சேந்தன் கொற்றனார்
     திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் களவொழுக்க மேற்கொண்டு சிறைப்புறமாக வந்திருப்பதையறிந்த தோழி, - அவன் கேட்டு உள்ளுறையால் விரைவிலே பொருளீட்டிவந்து வரைந்துகொள்ளுமாறு தலைவியை நெருங்கித் தோழீ! நாடனது மார்பைப் பெறாமையாலாகிய வேறுபாட்டையறிந்த அன்னை முருகணங்கென்று வெறியெடுத்தலும் அங்கெய்திய வேலன் இடுகின்ற பலியால் இவ்வேறுபாடு நீங்குமாயின் இதனினுங் கொடியதொன்றில்லை கண்டாய்: அங்ஙனம் நிகழ்வது உண்மைதானோ ஒன்றுகூறாயென்று கவன்று கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

     துறை : (2) தலைமகன் பாங்கிக் குரைத்ததூஉமாம்.

     (து - ம்,) என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்குமொக்கும்.)

     (இ - ம்.) இதற்கு, "வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
ஆங்ஙனந் தணிகுவது ஆயின் யாங்கும் 
    
இதனிற் கொடியது பிறிதொன் றில்லை 
    
வாய்கொல் வாழி தோழி வேயுயர்ந்து 
    
எறிந்துசெறித் தன்ன பிணங்கரில் விடர்முகை 
5
ஊன்தின் பிணவின் உட்குபசி களைஇயர் 
    
ஆளியங்கு அரும்புழை ஒற்றி வாள்வரிக் 
    
கடுங்கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் 
    
தண்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது 
    
நன்னுதற் பசந்த படர்மலி அருநோய் 
10
அணங்கென உணரக் கூறி வேலன் 
    
இன்னியங் கறங்கப் பாடிப் 
    
பன்மலர் சிதறியர் பரவுறு பலிக்கே. 

     (சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; வேய் உயர்ந்து எறிந்து செறித்துஅன்ன பிணங்கு அரில் விடர் முகை - மூங்கில் உயர்ந்து வளரப்பெற்று இடையே வெட்டி நெருக்கி வைத்தாற்போன்ற பின்னிய புதர்களையுடைய மலைப் பிளப்பை அடுத்த துறுகல்லிடத்து; ஊன் தின் பிணவின் உட்கு பசி களைஇயர் - ஊனைத் தின்னுகின்ற பெண்புலிக்கு உளதாகிய அஞ்சத்தக்க பசிையைப் போக்க வேண்டி; ஆள் இயங்கு அரும்புழை ஒற்றி வாள் வரிக் கடுங் கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் - மக்கள் இயங்குகின்ற நுழைதற்கரிய சிறுவழியை யடுத்து வாள் போன்ற கோடுகளையும் கொடிய கண்ணையுமுடைய வலிய ஆண்புலி பதுங்கியிருக்கும் மலைநாடனது; தண் கமழ் வியன் மார்பு உரிதினில் பெறாது நல் நுதல் பசந்த படர்மலி அருநோய் - தண்ணிதாய்க் கமழ்கின்ற அகன்ற மார்பை உரிமையாகப் பெறாமையால் உண்டாகிய நல்ல நுதலிலே பசப்பெய்திய நினைத்தல் மிக்க நீங்குதற்கரிய இந் நோய்; அணங்கு என உணரக் கூறி - முருகவேள் அணங்கியதால் உளதாயிற்றென்று அன்னை அறியும்படி சொல்லி; வேலன் இன் இயம் கறங்கப் பாடி - படிமத்தான் (பூசாரி) தனது துடி முதலாய வாச்சியம் ஒலிக்கப் பாடி; பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கு - பலவாய பூக்களைத் தூவித் துதித்து 'இவ் யாட்டினை ஏற்றுக்கொள்' ளென்று, அதனை அறுத்துக் கொடுக்கும் பலிக்காக; ஆங்ஙனம் தணிகுவது ஆயின் - அவ்வண்ணம் இந் நோய் தணிவதாயினோ; யாங்கும் இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை - எவ்விடத்தும் இதனினுங் காட்டில் கொடியது பிறிதொன்று இல்லை கண்டாய்; வாய்கொல் - அவ்வண்ணம் தணியு மென்பது மெய்ம்மைதானோ? ஆமாயிற் கூறுவாய்; எ-று.

     (வி - ம்.) வாய் - உண்மை. புழை - நுழைவழி. ஒற்றுதல் - அடுத்தல்.

     உரிமையிற் பெறாததனாலே பசலைநோய் தோன்றியதென்பாள் வரைந்து உரிமையிற் பெறுமாறு அறிவுறுத்தினாள். நீடிப்பின் அன்னை வெறியெடுப்ப அதனால் இறந்துபாடெய்துமெனவும் அறிவுறுத்தினாளாயிற்று. இது, பசலை பாய்தல்.

     உள்ளுறை:- பெண்புலியின் பசியைப் போக்க ஆண்புலி இரைதேடிப் பதிவிருக்குமென்றது, தலைவியின் படர்மலியருநோய் போக்கி வரைந்தெய்துமாறு தலைமகன் விரைவிலே பொருளீட்டச்சென்று பெற்றுவருவானாகவென்றதாம். மெய்ப்பாடு - மருட்கையைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) உயங்குபசி களைஇயர் என்றும், சிதறிப் பரவுறு என்றும் பாடமுண்டு.

(322)