திணை : பாலை.

     துறை : இது, பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறா நின்ற தோழிக்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.

     (து - ம்) என்பது, தலைமகன் வினைவயிற் பிரிந்தான் குறித்த பருவத்து வந்தில னென்பதறிந்து வருந்திய தலைமகளைத் தோழி ஆற்றியிருக்குமாறு கூறக்கேட்ட தலைமகள், 'என்னைக் காதலன் பிரிந்து கை விடுதலின் யான் இறந்துபடுதற் கஞ்சினேனில்லை; இறந்து வேறொரு பிறப்பாய்விடின் அப்பொழுது அவனை மறக்க நேரிடுமோவென் றஞ்சுகின்றேன்' என நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதனை, ''கொடுமை யொழுக்கந் தோழிக் குரியவை.................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்'' (தொல். கள. 6) என்பதனாற் கொள்க.

    
தோளும் அழியும் நாளும் சென்றென 
    
நீளிடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் 
    
கண்ணுங் காட்சி தௌவின என்நீத்து 
    
அறிவு மயங்கிப் பிறிதா கின்றே 
5
நோயும் பேரும் மாலையும் வந்தன்று 
    
யாங்கா குவென்கொல் யானே ஈங்கோ 
    
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் 
    
பிறப்புப்பிறி தாகுவது ஆயின் 
    
மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே. 

     (சொ - ள்) நாளும் சென்றென - காதலன் வருவதாகக் கூறிய பருவஞ் சென்றொழிந்ததனால்; தோளும் அழியும் - என் தோளும் வாட்டமடையும்; நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின - நீண்ட நெறியையுடைய சுரத்துவழியை நோக்கி நோக்கி ஒளியற்று என் கண்களும் காணுதற்குரிய பொலிவழிந்தன; அறிவு என் நீத்து மயங்கிப் பிறிது ஆகின்று - எனது அறிவும் என்னைக் கையிகந்து மயக்க மடைந்து வேறாகாநின்றது; நோயும் பேரும் - நோயை வைத்து உயிர் நீங்காதாகலின் அந் நோயுங் காடேறிச் சென்றொழியாநின்றது; மாலையும் வந்தன்று - உயிரைப் பெயர்த்தற்குரிய மாலைப் பொழுதும் வந்து இறுத்து விட்டது; யான் யாங்கு ஆகுவென் கொல் - இனி யான் எவ்வண்ணமாவேனோ? அறிந்திலேன்; ஈங்குச் சாதல் அஞ்சேன் - இவ்வுலகத்தில் பிறந்தோர் இறப்பரென்பது உண்மையானே அந்த இறப்பு வந்ததேயென்று யான் அஞ்சுகிற்பேனல்லேன்; சாவின் - அவ்வாறு இறந்துழி; பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் என் காதலன் மறக்குவேன் கொல் என அஞ்சுவல் - எனது இனி வரும் பிறப்பு மக்கட் பிறப்பின்றி வேறொரு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை அப்பொழுது மறப்பேனோ வென்று அவ்வொன்றனுக்கே யான் அஞ்சாநிற்பேன்; எ - று.

     (வி - ம்.) நோயும் பேருமென்றது, இறக்குமுன் நோய் காடேறிற்றென்னும் வழக்கு. தௌவல் - பொலிவழிதல். பிறப்புப் பிறிதாகுவது மக்கட் பிறப்பின்றி விலங்கு, பறவை முதலாகிய பிறப்பினுட் பிறத்தல். இது, கலக்கம். இவ்வாறே "என்கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந் தனவே" என்றார் கேள்வனைப் பிரிந்து வருந்திய வெள்ளிவீதியார். (குறுந்தொகை - 44).

     ஏனையவற்றா லெய்துந் துன்பத்தா லுய்ந்தாலும் இனி வரும் மாலை வருத்தலால் உய்யேனென்னுங் குறிப்பால் மாலையும் வந்ததென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) உண்மையான காதலின் ஆழத்தை இச் செய்யுள் மிக அழகாக எடுத்துக் காட்டுதல் காண்க. இவ்வினிய செய்யுட் கருத்தோடு,

  
"துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடு 
  
 இறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து 
  
 பிறப்பன் பிறத்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் 
  
 மறப்பன்கொ லோஎன்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே" 

என வரும் ஆளுடைய அரசர் திருப்பாட்டையும் (4. 113. 8.) நினைக.

(397)