திணை : பாலை.

     துறை : (1) இது, பிரிவுணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

     (து - ம்) என்பது, தலைமகன் தான் பொருள்வயிற் பிரிவே னென்றதை யறிந்து வருந்திய தலைமகளைத் தோழி நெருங்கி, மடந்தாய்! கண்ணீர் மல்க அழாதே கொள்; நின் காதலர் ஏழில்மலையைப் பெறுவதாயினும் நின்னைப் பிரிபவர் அல்லர்; நீ அழுவதனை அவர் கண்டால் இன்னே செலவழுங்குவரென வலியுறுத்திக் கூறாநிற்பது.

     (இ - ம்) இதனை, "பெறற் கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனாற் கொள்க.

     துறை : (2) வரைவுணர்த்தியதூஉமாம்.

     (து - ம்) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்) இதற்கு, "ஆங்கதன் தன்மையின் வன்பொறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே 
    
புலிப்பொறி அன்ன புள்ளியம் பொதும்பின் 
    
பனிப்பவர் மேய்ந்த மாயிரு மருப்பின் 
    
மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை 
5
ஒண்தொடி மகளிர் இழையணிக் கூட்டும் 
    
பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு 
    
ஏழிற் குன்றம் பெறினும் பொருள்வயின் 
    
யாரோ பிரிகிற் பவரே குவளை 
    
நீர்வார் நிகர்மலர் அன்னநின் 
10
பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே. 

     (சொ - ள்) மடந்தை குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன நின் பேர் அமர் மழைக் கண் தெள் பனி கொளவே ஆழல் - மடந்தாய்! குவளையின் நீர் வடிகின்ற ஒளி பொருந்திய மலர் போன்ற நின்னுடைய பெரிய அமர்த்தலையுடைய குளிர்ச்சியுற்ற கண்களிலே தெளிந்த நீர் வடியும்படி நீ அழாதேகொள்!; பொருள்வயின் செலவு அழுங்குவர் - அழுவதனை அறிந்தால் அவர் பொருள் கொணருமாறு செல்லுவதனை இன்னே ஒழிகுவர்காண்; புலிப்பொறி அன்ன புள்ளி அம் பொதும்பில் - புலியினது புள்ளி போன்ற புள்ளிகளமைந்த நிழலையுடைய மரங்கள் செறிதலினிடையே; பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர்தலைக்கார் ஆன் - படர்ந்த ஈரிய கொடியை மேய்ந்த நெடிய கரிய கொம்பையும் பருத்த தலையையுமுடைய எருமைமாடு; அகற்றிய தண்ணடை ஒள் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும் - அக்கொடியினின்று தின்றொழித்த மலைப்பச்சையின் இலைகள் ஒள்ளிய தொடியையுடைய மகளிர் கலன்களை அணிதற்குப் பயன்படுமாறு கூட்டாநிற்கும்; கொண்கான நன்னன் நல்நாட்டு பொன்படு ஏழிற் குன்றம் பெறினும் - கொண்கானத்தின்கணுள்ள நன்னனது நல்ல நாட்டிலிருக்கின்ற பொலிவு பொருந்திய ஏழில் மலையைத் தாம் பெறுவதாயினும்; யார் பிரிகிற்பவர் - நின்னைவிட்டுப் பிரிபவர் யார்? எ - று.

     (வி - ம்) காரான் - எருமை. தண்ணடை - மலைப்பச்சை. புள்ளி - இலையடராது புள்ளிப்பட்ட நிழல். நிகர் - ஒளி. இழையணிக்கூட்டும் - கலன்களாக அணியும்படி கூட்டாநிற்கும் எனவுமாம்.

     உள்ளுறை:- எருமை தின்றொழித்த மலைப்பச்சை மாதர் இழையணியாகக் கூட்டுமென்றது, அவர் ஈட்டிக் கொணர நீ இல்லறம் நிகழ்த்தி எஞ்சிய பொருள் உலகத்துக்குப் பயன்படுங்கா ணென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை) பொருள்வயின் செலவு என்றும், 'பொன் படு ஏழிற் குன்றம்' என்றும் இயைத்துக்கொள்க. ஏழிற்குன்றம் என்பது கொண்கானத்துள்ள ஒரு மலையின் பெயர் என்க.

     உள்ளுறையால் பொருள் இன்றியமையாமை யுணர்த்தி நீ செலவுடன்படுதலே அறிவுடைமையாம், அழல் அறிவாகாது என்றாளாயிற்று. நிகர்மலர் - ஒளியையுடைய மலர்.

(391)