(து - ம்) என்பது, தலைமகன் இரவுக்குறி வேண்ட, அதற்கு நேர்ந்த தோழி தலைவிபால் வருதலும் ஆங்கு ஆயம் பல அருகி லியங்குதலானே புலப்படக் கூறாது நம் காதலர் மிக்க அன்பினராதலின் நடுயாமத்து யாம்படுகின்ற துன்பத்தைப் போக்குதலுஞ் செய்வர்; அத்தகையார் இப்பொழுது முன்புற்ற பகற்குறியை வந்து நோக்கி வருந்தியிருக்கின்றனர் போலும்; அவர் நமது மாளிகையை அறிந்திருப்பாராயின் அது மிக்க நலம் எனக் கண்ணாலே குறிப்பாகக் கூறாநிற்பது.
(இ - ம்) இதற்கு, "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.
துறை : (2) வரைவுநீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவுணர்த்தி வற்புறுத்தியதூஉமாம்.
(து - ம்) என்பது, மணஞ் செய்துகொள்வலென்று அகன்ற தலைமகன் நீட்டித்து வாராமையால் வருந்திய தலைமகளைத் தோழி இன்னபொழுது வரையுமெனக் கூறி வலியுறுத்தியதூஉமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)
(இ - ம்) இதற்கு, "ஆங்கதன் தன்மையின் வன்புறை உளப்பட" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| கடுஞ்சுறா எறிந்த கொடுந்தாள் தந்தை |
| புள்இமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென |
| மனையழுது ஒழிந்த புன்தலைச் சிறாஅர் |
| துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின் |
5 | பணைகொள் வெம்முலை பாடுபெற்று உவக்கும் |
| பெண்ணை வேலி உழைகண் சீறூர் |
| நன்மனை அறியின் நன்றுமன் தில்ல |
| செம்மல் நெஞ்சமொடு தாம்வந்து பெயர்ந்த |
| கானலொடு அழியுநர் போலாம் பால்நாள் |
10 | முனிபடர் களையினுங் களைப |
| நனிபேர் அன்பினர் காத லோரே. |
(சொ - ள்) கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாள் தந்தை - கொடிய சுறாமீனை வலையிட்டுப் பிடிக்கின்ற கடிய முயற்சியுடைய தந்தை; புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்று என - நீர்க்காக்கைகள் ஒலிக்கின்ற பெரிய கடலின்கண் வேட்டைக்குச் செல்கின்றவன் உடன்கொண்டு செல்லானாய் நிறுத்திவிட்டுச் சென்றதனாலே; மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர் - மனையின்கண் இருந்தபடி தந்தையுடன் செல்ல விரும்பி அழுதுநின்ற மெல்லிய தலையையுடைய சிறுவர்; துனையதின் முயன்ற தீம் கண்நுங்கின் பணைகொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் - ஆங்கு விரைய முயற்சியாலே கிடைத்த இனிய கண்ணையுடைய பனைநுங்காகிய பருத்தமைந்த விருப்பம் வரும் கொங்கையின் பயனைப்பெற்று மகிழாநிற்கும்; பெண்ணை வேலி உழை கண் சீறூர் நல் மனை அறியின் - பனையோலையிட்டு விசித்த வேலி சூழ்ந்த அகன்ற இடத்தையுடைய சிறிய ஊரிலுள்ள நல்ல நமது மனையகத்தை நங்காதலர் அறியின்; நன்றுமன் - நல்லதேயாம், அஃது அனைவேமும் விரும்பத் தக்கதொன்றாம்; காதலோர் நனி பேர் அன்பினர் - எவ்வாறெனின் அத்தகைய காதலர் நம்பால் மிகப் பெரிய அன்புடையராதலால்; பால் நாள் முனி படர் களையினுங் களைப - இரவு நடு யாமத்தில் நம்மை வருந்துந் துன்பத்தைப் போக்கவேண்டுமெனினும் அவ் வண்ணமே செய்யவல்லவர்காண்; தாம் செம்மல் நெஞ்சமொடு வந்து பெயர்ந்த கானலொடு அழியுநர் போலாம் - அவர் தாம் செம்மாப்புற்ற உள்ளத்துடனே முன்பு வந்து நின்னை முயங்கி அகன்ற கடற்கரைச் சோலையிடத்துள்ள குறியை இப்பொழுது வந்து கண்டு நின்று அழிகின்றனர் போலும்; எ - று.
(வி - ம்) சிறுவர் சுவைப்பதற்குரிய கொங்கைபோறலின் நுங்காகிய முலை யென்றார். தில்ல: இடைச்சொல்லீறு திரிந்தது. பால் நாள் - இரவு பாதியாகப் பகுத்த நடுயாமம்.
பால்நாள் முனிபடர் என்றதனால் இரவு நடுயாமத்து வருந்துகின்றனையாதலின் இரவுக்குறிக்கு உடன்படுவாயாக என்று குறிப்பித்தாள். களைப என்றதனால், நீ உடன்படின் இரவினஞ்சாது போந்து முயங்கி நின் துயரை நீப்பரென்று குறிப்பித்தாள். நன்மனை அறியின், நன்றென்றதனால் உடன்படின் யானே சென்று அழைத்துவந்து நமது மாளிகையை அறியச் செய்வேனென்றாள்.
இறைச்சி:- தந்தையொடு செல்ல முயன்றும் செல்லாதொழிந்த சிறார் பனை நுங்கைப் பெற்று மகிழுமென்றது, தலைவனை மணந்து அவனுடன் சென்று இல்லறம் நிகழ்த்தற்பாலமாகிய யாம் அங்ஙனம் நிகழ்த்தற்கியலாமையின் அவனுடன் கூடுமின்பத்தை நமது இல்லகத்தேயே பெறற்பாலம் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி ஏற்குமாறு தலைவியின் குறிப்பறிதல்.
(பெரு - ரை) மன் தில்ல என்னும் இடைச் சொற்கள் மற்றில்ல எனப் புணர்ந்தன என்க. நன்மனை அறியின் நன்று அவர் பானாள் படர்களையினுங் களைப என்றதனால் இரவுக்குறியிடம் கூறி வரவேற்றமையுணர்க, 'துணையதின்' என்றும் பாடம்.
(392)