திணை : மருதம்.

     துறை : (1) இஃது ஊடல்நீட ஆற்றனாய் நின்றான் பாணற்குச் சொல்லியது.

     (து - ம்) என்பது, பரத்தையிற் பிரிந்துவருகின்ற தலைவனது வரவறிந்த தலைவி ஊடினாளை நயந்து பலகால்வேண்டியும் ஊடல் நீங்காமையால் வருந்திய அவன், ஆங்கு வந்த பாணனை நோக்கிப் பாணனே! நம் காதலி புதல்வனைப் பெற்றகாலத்து நாம் அருகெய்தி வினாயபொழுது நகைகொண்டு கண்ணைமூடியதை நினைக்குந்தோறும் நகாநிற்போம்; அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணென்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, "ஏனை வாயில் எதிர்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

     துறை : (2) முன் நிகழ்ந்ததனைப் பாணற்குச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்) என்பது, வெளிப்படை. (உரை குறிப்பெச்சமில்வழி ஒக்கும்.)

     (இ - ம்) இதுவுமது.

    
வாராய் பாண நகுகம் நேரிழை 
    
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி 
    
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் 
    
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்  
5
புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த்து அவ்வரித் 
    
திதலை அல்குல் முதுபெண் டாகித் 
    
துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப் 
    
பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி 
    
உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல 
10
முகைநாள் முறுவல் தோற்றித் 
    
தகைமலர் உண்கண் புதைத்துவந் ததுவே. 

     (சொ - ள்) பாண வாராய் - பாணனே! என்னருகு வருவாயாக!; நேர் இழை கடும்பு உடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி - நேர்மையான கலன்களையுடையாள் என் சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சிறந்த சூல் உடையளாய் மகவு ஈன்று நங்குடிக்கு உதவிபுரிந்து; நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் - நெய்யுடனே கலந்து ஒளிர்கின்ற சிறுவெண் கடுகாகிய திரண்ட விதைகளை விளங்கும் மாளிகையிடமெங்கும் விளங்கும்படி பூசிப் பாயலிலே படுத்திருந்தாளை; குறுகி மெல் அம் சில் ஓதி - நெருங்கி மெல்லிய அழகிய சிலவாகிய கூந்தலையுடையாய்!; புதல்வன் ஈன்று எனப் பெயர் பெயர்த்து அவ் வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகித் துஞ்சுதியோ என - நீ புதல்வனை ஈன்றதனால் வேறு பெயரும் பெற்று அழகிய வரிகளும் தித்தியுமுடைய அல்குலையுடைய முது பெண்டாகித் துயிலாநின்றனையோ? என்று கூறி; பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி உள்ளினென் உறையும் என் மெல்லக் கண்டு - பலவாகிய மாட்சிமைப்பட்ட வயிற்றிடத்தில் என் கையிலுள்ள குவளை மலரால் ஒற்றிச் சில பொழுது கருதினேனாகி அங்கு நின்ற என்னை மெல்ல நோக்கி; நாள்முகை முறுவல் தோற்றி - முல்லையின் நாளரும்பு போன்ற நகையையுந் தோற்றுவித்து; தகை மலர் உண்கண் புதைத்து வந்தது - சிறந்த நீலமலர் போன்ற மையுண்ட கண்களைக் கையான் மூடி மகிழ்ச்சி மிகக் கொண்டிருந்தது எனக்கு நகையுடையதா யிராநின்றது; நகுகம் - அதனைக் கருதுந் தோறும் நாம் நகாநிற்போம்; அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணாய்! எ - று.

     (வி - ம்) பெயர் பெயர்த்தல் - புதல்வனை யீன்றதனாற் பருவப் பெயர் மாறுபடுதல். அவை மங்கை, மடந்தைப் பருவங்கள் கடந்து அரிவை, தெரிவைப் பருவமாதல் போல்வன. சூலெய்திய காலத்தும் பொறையுயிர்த்த சில நாளளவும் சிற்சில மகளிர்க்கு அல்குற்பக்கமெங்கும் சுட்டிசுட்டியாகத் தேமல்போல ஒளிர்வது தித்தியெனப்படும். மெய்ப்பாடு - வருத்தம் பற்றிய நகை, பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை) பெயர் பெயர்த்தல் - மனையோள் என்னும் பெயரினுங்காட்டில் மகப்பெற்றமையால் தாய் என்னும் பெயர் சிறந்து தோன்றுதல் எனினுமாம். கடுஞ்சூல் - முதற்சூல். மனைக்கு விளக்குப் போன்ற மகவீன்று கிடத்தலின் நகர் விளங்கக் கிடந்தோள் என்றான், 'கை புதைத்ததுவே' என்றும் பாடம்.

(370)