(து - ம்,) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகன் கரந்து ஒருபால் வந்து தங்கியதை யறிந்த தோழி அவன் உணர்ந்து விரைவிலே வரைந்து கொள்ளுமாறு தலைவியை நெருங்கி 'அன்னை இவள்இவ் வேறுபாடெய்தியது எதனாலென்றலும் சுனையாடியதனால் உண்டாகிய தென்றேன்; அது மிகை என்று கொண்டு நாளை அதனிலாடின் இன்னும் எவ்வாறாகுமோ என்றனளாதலின், நம் காதலர் பிரிதலால் நாம் வருந்துகின்றோ மென்பதை அவள் அறிந்தனள் போலு'மென்று சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| தோலாக் காதலர் துறந்துநம் அருளார் |
| 1 அலர்வது அன்றுகொல் இதுவென்று நன்றும் |
| புலரா நெஞ்சமொடு புதுவ கூறி |
| இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் |
5 | அறிந்தனள் போலும் அன்னை சிறந்த |
| சீர்கெழு வியன்நகர் வருவனள் முயங்கி |
| நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல் |
| ஒண்ணுதல் பெதும்பை நல்நலம் பெறீஇ |
| மின்நேர் ஓதி இவளொடும் நாளைப் |
10 | பன்மலர் கஞலிய வெறிகமழ் வேலித் |
| தெண்ணீர் மணிச்சுனை ஆடின் |
| என்னோ மகளிர்தம் பண்பென் றோளே. |
(சொ - ள்.) அன்னை சிறந்த சீர் கெழு வியன் நகர் வருவனள் முயங்கி - தோழீ! அன்னையானவள் சிறந்த அழகு விளங்கிய அகன்ற நமது மாளிகையின்கண்ணே இன்று வந்தனள், அங்ஙனம் வந்தவள் அன்போடு தழுவி மகிழ்ந்து ("நின் தோழி சூடிய மாலை கலைந்து தோற்றப் பொலிவும் வேறுபட்டிருப்பதன் காரணந்தான் யாது?" என வினவ; யானும் என்னோடு இவள் இன்று சுனையாடினள் ஆதலின் இ்வ் வேறுபாடுகள் உண்டாயின என்று கூறினேனாக; அவற்றை வேறாகக் கொண்டு சுனையாடும் பொழுது;) நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் ஒள் நுதல் - நீர் மோதி அலைத்தலானே கலைந்து போகிய குளிர்ச்சியுற்ற மலர்மாலையையும் ஒள்ளிய நுதலையுமுடைய; பெதும்பை நல் நலம் பெறீஇ ஓதி மின் நேர் இவளொடும் - பெதும்பைப் பருவத்தின் நல்ல நலனைப் பெற்றுக் கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவளுடனே; நாளைப் பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் தெள் நீர் மணிச் சுனை ஆடின் - நாளைப் பொழுதிலே பலவாகிய மலர் விளங்கிய மணங் கமழ்கின்ற மருத வைப்புப் போன்ற தெளிந்த நீரையுடைய அழகிய சுனையிடத்து ஆடினால்; மகளிர்தம் பண்பு என்னோ என்றோள் - மகளிர் மேனியின் நிறம் இன்னும் எப்படியாமோ? என்று கூறினாள்; தோலாக் காதலர் துறந்து நம் அருளார் - ஆதலால் பகைப்புலத்து வென்றி பெறுவதொன்றேயன்றித் தோல்வியுறாத நங் காதலர் நம்மைக் கைவிட்டு இனி அருள் செய்பவரல்லர்; இது அலர்வது அன்று கொல் என்று - அவருடனிகழ்ந்த இக் களவொழுக்கமானது புறத்தார்க்குப் புலனாகி அலர்தூற்றுந் தன்மையை எய்துமன்றோ? என்று; நன்றும் புலரா நெஞ்சமொடு புதுவ கூறி - பெரிதும் வாட்டமுற்று நம்முள்ளத்துடனே புதியனவாய்ச் சிலவற்றைக் கூறி; இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் அறிந்தனள் போலும் - நாம் இருவரும் துன்பவெள்ளத்து நீந்துகின்றதனை அவ்வன்னை அறிந்து கொண்டனள் போலும்; எ - று.
(வி - ம்.) புலரா, செய்யா வென்னும் உடன்பாட்டு வினையெச்சம். வேலி - மருதவைப்பு; காவலுமாம்.
புதுவகூறியது அவர் அருளாதகலினும், முன்புள்ள நிகழ்ச்சியாலும் மெய்வேறுபாட்டாலும் அலரெழுமே யென்று நெஞ்சினுள்ளே மந்தணமாக மொழிந்துகொண்டது. இதனை அன்னை கரந்து நின்று கேட்டறிந்து பின்பு மாலைகலைந்து தோற்றமும் வேறுபட்டிருப்பதைக் கண்டு இவள் ஒரு கணவனொடு கலந்தனள் போலுமென்று உட்கொண்டு இவ்வேறுபாடு எற்றினானாயிற் றென்றாட்குச் சுனையாடியதால் ஆயதென்றலும் நாளையும் அச்சுனையினாடினால் இன்னும் வேறுபாடு மற்றொருவிதமு மாகுமென நகைத்துக் கூறினாளென்பதாயிற்று. இதனால் அன்னை அறிந்தனள் போலுமென்றாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.
(பெரு - ரை.) இனி இச்செய்யுளில் 'அன்னையானவள், நின்தோழி சூடிய மாலை . . . . . வினவ' என்றும் 'யானும் . . . . கூறினேனாக' என எச்சப்பொருள் கோடல் மிகையாம். அன்னை வந்து என்னை முயங்கி ஈரிதழ்த் தொடையல் நீர் அலையின் கண் கலையும்படி (மெலிந்துள்ள) அவளுடைய பெதும்பை நன்னலத்தை இவள் பெறும்படி நாளைச் சுனையாடுதி! அங்ஙனம் ஆடி நலம் பெறல் மகளிர் பண்பு என்று எனக்கறிவுறுத்தாள் எனவே அவள் நாம் நீந்தும் பருவரல் வெள்ளத்தை அறிந்தனள் போலும் என்று முடிப்பதே சாலும் என்க.
(339)
(பாடம்) 1. | ஆவது அன்று கொல். |