(து - ம்.) என்பது, தெய்வப்புணர்ச்சி புணர்ந்து நீங்கி இடந்தலைப்பாடுற்றுச் சென்று முந்துறக் கண்ட தலைமகன் அந்தத் தலைமகளை நோக்கி நீ நாணுகின்றனை. யானுற்ற காமம் தாங்குத லெளியதொரு காரியமோ, நின் கண்களேயன்றி நின் தோள்களும் என்னை வருத்துகின்றனகா ணென்று மெய்தொட்டுப் பயிறன் முதலானவற்றை யுள்ளடக்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "முன்னிலையாக்கல் சொல்வழிப் படுத்தல்" (தொல்-கள- 10) என்னும் நூற்பாவின்கண் "நன்னயமுரைத்தல்" என்பதன்கண் அமைத்துக்கொள்க. ஆசிரியர் இளம்பூரணர் கருத்து மிதுவேயாம். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் இச்செய்யுளை "மெய்தொட்டுப் பயிறல்" (தொல்-கள- 11) என்னும் நூற்பாவின்கண் இடையூறு கிளத்தல், நீடுநினைந்து இரங்கல் என்னும்
| இரண்டிற்கும் பொதுவிற் காட்டாநிற்பர். |
| சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் |
| திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக் |
| காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ |
| கொடுங்கேழ் இரும்புற நடுங்கக் குத்திப் |
5 | புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் |
| தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் |
| கண்ணே கதவ அல்ல நண்ணார் |
| ஆண்டலை மதில ராகவும்1 முரசுகொண்டு |
| ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் |
10 | பெரும்பெயர்க் கூடல் அன்னநின் |
| கரும்புடைத் தோளும் உடையவா லணங்கே. |
(சொ - ள்.) சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் நின் திருமுகம் இறைஞ்சி நாணுதி - நங்காய்! யான் நின்னைத் தழீஇக் கொண்டு சில கூறின் அவற்றை எதிரேற்றுக் கொள்ளாயாய் நின் அழகிய முகம் இறைஞ்சி நின்று கண்புதைத்து நாணுகின்றனை; கதும் எனக் காமம் கைமிகின் தாங்குதல் எளிதோ - விரைவாகக் காமமானது கைகடந்து மிகுமாயின் அதனை யான் தாங்கியிருத்தல் எளியதொரு காரியமாமோ; புலி நடுங்கக் கொடுகேழ் இருபுறமும் குத்தி விளையாடிய - புலி நடுங்குமாறு அதன் வளைந்த கரிய நிற முள்ள வரிகளையுடைய பெரிய முதுகிலே குத்தி வீழ்த்தி வளையாட்டயர்ந்த; புலவு நாறு வேழத்து இன்தலை மருப்பு ஏய்ப்ப - புலவு நாற்றத்தையுடைய களிற்றின் இனிய நுனியையுடைய மருப்புப்போல; கடைமணி சிவந்த நின்கண்ணே கதவ அல்ல - கடைமணி சிவந்த நின்கண்கள் தாமோ சினவா நின்றன; அவை மட்டுமல்ல ! நண்ணார் அரண் தலை மதிலர் ஆகவும் - பகைவர் அரண்மிக்க மதிலிடத்திற் போந்தாராகவும்; முரசு கொண்டு ஓம்பு அரண் கடந்த போர்அடு செழியன் - உடனே மேல்வீழ்ந்து வென்று அவரது முரசைக் கைக்கொண்டு அவராற் பாதுகாக்கப்படுகின்ற அரணையும் கைப்பற்றிய போரிற் கொல்லவல்ல பாண்டியனது; பெரும் பெயர்க் கூடல் அன்னநின் கரும்பு உடைத் தோளும் - பெரிய புகழையுடைய மதுரையை யொத்த நின்னுடைய தொய்யிலெழுதப்பட்ட கரும்பையுடைய தோள்களும் என்னை வருத்துதலை யுடையன காண் !; எ-று.
(வி - ம்.)கரும்பு - காமனது வில்; தொடர்புடைமையில் தழீஇக் கொண்டு கூறப்பட்டது.
முகமிறைஞ்சி நாணக்காண்டலிற் றன்கூற்றை ஏற்றுக்கொண்டிலள் போலுமெனக் கொண்டு எதிர்கொள்ளாது வெறுத்தனையென்றான். தாங்குதலெளிதோ என்றது நீ வெறுத்தனையெனினும் காமந்தாங்குத லெளிதன்றாதலின் மேல்வீழ்ந்து முயங்குவேனென்றதாம். கண்ணுந் தோளுங் கதத்தன வென்றது, அவை என்னை வருத்தாவாறு கண்ணால் நயந்து நோக்கித் தோளா னணைத்து முயங்குகவென்றதாம். மற்றும் இதனுள் தழீஇக் கொண்ட தென்றது மெய்தொட்டுப் பயிறலும், சில கூறில் என்றது பொய் பாராட்டலும், நாணுதியென்றது இடையூறு கிளத்தலும், தாங்குதலெளிதோவென்றது நீடு நினைந்திரங்கலும், புலியிடைத் தோய்ந்து சிவந்த மருப்புப்போல என்னிடைத் தோய்ந்து காமக்குறிப்பினாற் சிவந்த கண்ணென்றது கூடுதலுறுத்தலுங் கூறியவாறறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாமை யுணர்த்தல்.
(பெரு - ரை.) யாழ : அசைச்சொல். கதுமென: விரைவுக் குறிப்பு. புலி நடுங்கக் குத்தி விளையாடிய வேழத்தின் மருப்புத்தலை ஏய்ப்ப என இயைத்துக் கொள்க.
(39)