(து - ம்) என்பது, தலைமகன் வினைவயிற் பிரிந்தான் குறித்த பருவத்து வந்தில னென்பதறிந்து வருந்திய தலைமகளைத் தோழி ஆற்றியிருக்குமாறு கூறக்கேட்ட தலைமகள், 'என்னைக் காதலன் பிரிந்து கை விடுதலின் யான் இறந்துபடுதற் கஞ்சினேனில்லை; இறந்து வேறொரு பிறப்பாய்விடின் அப்பொழுது அவனை மறக்க நேரிடுமோவென் றஞ்சுகின்றேன்' என நொந்து கூறாநிற்பது.
(இ - ம்) இதனை, ''கொடுமை யொழுக்கந் தோழிக் குரியவை.................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்'' (தொல். கள. 6) என்பதனாற் கொள்க.
| தோளும் அழியும் நாளும் சென்றென |
| நீளிடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் |
| கண்ணுங் காட்சி தௌவின என்நீத்து |
| அறிவு மயங்கிப் பிறிதா கின்றே |
5 | நோயும் பேரும் மாலையும் வந்தன்று |
| யாங்கா குவென்கொல் யானே ஈங்கோ |
| சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் |
| பிறப்புப்பிறி தாகுவது ஆயின் |
| மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே. |
(சொ - ள்) நாளும் சென்றென - காதலன் வருவதாகக் கூறிய பருவஞ் சென்றொழிந்ததனால்; தோளும் அழியும் - என் தோளும் வாட்டமடையும்; நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின - நீண்ட நெறியையுடைய சுரத்துவழியை நோக்கி நோக்கி ஒளியற்று என் கண்களும் காணுதற்குரிய பொலிவழிந்தன; அறிவு என் நீத்து மயங்கிப் பிறிது ஆகின்று - எனது அறிவும் என்னைக் கையிகந்து மயக்க மடைந்து வேறாகாநின்றது; நோயும் பேரும் - நோயை வைத்து உயிர் நீங்காதாகலின் அந் நோயுங் காடேறிச் சென்றொழியாநின்றது; மாலையும் வந்தன்று - உயிரைப் பெயர்த்தற்குரிய மாலைப் பொழுதும் வந்து இறுத்து விட்டது; யான் யாங்கு ஆகுவென் கொல் - இனி யான் எவ்வண்ணமாவேனோ? அறிந்திலேன்; ஈங்குச் சாதல் அஞ்சேன் - இவ்வுலகத்தில் பிறந்தோர் இறப்பரென்பது உண்மையானே அந்த இறப்பு வந்ததேயென்று யான் அஞ்சுகிற்பேனல்லேன்; சாவின் - அவ்வாறு இறந்துழி; பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் என் காதலன் மறக்குவேன் கொல் என அஞ்சுவல் - எனது இனி வரும் பிறப்பு மக்கட் பிறப்பின்றி வேறொரு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை அப்பொழுது மறப்பேனோ வென்று அவ்வொன்றனுக்கே யான் அஞ்சாநிற்பேன்; எ - று.
(வி - ம்.) நோயும் பேருமென்றது, இறக்குமுன் நோய் காடேறிற்றென்னும் வழக்கு. தௌவல் - பொலிவழிதல். பிறப்புப் பிறிதாகுவது மக்கட் பிறப்பின்றி விலங்கு, பறவை முதலாகிய பிறப்பினுட் பிறத்தல். இது, கலக்கம். இவ்வாறே "என்கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந் தனவே" என்றார் கேள்வனைப் பிரிந்து வருந்திய வெள்ளிவீதியார். (குறுந்தொகை - 44).
ஏனையவற்றா லெய்துந் துன்பத்தா லுய்ந்தாலும் இனி வரும் மாலை வருத்தலால் உய்யேனென்னுங் குறிப்பால் மாலையும் வந்ததென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) உண்மையான காதலின் ஆழத்தை இச் செய்யுள் மிக அழகாக எடுத்துக் காட்டுதல் காண்க. இவ்வினிய செய்யுட் கருத்தோடு,
| "துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடு |
| இறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து |
| பிறப்பன் பிறத்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் |
| மறப்பன்கொ லோஎன்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே" |
என வரும் ஆளுடைய அரசர் திருப்பாட்டையும் (4. 113. 8.) நினைக.
(397)