திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது.

     (து - ம்) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைமகன் நன்கு மதித்து விரைந்து வரைதல் காரணமாகச் சேட்படுக்குந் தோழி அவனை நெருங்கி, நீ காதலித்த இளமகள் தான் பருக வெடுத்த பாலைக் குரங்கின் குட்டி பறித்ததனால் அழுதலிற் கண்கள் நீர்நிரம்பிய நீலம்போன்றன; வயிற்றின் அறைந்து கோடலின் கைவிரல்கள் காந்தளிதழ் போன்றன; இவ்வளவு அறியாமையுடையாள் நினது துயரை எவ்வாறு போக்குமென அவளது பேதைமை காட்டி மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, "பேதைமை யூட்டலும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

     துறை : (2) காப்புக் கைமிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்) என்பது, இல்வயிற் செறித்துக் காவலோம்பிய பொழுது வருந்திய தலைவியை வினாவிய தோழிக்கு, அவள் இன்ன காரணத்தால் கண் நீலமொத்தன விரல் காந்தளொத்தன வென்று கூறாநிற்பதுமாகும்.

     (இ - ம்) இதற்கு, "மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
புன்தலை மந்திக் கல்லா வன்பறழ் 
    
குன்றுழை நண்ணிய முன்றில் போகாது 
    
எரிஅகைந்து அன்ன வீததை இணர 
    
வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய 
5
தேம்பெய் தீம்பால் வௌவலின் கொடிச்சி 
    
எழுதெழில் சிதைய அழுத கண்ணே 
    
தேர்வண் சோழர் குடந்தை வாயில் 
    
மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த 
    
பெயலுறு நீலம் போன்றன விரலே 
10
பாஅய் அவ்வயிறு அலைத்தலின் ஆனாது 
    
ஆடுமழை தவழுங் கோடுயர் பொதியின் 
    
ஓங்கிருஞ் சிலம்பில் பூத்த 
    
காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே.  

     (சொ - ள்) புன் தலை மந்திக் கல்லா வன் பறழ் குன்று உழை நண்ணிய முன்றில் போகாது - ஐயனே! புல்லிய தலையையுடைய பெண் குரங்கினது தன் தொழிலையும் முற்றக் கற்றறியாத வலிய குட்டி சிறிய குன்றினிடத்துப் பொருந்திய சிறுகுடியின்கணுள்ள மனைவாயினின்றும் போகாது; எரி அகைந்து அன்ன வீ ததை இணர வேங்கை அம் படு சினை - எரி கப்பு விட்டாற்போன்ற மலர்கள் நெருங்கிய பூங்கொத்தினையுடைய வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளைமீது; பொருந்திக் கொடிச்சி கைய தேம் பெய் தீம் பால் வௌவலின் - மறைந்திருந்து நீ காதலித்த கொடிச்சி கையகத்திருந்த தேன்கலந்த இனிய பாலைக் கலத்தொடு வலிந்து பற்றிக்கொண்டு சென்றுவிட்டதனால்; எழுது எழில் சிதைய அழுத கண்ணே - ஓவியர் எழுதுதற் குரிய அழகெல்லாம் கெடும்படி அழுத அவளுடைய கண்கள்; தேர் வண் சோழர் குடந்தை வாயில் மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த பெயல் உறும் நீலம் போன்றன - இரவலர்க்குப் பரிசாகத் தேர்களைக் கொடுக்கின்ற வண்மையுடைய சோழமன்னவர்க்குரிய 'குடவாயில்' என்னும் ஊரகத்து மழைபெய்து நிரம்பப் பெற்ற அகழியிலே தண்ணியவாய் மலர்ந்த பெய்யும் மழைநீரை ஏற்ற நீலமலர் போன்றன; அல் வயிறு பாஅய் அலைத்தலின் விரல் சிவந்து - அங்ஙனம் பாற்கலம் பறிபட்டதற்கு ஆற்றாது அழகிய வயிற்றிலே பரவ அடித்துக்கொண்டதனால் அவளுடைய விரல்கள் சிவந்து; ஆனாது ஆடும் மழை தவழும் கோடு உயர்பொதியின் ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த காந்தளம் கொழுமுகை போன்றன - அமையாது இயங்குகின்ற மேகந்தவழும் கொடு முடிகள் உயர்ந்த பாண்டியனது பொதியில் என்னும் உயர்ந்த பெரிய மலையில் மலர்ந்த கொழுவிய காந்தளின் மலரும் பருவமுகை போன்றன; இத்தகைய இளமைவாய்ந்த அறியாமடமையாள் நின்னை மயக்கினள் என்பதும் நின்காமந் தணிக்கு மென்பதும் எவ்வண்ணமோ? ஒன்று கூறுவாயாக! எ - று.

     (வி - ம்) படுசினை - தாழ்ந்த கிளை. தேம்பெய்பால் - கண்ட சருக்கரையொடு கலந்த பால். குடந்தை: குடமென்பதன் திரிபு. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - பேதைமையூட்டல்.

    உரை :(2) கொடிச்சியாகிய தோழீ! யான் மெய் துவண்டது தான் என்னென்றனையே! பால் வௌவலின்கண் அழுது நீலம் போன்றன; வயிறலைத்தலின் விரல் காந்தள் போன்றன; எ - று.

     கொடிச்சி வயிறலைத்து அழுமாறு, மந்தியின் மகவு பாலை வௌவுதல் போல நீ மனந்தளருமாறு ஏதிலார் பொன்னணிந்து தலைவியைக் கைக்கொள்ளினுமாம்; ஆதலின், இன்னே வரைகவென் றுரைத்தாளென வேறு மொருபொருள் பயப்பது அறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

(379)