திணை : நெய்தல். துறை : இது, தெளிவிடை விலக்கியது.
(து - ம்)என்பது, பிரிவிடை யாற்றாத தலைவியைத் தலைமகன் நெருங்கி, 'யான் கடிதிலே வரைந்துகொள்வேன்; அதுகாறும் ஆற்றியிருப்பாயாக" என்று கூறப் புகுதலும் அதனையறிந்த தோழி, துறைவனே! நின் போன்ற சான்றோர் தம்மை யடைந்தார் வாடும்படி நெடுங்காலம் விரும்பாது கைவிடின், அடைக்கலம் புகுந்தார் வாழ்வதெப்படியாகும்? ஆதலின், நீ தெளிவிப்பதொழிக, இவள் தான் படுந் துன்பம் படுவாளாகவென்று கடிந்துகூறி விலக்காநிற்பது. (இ - ம்) இதனை, "ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்" (தொல். கள. 23) என்புழி, பாங்கின்கண்ணும் என்பதனாற் கொள்க.
| கானல் கண்டல் கழன்றுகு பைங்காய் | | நீல்நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென | | உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல் | | சிறுவெண் காக்கை ஆவித்து அன்ன | 5 | வெளிய விரியும் துறைவ என்றும் | | அளிய பெரிய கேண்மை நும்போல் | | சால்பெதிர் கொண்ட செம்மை யோருந் | | தேறா நெஞ்சங் கையறுபு வாட | | நீடின்று விரும்பா ராயின் | 10 | வாழ்தல்மற் றெவனோ தேய்கமா தெளிவே. |
(சொ - ள்) உறு கால் தூக்க கானல் கண்டல் கழன்று உகு பைங்காய் - மிக்க காற்று மோதுதலானே கடற்கரைச் சோலையிலுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசிய காய்; நீல் நிற இருங்கழி உள்பட வீழ்ந்தென - நீல நிறத்தையுடைய பெரிய கழியிடத்து உள்ளே சென்று பொருந்தும்படி விழுதலாலே; ஆம்பல் தூங்கிச் சிறு வெள் காக்கை ஆவித்து அன்ன வெளிய விரியும் துறைவ - அது மோதப்பட்டு ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெளிய நீர்க்காக்கை கொட்டாவி விட்டாற் போன்ற வெளியவாய் மலராநிற்கும் துறைவனே!; என்றும் அளிய பெரிய கேண்மை நும்போல் சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் - எக் காலத்தும் கருணை செய்தலையுடைய பெரிய கேண்மையுடைய நும்மைப் போலச் சால்பினை எதிரேற்றுக்கொண்ட செம்மையுடையாரும்; தேறா நெஞ்சம் கை அறுபு வாட நீடு இன்று விரும்பாராயின் - தம்மை அடைந்தாரைப் பாதுகாப்பேமென்று அரிய சூள்வைத்து அவர் தெளியாத நெஞ்சுடனே செயலழிந்து வாடும்படி நெடுநாள் காறும் விரும்பாதிருப்பாராயின்; வாழ்தல் எவன் - அங்ஙனம் தஞ்சமென்று புகுந்தார் தாம் உயிர்வாழ்வது எவ்வாறோ?; தெளிவு தேய்க - நீ இங்கு நயந்து தெளிவிக்கும் தெளிவு முழுவதூஉம் அழிந் தொழிவதாக; இவள் தான் படுகின்ற துன்பமெல்லாம் நுகர்ந்து அழிவாளாக! எ - று.
(வி - ம்) துறைவ நும்போலென்றது ஒருமை பன்மை மயக்கம்.
உள்ளுறை :-கண்டற்காய் மோதி விழுதலால் மலரும் பருவத்தல்லாத ஆம்பல் வருந்தி விரியுமென்றது ஏதிலாட்டியர் அலர் தூற்றுதலால், இதுகாறும் நாணமுதலாய பண்பு மிகுதியால் வாய்திறவாதிருந்த இவள் இப்பொழுது புலம்பாநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - தலைமகனைக் கடிந்துகூறி வரைவுகடாதல்
(345)
|