை நன்றாக அறிந்துள்ளேனாதலின் யான் பொறையொடு உறைவேனென அவள் தெளியும்படி கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "உயிரினும் சிறந்தன்று நாணே . . . . .ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே" (தொல். கள. 22) என்னும் நூற்பாவின்கண் பிற என்பதனால் அமைத்துக் கொள்க.

    
நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் 
    
தளிர்வனப்பு இழந்தஎன் நிறனும் நோக்கி 
    
யான்செய் தன்றிவள் துயரென அன்பின் 
    
ஆழல் வாழி தோழி வாழைக்  
5
கொழுமடல் அகலிலைத் தளிதலைக் கலாவும் 
    
பெருமலை நாடன் கேண்மை நமக்கே 
    
விழுமம் ஆக அறியுநர் இன்றெனக் 
    
கூறுவை மன்னோ நீயே 
    
தேறுவன் மன்யான் அவருடை நட்பே. 

    (சொ - ள்.) தோழி நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி - தோழீ! தளர்வடைந்த தோளையும் வாட்டமுற்ற இரேகையையும் மாந்தளிரின் தன்மை போன்ற அழகு இழந்த எனது நிறத்தையும் நோக்கி; யான் இவள் துயர் செய்தன்று என - 'என்னால் இவளுக்கு இத் துயர் செய்யப்பட்டது' என்று கூறி; அன்பின் ஆழல் - என்பாலுள்ள அன்பின் மிகுதியினால் நீ அழாதே கொள்!; வாழி - நெடுங்காலம் வாழ்வாயாக!; வாழைக் கொழுமடல் அகல் இலைத் தலை தளிக் கலாவும் பெரு மலைநாடன் கேண்மை - வாழையின் கொழுவிய மடலகன்ற கட்டைக் குருத்தாகிய இலையிலே தாற்றினுள்ள இனிய நீர் கலந்து தங்கியிருக்கும் பெரிய மலை நாடனுடைய நட்பானது; நமக்கு விழுமம் ஆக அறியுநர் இன்று என நீ கூறுவை - நமக்குத் துன்பமாயிருக்கவும் அதனை அறிபவர் இல்லையே என்று கூறாநிற்பை; மன்னோ அவருடை நட்பு யான் தேறுவன் மன் - ஐயோ! அவருடைய நட்பை நான் மிக நன்றாகத் தெளிந்திருக்கின்றேனாதலால் ஆற்றியிருப்பேன் காண்! எ - று.

    (வி - ம்.) வரி - இரேகை. கலாவும் - கலக்கும். செய்தன்று - செய்தது.

    தலைமகன் பிரிந்ததனைக் கருதி ஏக்கமடைந்ததனால் தோள் நெகிழ்ச்சியும் இரேகையின் வாட்டமும் மேனியதழிவும் கண்ட தோழி முன்பு தான் மதியுடம்பட்டதன் நிமித்தம் இப்பொழுது இவளுக்கு இத்தீங்கு நேர்ந்தது எனக் கவன்றனளாதலின், இவள் துயர் யான் செய்ததென ஆழலென்றாள் தலைவன் பிரியும்பொழுதெல்லாம் கூறிய வாய்மை பிறழாது குறித்த பருவத்து வருவதனால் அவர் நட்பை யான் தெளிவேனென்றாள். தோழி வருந்திக் கூறலின் நாடன் என ஒருமையாகவும் தலைவி தலைவனை உயர்த்திக் கூறலின் அவர் எனப் பன்மை யாகவுங் கூறியதாம்.

    உள்ளுறை :- வாழைமடலிலே நீர் தங்கிக் கலந்திருக்குமென்றது, என் உள்ளத்தில் எப்பொழுதும் அவர் தங்கிக் கலந்திருப்பராதலால் யான் வருந்தேனென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தோழியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) ஞெகிழ்ந்தோளும் என்றும், தளிர் வனப்பிழந்த நின்றிறனும் நோக்கி என்றும் 'யாஞ் செய்வதன்றிவடுயரென' என்றும் பாடவேறுபாடுண்டு, அகலிலை : வினைத்தொகை. அவருடைய நட்பு

  
"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று 
  
 நீரினும் ஆரளவின்று"                    (குறுந். 3) 

ஆதலால் அவர் தேற்றமாக நம்மை அளிப்பர் ஆதலால் யான் ஆற்றியிருப்பல்; நீ வருந்தற்க என்றவாறு.

(309)