(து - ம்) என்பது, தலைமகன் வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிகின்றான் குறித்த பருவம் வருதலும் தலைமகள் ஆற்றாளாய்த் தோழியை நோக்கித் தோழீ! அவர் குறித்த பருவம் வந்து நீங்குதலுமாகின்றது; இங்ஙனம் இன்னும் சில வைகல் கழிந்து மாரியொடு மாலையம்பொழுதுஞ் சேரவந்தால் யான் உயிர் வாழலேனென் றழிந்து கூறாநிற்பது.
(இ - ம்) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.
| சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும் |
| மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி |
| ஆர்கலி வானம் நீர்பொதிந்து இயங்கப் |
| பனியின் வாடையொடு முனிவுவந் திறுப்ப |
5 | இன்ன சில்நாள் கழியின் பல்நாள் |
| வாழலேன் வாழி தோழி ஊழின் |
| உருமிசை அறியாச் சிறுசெந் நாவின் |
| ஈர்மணி இன்குரல் ஊர்நனி இயம்பப் |
| பல்லா தந்த கல்லாக் கோவலர் |
10 | கொன்றையந் தீங்குழல் மன்றுதோறு இயம்ப |
| உயிர்செலத் துனைதரு மாலை |
| செயிர்தீர் மாரியொடு ஒருங்குதலை வரினே. |
(சொ - ள்) தோழி வாழி சொல்லிய பருவம் கழிந்தன்று - தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! தலைவர் வருவேம் என்று சொல்லிப்போன பருவமோ வந்து நீங்குதலாயிற்று; எல்லையும் மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி - பகற்பொழுதும் இருள் மிக்க நடுயாமத்துக் காரிருளோடொன்றி; ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க - நிரம்பிய இடி முழக்கத்தையுடைய மேகம் நீர் நிறையப் பெற்று இயங்காநிற்ப; வாடையொடு பனியின் முனிவு வந்து இறுப்ப - வாடைக் காற்றுடனே பனிக்கு உண்டாகிய சின மெல்லாம் என்மீது வந்து தங்காநிற்ப; இன்ன சில் நாள் கழியின் - இவ்வாறாகிய நாள் சில கழிவன வாயினும்; ஊழின் உரும் மிசை அறியாச் செயிர்தீர் மாரியொடு - முறையே இடிமுழக்கம் விசும்பிலே கேட்கப்படாத குற்றந் தீர்ந்த மாரியுடனே; சிறு செந் நாவின் மணிஈர் இன் குரல் - வல்லோசை பயின்றறியாத சிறிய செவ்விய நாவினையுடைய மணியின் குளிர்ந்த இனிய ஓசை; ஊர் நனி இயம்ப - ஊரின்கண்ணே புகுந்து மிக ஒலியாநிற்கும்படி; பல் ஆ தந்த கல்லாக் கோவலர் - பலவாய ஆனிரையை நமது தெருவிலே செலுத்திவந்த பிறதொழிலைக் கல்லாத ஆயருடைய; கொன்றை அம் தீம் குழல் - கொன்றைப் பழத்தால் செய்த இனிய புல்லாங் குழல்; மன்று தோறும் இயம்ப - இவ்விடனெங்கும் இனிதாக ஒலியாநிற்ப; உயிர் செலத் துனைதரு மாலை - பிரிந்தோரின் உயிர் உடனே உடலை விட்டு நீங்கும்படி விரைந்து வருகின்ற மாலைப் பொழுதானது; ஒருங்கு தலைவரின் - ஒருசேர வந்து கூடினால்; பல்நாள் வாழலேன் - அப்பால் எந்த நாளும் நான் உயிர் வாழ்ந்திரேன் காண்; எ - று.
(வி - ம்) "மாலையோ வல்லை மணந்தார் உயிருண்ணும், வேலைநீ வாழி பொழுது" (குறள் - 1221) என்றதனானும் பிரிந்தோருயிரை மாலை ஒறுக்குமென்றறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை) ஊர் நணியியம்ப என்றும் பாடம். உருமிசையறியா என்னுந் தொடர்க்கு உரை பொருந்திற்றில்லை. வேறு பாடமிருந்திருத்தல் கூடும்.
(364)