(து - ம்) என்பது, தலைவன்பால் அவாமிகுதலானே அது தாங்காத தலைவி நிலவு பரந்தது, ஊர் திருவிழா அயர்கின்றது, கானம் வண்டொலிசெய்யா நின்றன; இவ்விரவில் யான் கண்ணுறங்கிலேனே; அதனால் என்னொடு இவ்வுலகு போர் செய்யுமோ? அன்றேல் இவ்வுலகொடு என் நெஞ்சு போர்செய்யுமோ? ஒன்றுந் தோன்றவில்லையே என்று புலம்பா நிற்பது.
(இ - ம்) இதற்கு, “காமஞ் சிறப்பினும்” (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.
| நிலவே, நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பிப் |
| பான்மலி கடலில் பரந்துபட் டன்றே |
| ஊரே, ஒலிவருஞ் சும்மையொடு மலிதொகுபு ஈண்டிக் |
| கலிகெழு மறுகின் விழவய ரும்மே |
5 | கானே, பூமலர் கஞலிய பொழிலகந் தோறும் |
| தாம்அமர் துணையொடு வண்டிமி ரும்மே |
| யானே, புனைஇழை ஞெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு |
| கனையிருங் கங்குலுங் கண்படை இலனே |
| அதனால், என்னொடு பொருங்கொல்இவ் வுலகம் |
10 | உலகமொடு பொருங்கொல்என் அவலமுறு நெஞ்சே. |
(சொ - ள்) நிலவு நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி - நிலவோவெனில். நீல நிறமுடைய ஆகாயத்திலே பலவாய கதிர்களைப் பரப்பி; பால் மலி கடலின் பரந்து பட்டன்று - பால் நிரம்பிய கடல் போலப் பரந்துபட்ட தன்மையதாயிராநின்றது; ஊர் ஒலிவரும் சும்மையொடு மலி தொகுபு ஈண்டிக் கலி கெழு மறுகின் விழவு அயரும்மே - இந் நிலா நாளில் இவ்வூரோவெனில் தழைத்துவரும் பேர் ஒலியுடனே நிறைந்து ஒருசேரக் கூடி ஓசைமிக்க தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மையதாயிராநின்றது; கான் மலர் பூ கஞலிய பொழில் அகந்தோறும் தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே - காடோவெனில் மலர்ந்த பூ விளங்கிய சோலையினிடங்கள் தோறும் தாம்தாம் விரும்பி யொழுகும் பெண் வண்டுடனே ஆண்வண்டுகள் ஒலி செய்யாநின்றன; யான் புனை இழைநெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு கனை இருங் கங்குலும் கண்படை இலென் - இன்னதொரு பொழுதிலே யானொருத்தியே அணிந்த கலன்களை நெகிழ விடுத்த தனிமையுடனே கொண்ட வருத்தத்தொடு மிக்க நீடிய கங்குல் முழுவதும் கண்கள் துயின்றிலேன்; அதனால் - ஆதலின் இங்ஙனம் எல்லார் செயலுக்கும் மாறுபாடாக யானிருத்தலால்; இவ் உலகம் என்னொடு பொருங்கொல் - இவ்வுலகம் என்னொடு போர் செய்து என்னை ஒழியப் பண்ணுமோ?; என் அவலம் உறும் நெஞ்சு - அன்றி யாதொரு பயனுமில்லாத எனது நெஞ்சம்; உலகமொடு பொருங்கொல் - தன் செயலுக்கு மாறுபாடாயிராநின்றது இவ்வுலகம் என்று உலகத்தோடு போர் செய்ய எழுமோ? ஒன்றுந் தோன்ற வில்லையே? எ - று.
(வி - ம்) யானே, ஏ : பிரிநிலை. நிலனே, ஊரே, கானே, ஏ : வினா. கான் வண்டு இமிருமென்றது, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.
நிலவின் குளிர்ந்த கதிர் மேலே படுதலும் காமவேட்கை மீதூர்தலின், நிலாவை முதலிலே கூறினாள். விழாக்கண்டு மகிழ்தல் கூடினார்க்கன்றிப் பிரிந்தார்க் கின்பஞ் செய்யாமையின், ஏனையோர் மகிழ்வதற்கும் தான் வருந்துவதற்குங் காரணமாகிய திருவிழாவை உடன் கூறினாள். உண்பார் முன் நிலையிலே பசியால் நொந்திருந்தார் நெஞ்சம் புண்ணாகி அழியுமன்றே! அவ்வண்ணம் துணையோடு வண்டு இமிர்தலை நோக்கவும் காமங் கனற்றலானே வருந்தி்க் கண்படை கொள்ளாமை கூறினாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை) நிலன் முதலியவற்றில் ஏகாரம் அசைநிலையுமாம். நீல் - நீலம் என்பது குறைந்து நின்றது. ஒலிவரும் - ஒருசொல்.
(348)