திணை : நெய்தல்.

     துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுகத் தலைமகளது நிலையுணர்ந்த தோழி வரைவுகடாயது.

     (து - ம்) என்பது, மணஞ்செய்து கொள்ளாது தலைமகன் நெடுங்காலம் களவின் வந்தொழுகுதலானே வருந்துந் தலைமகளது நிலைமை இன்னதென வுணர்ந்த தோழி தலைமகனை யடைந்து 'சேர்ப்பனே! எம் தலைவி மகிழும் வண்ணம் எம்மூரின் கண்ணே வரைவொடுவரின் அது நலமாகு'மென்று வெளிப்படையாகக் கூறாநிற்பது.

     (இ - ம்) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.

    
நீடுசினைப் புன்னை நறுந்தாது உதிரக் 
    
கோடுபுனை குருகின் தோடுதலைப் பெயரும் 
    
பல்பூங் கானல் மல்குநீர்ச் சேர்ப்ப 
    
அன்பிலை ஆதலின் தன்புலன் நயந்த 
5
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப 
    
வருவை ஆயினோ நன்றே பெருங்கடல் 
    
இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத்திரை 
    
எறிவன போல வரூஉம் 
    
உயர்மணல் படப்பைஎம் உறைவின் ஊரே.  

     (சொ - ள்) நீடு சினைப் புன்னை நறுந்தாது உதிரக் கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும் - நீண்ட கிளையையுடைய புன்னையின் நறிய மகரந்தம் உதிரும்படி அக் கிளைகளின்மீது அலங்கரித்தாற்போன்று வைகிய நாரையின் கூட்டம் இரை வேண்டிப் பெயர்ந்து உலாவாநிற்கும்; பல் பூங்கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப - பலவாகிய மலர்களையுடைய கடற் கரைச் சோலையையும் மிக்க உவர்நீரையுமுடைய நெய்தனிலத் தலைவனே!; அன்பு இலை ஆதலின் - நீ பலகாலும் வந்து முயங்கியும் எம்பால் அன்புடையை அல்லை; என்னும் தன்புலன் நயந்த நாணும் நல்நுதல் உவப்ப - அங்ஙனம் அன்புடையையா யிருப்பின் அவளுடைய அறிவின் வழியே ஒழுகுகின்ற என்பாலும் சொல்லுவதற்கு வெள்குகின்ற நல்ல நுதலையுடையாளாகிய அத்தலைவி உவக்கும் வண்ணம்; பெருங்கடல் இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத் திரை எறிவன போல வரூஉம் உயர்மணல் படப்பை - பெரிய கடலிடத்து இராப் பொழுதிலே தண்கதிர்த்திங்கள் தோன்றுதலானே அதுகண்ட வலிய அலைகள் மோதுவனபோல எழுந்து வாராநிற்கும் உயர்ந்த மணல் நிரம்பிய கொல்லைகளையுடைய; எம் உறைவின் ஊர் வருவை ஆயின் நன்று - யாம் உறைகின்ற எம்மூரிடத்து நீ அவளை மணஞ்செய்து கொள்ளுமாறு வரல் வேண்டும்! அவ்வாறு வருவையாயின் அது மிக நல்லதொரு காரியமாகும்; எ - று.

     (வி - ம்) கடல்மீது நிறைத் திங்கள் எழுந்துழி அக் கடல் நீர் பொங்கி யெழுதல் வெளிப்படை. உவப்பவருதி யென்றதனால் வரைந்து தலைமகள் மகிழுமாறு வருவாயாக வென்றவாறு.

     உள்ளுறை:- புன்னைக் கிளையில் வைகிய குருகினம் அதன் மகரந்தம் உதிருமாறு கொம்பை அலைத்தெழுந்து செல்லுஞ் சேர்ப்பனென்றதனால் களவொழுக்க மேற்கொண்டு தலைவிபால் வைகிய நீ அவள் அழுது கண்ணீர் வடிக்குமாறு கையகன்று போயினை; இனி அங்ஙனமின்றி வரைந்து பிரியாது உறைவாயாக வென்றதாம்.

     இறைச்சி:-திங்களைக் கண்டு கடல் பொங்கி அலையெழுந்து ஆரவாரிக்கு மென்றது, நீ வரைவொடு வருதல் கண்டு எமர் எதிர்கொண்டு மகிழ்ந்து ஆரவாரிப்ப ரென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

     (பெரு - ரை) தோடு - கூட்டம். என்னும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. நயந்த - நயந்தவற்றை. இரவுத் தலை - இராப்பொழுதில். மண்டிலம் - திங்கள்.

(375)