திணை : குறிஞ்சி.

    துறை : இது, தோழி தெய்வத்துக் குரைப்பாளாய் வெறி விலக்கியது.

    (து - ம்.) என்பது, களவுக்காலத்துப் பிரிவிடை வேறுபட்ட தலைவியை நோக்கி இவள் முருகனால் அணங்கப்பட்டாளென்று அன்னை வெறியெடுப்பக் கண்ட தோழி, அறத்தொடு நிற்பாளாய் வெறிவிலக்குமாறு நாடனது மார்பினால் வந்த இந்நோய் நின்னாலணங்கப்பட்டதன்றென்பதை நீ யறிந்து வைத்தும் நின்னணங் கென்று விளிப்பதற்காகப் பலியேற்க வருவையெனில் நீ யறிவில்லாதவனென்று முருகனை நோக்கி இழந்து கூறா நிற்பது.

    (இ - ம்.) இதற்கு "களம் பெறக் காட்டினும்" (தொல்-கள, 23) என்னும் விதி கொள்க.

    
கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த 
    
பறியாக் குவளை மலரொடு காந்தள் 
    
குருதி யொண்பூ உருகெழக் கட்டிப் 
    
பெருவரை யடுக்கப் பொற்பச் சூர்மகள் 
5
அருவி யின்னியத் தாடு நாடன் 
    
மார்புதர வந்த படர்மலி யருநோய் 
    
நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து 
    
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி 
    
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் 
10
கடவு ளாயினும் ஆக 
    
மடவை மன்ற வாழிய முருகே. 

    (சொ - ள்.) முருகே வாழிய - முருகவேளே ! நீ நெடுங் காலம் இம் மடமையோடு வாழ்வாயாக !; கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு - கடவுட்டன்மை பொருந்திய மலையிலுள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த கொய்யாமல் விட்டிருந்த குவளை மலரைப் பறித்து, அவற்றோடு; குருதிக் காந்தள் ஒண் பூ உருகெழக் கட்டி - குருதிபோன்ற காந்தளின் ஒள்ளிய மலர்களை வடிவு விளங்கக் கட்டிச் சூடி; பெருவரை அடுக்கம் பொற்ப அருவி இன் இயத்துச் சூர்மகள் ஆடும் நாடன் - பெரிய மலையின் பக்கங்களெல்லாம் பொலிவுபெற அருவியின் ஒலியை இனிய வாச்சிய முட்டுக்களாகக்கொண்டு சூரரமகள் ஆடாநிற்கும் நாட்டையுடைய தலைவனது; மார்புதர வந்த படர்மலி அருநோய் - மார்பைப் புணர்ந்ததன் காரணமாக அம் மார்பு தருதலாலே வந்த கருதுதலிற் குறைபாடிலாத நீங்குதற்கரிய இக்காம நோயானது; நின் அணங்கு அன்மை அறிந்தும் - நின்னால் வருத்திக் கொடுக்கப்பட்ட தன்றென்பதை நன்றாக நீ அறிந்து வைத்தும்; அண்ணாந்து கார் நறு கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட - தலைநிமிர்ந்து கார் காலத்து மலர்கின்ற நறிய கடப்ப மாலையைச் சூடிப் படிமத்தான் வேண்டுகையாலே; வெறி மனை வந்தோய் கடவுள் ஆயினும் ஆக - வெறிக்களத்துப் பலிபெற வந்தோய் நீ கடவுட் பகுதியாருள் வைத்தெண்ணுதற் குரியையாயினுமாகுக; மன்ற மடவை - திண்ணமாக நீ அறியாமையுடையை காண் ! எ - று.

    (வி - ம்.) பறியாக்குவளை - கடவுட்சுனை மலராதலிற் பூப்பலிக் கன்றிப் பறியாத குவளை. கடம்பு - செங்கடம்பு. மன்ற : தேற்றப்பொருள்பட்ட இடைச்சொல். படர்தல் - கருதுதல். பிள்ளையார் வேலையேந்தியாடுதலிற் படிமத்தான் வேலனெனப்பட்டான். இவன் இக் காலத்துப் பூசாரி யெனப்படுவான். வாழிய : இகழ்ச்சிக்குறிப்பு. அண்ணாந்து - நினக்குத் தலையெடுப்பும் வேண்டுமா வென்றிகழ்ந்தது.

    இறைச்சி :- சூரரமகள் மாலைசூடி அருவியை இனிய வாச்சியமாகக் கொண்டு ஆடுமென்றதனானே தலைமகள் தலைவனை மணமாலையணிந்து மணந்து என்னை எஞ்ஞான்றும் தனக்கு உசாத்துணையாக நீங்காது கொண்டு இல்லற நிகழ்த்தக் கருதியிருக்கு மென்றவாறு. சூரரமகளெனத் தெய்வத்தை இடையிட்டுரைத்தமையின் உள்ளுறையன்மையுணர்க. மெய்ப்பாடு -பெருமிதத்தைச் சார்ந்த நகை. பயன் - குறிப்பினால் வெறிவிலக்குவித்தல்.

    (பெரு - ரை.) இச் செய்யுளோடு,

  
"நேரிழை நல்லாய் நகையா மலைநாடன்  
  
 மார்புதரு வெந்நோய் தீர்க்க வரும்வேலன் 
  
 தீர்க்க வரும்வேலன் தன்னினுந் தான்மடவன் 
  
 கார்க்கடப்பந் தாரெங் கடவுள் வருமாயின்"    (குன்றக்குரவை- 14 14)  

எனவரும் சிலப்பதிகாரப்பகுதி ஒப்புநோக்கற்பாலது.

(34)