(து - ம்,) என்பது, வெளிப்படை.
(உரை இரண்டற்கும் ஒக்கும்.) (இ - ம்.) இதுவுமது.
| இகுளைத் தோழியிஃது என்னெனப் படுமோ |
| குவளை குறுநர் நீர்வேட் டாங்கு |
| நாளும் நாளுடன் கவவவுந் தோளே |
| தொன்னிலை வழீஇயநின் தொடி யெனப் பன்மாண் |
5 | உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர்முகை |
| ஈன்பிணவு ஒடுக்கிய 1 இருங்கோள் வயப்புலி |
| இரைநசைஇப் பரிக்கு மலைமுதற் சிறு நெறி |
| தலைநாள் அன்ன பேணலன் பலநாள் |
| ஆரிருள் வருதல் காண்பேற்கு |
10 | யாங்கா கும்மே இலங்கிழை செறிப்பே. |
(சொ - ள்.) இகுளைத் தோழி குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு - இகுளையாகிய தோழீ! நீரிலிறங்கி நின்று குவளைமலர் கொய்பவர் தாம் நீர் வேட்கையால் வெய்துற்றாற் போல; தோள் நாளும் நாள் (தோள்) உடன் கவவவும் - நின்னுடைய தோள்கள் நாள்தோறும் காதலனுடைய தோள்களை முயங்கி வைகிய வழியும்; நின் தொடி தொல் நிலை வழீஇய என - நின் கைவளைகள் முன்பு நிலைத்திருந்த இடத்தினின்றும் கழலா நிற்பன என; பல் மாண் நீ உரைத்தல் ஆன்றிசின் - பலகாலும் மாட்சிமைப்பட நீதான் உரையா நின்றனை; முகை விடர் ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கோள் வய புலி - துறுகல்லை அடுத்த மலைப் பிளப்பிடத்தே குட்டிகளை யீன்ற கரிய பெண் புலியுற்ற பசியைப் போக்க வேண்டிப் பெரிய கொலைத் தொழிலை மேற்கொண்ட வலிமையுடைய ஆண்புலி; இரை நசைஇப் பரிக்கும் மலை முதல் சிறுநெறி - இரை வேட்கையாலே பதுங்கியிருக்கின்ற தாழ்வரையில் உள்ள சிறிய வழியிலே; தலை நாள் அன்ன பேணலன் பலநாள் ஆர் இருள் வருதல் காண்பேற்கு - இயற்கைப் புணர்ச்சிக் காலத்து இருந்தாற்போன்ற விருப்ப மிகுதியுடையனாய்ப் பல நாளும் இயங்குதற்கரிய இருளில் வருதலைக் காண்கின்ற எனக்கு; இலங்கு இழை செறிப்பு யாங்கு ஆகும் - என் வளை முதலாய கலன்கள் கழலாதவாறு செறிப்பது எவ்வண்ணம் ஆகும்; இஃது என் எனப்படும் - இங்ஙனம் என் உடம்பு இளைத்தலின் இனி எப்படியாய் முடியுமோ? எ - று.
(வி - ம்.) இகுளைத் தோழி : இருபெயரொட்டு. பேணலன் - பேணுதலையுடையன்.
தலைமகன் வந்து முயங்குந்தோறும் தலைநாளிலே கலந்தாலொத்த புதிய புதிய இன்பம் தானும் நுகர்தலானே இயற்கைப்புணர்ச்சியைக் குறிப்பித்தாள்.
இறைச்சி:- பெண்புலியின் பசியைப் போக்கவேண்டி ஆண்புலி இரைதேடிப் பதுங்கியிருக்கும் நெறியைக் கண்டுவைத்தும் என் கவற்சி நீங்குமாறு காதலன் பொருளீட்டிவந்து மணமுடிக்கக் கருதுகின்றிலனே என்று இரங்கியதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) என் எனப்படுமோ? என்னும் வினாவைத் தோழி கூற்றாக்கினுமாம். இகுளை தோழி என்றும் பாடம். இதற்கு இகுளை என்று தலைவி தோழியை விளித்துப் பின்னர் "தோழி . . . . . தொடி" என்னுந் துணையும் தோழி கூற்றைக்கொண்டு கூறுகின்றாள் எனக்கொள்க. விடரின்கண் பிணவை மறைத்துவைத்த வயப்புலி அதற்கு ஊட்டும் இரையை நசைஇ என்க. பேணலன் - பேணலையுடையவன்.
(332)
(பாடம்) 1. | கேழ்வயப்புலி. . |