திணை : குறிஞ்சி.

     துறை : இது, பகற்குறிவந் தொழுகா நின்றகாலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.

     (து - ம்) என்பது, தலைமகன் வரையாது பகற்குறிவந் தொழுகுகின்றான் அறிந்து விரைய மணஞ்செய்துகொள்ளுமாறு தோழி தலைவியை நெருங்கி, நம் அன்னை என்னை நோக்கி, நுந்தை வேட்டை மேற் சென்றதனாலே தினைப்புனங்காப்பு நினதேயென்றனள்; அவ்வாறு காவல்செய்யும்பொழுது மலைநாடனொடு தொடர்புற்றோம்; தினைகொய்யுங்காலம் நெருங்கினமையின் அவனோ டுற்ற தொடர்பு தான் யாதாய் முடியுமோ என நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, "களனும் பொழுதும்..............அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
வேங்கை யும்புலி ஈன்றன அருவியும் 
    
தேம்படு நெடுவரை மணியின் மானும 
    
அன்னையும் அமர்ந்துநோக் கினளே என்னையும் 
    
களிற்றுமுகந் திறந்த கல்லா விழுத்தொடை 
5
ஏவல் இளையரொடு மாவழிப் பட்டெனச் 
    
சிறுகிளி முரணிய பெருங்குரல் ஏனல் 
    
காவல் இனியென் றோளே சேவலொடு 
    
சிலம்பில் போகிய சிதர்கால் வாரணம் 
    
முதைச்சுவல் கிளைத்த பூழி மிகப்பல 
10
நன்பொன் இமைக்கும் நாடனொடு 
    
அன்புறு காமம் அமைந்தனம் தொடர்பே. 

     (சொ - ள்) என்னையும் களிற்று முகந் திறந்த விழுத் தொடை கல்லா ஏவல் இளையரொடு - எம் தந்தையானவன் களிற்றியானையின் முகத்தைப் பிளந்த சிறந்த அம்பையுடைய கொலைத் தொழிலன்றிப் பிற கல்லாத ஏவன் மக்களாகிய வீரருடனே; மாவழிப்பட்டு என - விலங்கின்பின் வேட்டைமேற் சென்றதனாலே; சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல் இனிக்காவல் என்றோள் - சிறிய கிளிகள் கொய்தழிக்கின்ற பெரிய கதிர் களையுடைய தினைப்புனம் இனி உன்னாலே காவல் செய்யப்படுவதாக என்றனள்; சிலம்பில் போகிய சிதர் கால் வாரணம் முதைச் சுவல் சேவலொடு கிளைத்த பூழி - அதுமுதலாக நாம் அதன் கண்ணே காவலோம்பி வருங்காலைச் சிலம்பிலே சென்ற கிளைகின்ற கோழி தன் சேவலுடனே பழங் கொல்லையின் மேற்புறத்தைக் கிளைத்த புழுயிடையே; மிகப் பல நல் பொன் இமைக்கும் நாடனொடு - மிகப் பலவாகிய நல் பொன் ஒளிவீசாநின்ற நாடனுடன்; அன்பு உறுகாமம் தொடர்பு அமைந்தனம் - அன்பு மிக்க காமமே தலைக்கீடாக யாம் தொடர்ச்சியுடையேம் ஆயினேம், வேங்கையும் புலி ஈன்றன - அங்ஙனமாகிய தொடர்ச்சி விரைவினீங்குமாறு தினை கொய்யுங்காலம் புலிபோன்ற பள்ளிகளையுடைய மலர் அரும்பி மலர்ந்தன; அருவியும் தேம் படு நெடு வரை மணியின் மானும் - அருவிகளெல்லாம் தேன்மணமிக்க நெடிய மலையிடத்தில் நீலமணி போலத் தெளிவடைந்தன; அன்னையும் அமர்ந்து நோக்கினள் - தினை கொய்யுங் காலமும் மணம்புரியுங் காலமும் ஒருசேர வந்தமை கருதிப் போலும் எம் அன்னை அமர்ந்து நோக்கி நின்றனள்; இனி நமது தொடர்பு யாதாய் முடீயுமோ? அறிகின்றிலேன்! எ - று.

     (வி - ம்) புலி: மலர்க்கு உவமையாகுபெயர். முரணுதல் - மாறு கொண்டழித்தல். சிதர்தல் - கிளைத்தல்.

     வேங்கை மலர்ந்தவுடன் தினை கொய்தலும், தலைவியை இல்வயிற் செறித்தலும் வழக்காதலானே தொடர்பற்றுவிட்டதென் றிரங்கினாள். தலைவனைப் பிரிப்பதற்குக் காரணமாயிருத்தலின், அதன் கொடுமை தோன்றப் புலியென்ற பெயராற் கூறினாள்.

     இறைச்சி:- கோழி கிளைத்த பூமியிடத்து நன்பொன் இமைக்கு மென்றது, செல்வக் குறைபாடிலனாதலால் எமர்க்கு வேண்டும் பொருள் கொடுத்து என்னை மணம்புரிந்துகொண்டான் இல்லையேயென் றிரங்கியதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை) வாரணம் கிளைத்த பூழியில் நன்பொன் இமைக்கும் என்றது நம்மால் வற்புறுத்தப்பட்ட நம் பெருமான் இனி வரைவொடு வந்து நமக்கு அளி செய்வான் என்றவாறாகக் கோடல் இனிது. "காவனீ என்றோளே"என்றும், 'அமைகநந் தொடர்பே' என்றும் பாடம். புலி போன்ற புள்ளிகளையுடைய மலரென்னாது புலியின் புள்ளியைப் போன்ற மலர் என்க, என்னை? வேங்கை மலர்க்குப் புலியின் புள்ளிகளே உவமையாகலின் என்க.

(389)