(து - ம்.) என்பது, பொருள்வயிற் பிரியுந் தலைமகன் தன்னெஞ்சினை நெருங்கி 'நெஞ்சமே! அருகில் நாம் முயங்கியுறையுங் கோடைநாளிலேயும் நடுங்கும் நம் காதலி கார்முதலாய நான்கு பருவங்களிலும் என்னபாடு படுவளோ என்று யான் வருந்துகின்றே'னென நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| நோகோ யானே நோம்என் நெஞ்சே |
| பனிப்புதல் ஈங்கை அங்குழை வருடச் |
| சிறைகுவிந் திருந்த பைதல்வெண் குருகு |
| பார்வை வேட்டுவன் காழ்களைந் தருள |
5 | மாரி நின்ற மையல் அற்சிரம் |
| அமர்ந்தனள் உழையம் ஆகவுந் தானே |
| எதிர்த்த தித்தி முற்றா முலையள் |
| கோடைத் திங்களும் பனிப்போள் |
| வாடைப் பெரும்பனிக் கென்னள்கொல் எனவே. |
(சொ - ள்.) நோம் என் நெஞ்சே - பொருளீட்டுமாறு யான் உடன்பட்டு நின்னொடு வந்திலேன் என்று நொந்து கொள்ளுகின்ற என் நெஞ்சமே!; எதிர்த்த தித்தி முற்றா முலையள் உழையம் ஆகவும் கோடைத் திங்களும் பனிப்போள் - மேலேறிப் படரும் தேமலையும் முற்றாத இளைய கொங்கையையும் உடையவளாகிய நங் காதலி அவளருகினின்றும் பிரியாது நாம் இருந்தேமாகவும் மயங்கினளாய்க் கோடைத்திங்களிலும் நடுங்குபவள்; பனிப் புதல் ஈங்கை அம் குழை வருடச் சிறை குவிந்து இருந்த பைதல் வெண்குருகு பார்வை வேட்டுவன் காழ்களைந்து அருள நின்ற மாரி - குளிர்ந்த புதரினுள்ள இண்டின் அழகிய குழை முதுகைத் தடவிக் கொடுப்பத் தன் சிறகு குவிந்திருந்த வருத்த மிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் காற்கட்டை அவிழ்த்துவிட நின்ற கார்காலத்திலும்; மையல் அற்சிரம் - பகல் இரவு என அறியாவாறு மயங்கிக் கிடத்தலையுடைய கூதிர்க்காலத்திலும்; வாடைப் பெரும்பனிக்கு - வாடைக்காற்றொடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும் பின்பனிப் பருவத்திலும்; அமர்ந்தனள் என்னள் கொல் - தமியளாயிருந்து என்ன பாடு படுவளோ? என்று; யான் நோகு - யான் நோவா நின்றேன்; எனது நோயின் தன்மையறியாது நீ புலக்கின்றனை! ஈதொரு வியப்பிருந்தவாறு நன்று; எ - று.
(வி - ம்.) அற்சிரம் - கூதிர்ப்பருவம். பனியெனப் பொதுப்படக் கூறினமையின் முன்பனி, பின்பனியாகிய இருவகைப் பருவமுங்கொள்க. காழ் - பிணிப்பு. உழையம் : நெஞ்சையுளப்படுத்தியது.
உள்ளுறை:- வேட்டுவனாலே பார்வையாகக் களைந்து வைக்கப்பட்ட குருகு இண்டங்குழை வருடப் பைதலவாய், மாறி நிற்குமென்றது, நம்மால் இல்லின்கண் வைகுமாறு விடப்பட்ட தலைவி வருந்தித் தோழி தேற்ற மாரிக்காலத்தைக் கழியா நிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட் டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.
(பெரு - ரை.) வாடைப் பெரும்பனிக்கு அமர்ந்தனள் என்னள் கொல் என இயைத்துக் கொள்க. அற்சிரக் காலையிலே வீசும் வாடைப் பெரும்பனிக்கு என இயைத்தலுமாம். அற்சிரம் பனிப் பருவமுமாம். என்னை? "வெண்மழை யரிதிற் றோன்றும் அச்சிரக்காலை" சிலப் - ஊர் காண் - 105 என்பவாகலின் இனி, "அற்சிரம் யாந்தன் னுழையமாகவும்" என்றும் பாடம்.
(312)