திணை : பாலை.

     துறை : இது, பிரிவுணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.

     (து - ம்,) என்பது, களவொழுக்கத்துக் கொண்டுதலைக்கழிந்து தன்மனை வரைந்துகொண்ட தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் தோழிக் குணர்த்த அவள் 'ஐயனே! அன்று நாம் ஓமை நிழலிலிருக்கும் பொழுது களிற்றியானை பிளிற்றியதை வேறாக வுணர்ந்து பிடியானை புலம்பிய குரலை நினைத்தலுஞ் செய்வீரோ? அந் நெறியில் எங்ஙனஞ் செல்வீ''ரென்பாள் போன்று பிரிவினாலே தலைவிபடுந் துன்பத்தைக் குறிப்பித்து மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பிரியுங் காலை எதிர் நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
நினைத்தலும் நினைதிரோ ஐய அன்றுநாம் 
    
1 பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த 
    
பொருந்தாப் புகர்நிழல் இருந்தன மாக 
    
நடுக்கஞ் செய்யாது நண்ணுவழித் தோன்றி 
5
ஒடித்துமிசை கொண்ட ஓங்குமருப்பு யானை 
    
பொறிபடு தடக்கை சுருக்கிப் பிறிதோர் 
    
அறியிடை இட்ட அளவைக்கு வேறுணர்ந்து 
    
என்றூழ் விடரகம் சிலம்பப் 
    
புன்தலை மடப்பிடி புலம்பிய குரலே. 

     (சொ - ள்.) ஐய அன்று நாம் பணைத் தாள் ஓமைப் படுசினை பயந்த பொருந்தாப் புகர்நிழல் இருந்தனம் ஆக - ஐயனே! அன்று நாம் பருத்த அடியையுடைய ஓமை மரத்தின் தாழ்ந்த கிளையிலுண்டாகிய இலை தீய்ந்தமையாலே பொருந்தாத புள்ளி பட்ட நிழலின்கண்ணே இருந்தேமாக; நடுக்கஞ் செய்யாது நண்ணுவழித் தோன்றி ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை - அப்பொழுது நம்மை நடுக்கப்படுத்தாது தான் அடையுமிடத்தில் வந்து தழையை ஒடித்துத் தின்னுதல் கொண்ட உயர்ந்த தந்தத்தையுடைய யானை; பொறி படு தடக் கை சுருக்கிப் பிறிது ஓர் அறி இடை இட்ட அளவைக்கு - தன் புள்ளியையுடைய நீண்ட கையைச் சுருட்டித் தூக்கி வேறொன்றனை அறிகின்றதன் காரணமாக இடையீடுபட்டுப் பிளிற்றியவுடன்; வேறு உணர்ந்து என்றூழ் விடர் அகம்சிலம்ப - அதனை வேறாக வுணர்ந்து வெயில் பரவிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; புன் தலை மடப்பிடி புலம்பிய குரல் - புல்லிய தலையையுடைய இளைய பிடியானை புலம்பிய குரலைக் கேட்டிருந்தீரன்றோ?; நினைத்தலும் நினைதிரோ? - அதனை நினைத்தலும் செய்வீரோ? செய்வீராயின் கொடிய சுரநெறியில் ஏகாதிருத்தலுடன் இவளைப் பிரியத் தக்கீருமல்லீர்; எ - று.

     (வி - ம்.) படுசினை - தாழ்ந்த கிளை. வேறுணர்தல் - புலியொடு பொருததோவென உணர்தல். புன்தலை - மெல்லிய தலையுமாம்.

     இறைச்சி:- களிறு வேறொன்றனைக் கருதித் தாழ்த்தமையால் அதனை மாறுபாடாக வுணர்ந்து பிடியானை புலம்புமென்றது, நீயிர் சென்ற இடத்துத் தாழ்ப்பின் இவள் புலம்பி இறந்துபடும் என்றதாம்.

     மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.

     (பெரு - ரை.) வேறுணர்தல் - பிறிதொரு பிடியை உள்ளித் தன்னைப் பிரிந்து செல்ல முயல்கின்றதோ என்று கருதி என்னல் சிறப்பு. அறி - அறிவு. பிறிது அறிவு இடையிடுதலாவது, மற்றொன்றனைக் கருத்திற் கோடல். "பிறிதோர் ஆறு இடையிட்ட அளவை" என்றும் பாடம். இஃதே சிறந்த பாடமுமாம். இதற்கு மிசைக் கொண்ட யானை அத்தொழிலைவிட்டுப் பிறிதொரு வழியிற் செல்லத் தொடங்கிய அளவிலே என்க.

(318)
  
 (பாடம்) 1. 
பனைத்தாள் ஓமை.