(து - ம்.) என்பது, களவொழுக்கத்து, அணித்தான ஓரிடத்திலே தலைவன் வந்திருப்பதை யறிந்த தோழி, அவன் கேட்டலும் விரைய வரைந்து கொள்ளுமாற்றானே தலைவியை நோக்கி, நமக்குண்டாகிய பழிச்சொல்லை அன்னை யறிந்தால் இற்செறிப்பாளென்று தலைவர்பாற் கூறின், அவர் நம்மைத் தம்மூர்க்குக் கொண்டுபோவரோ எனக் கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, “ஆற்றது.....அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்” (தொல்-கள- 23) வகை என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவர் |
| நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத் |
| தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி |
| யங்கண் அரில்வலை உணக்குந் துறைவனொ |
5 | டலரே, அன்னை யறியின் இவண்உறை வாழ்க்கை |
| அரிய வாகும் நமக்கெனக் கூறிற் |
| கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர் |
| வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக் |
| கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம் |
10 | மணல்மடுத் துரறும் ஓசை கழனிக் |
| கருங்கால் வெண்குருகு வெரூஉம் |
| இருங்கழிச் சேர்ப்பிற்றம் உறைவின் ஊர்க்கே. |
(சொ - ள்.) தோழி கானல் அம் சிறுகுடி கடல்மேம்பரதவர் - தோழீ ! கடற்கரைச் சோலையிலுள்ள சிறுகுடியிலிருந்து கடலின்மேற் செல்லும் பரதவர்; நீல் நிறப் புன்னைக் கொழு நிழல் அசைஇ - நீலநிறத்தையுடைய புன்னையின் கொழுவிய நிழலிலே தங்கி; தண் பெரும் பரப்பின் ஒள்பதம் நோக்கி - தண்ணிய பெரிய கடற் பரப்பிற் செல்லுதற்கு நல்ல அற்றம் பார்த்து; அங்கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு - அவ்விடத்து முறுக்குண்டு கிடந்த வலையைப் பிரித்துப் புலர்த்தா நிற்கும் துறையையுடைய நம் தலைவர்பாற் சென்று; நமக்கு அலர் அன்னை அறியின் - நமக்குண்டாகிய பழிச் சொல்லை அன்னை அறிந்தால்; இவண் உறை வாழ்க்கை அரிய ஆகும் எனக் கூறின் - இனி இங்குத் தங்கி்க் களவொழுக்கத்து வாழ்தல் அரியவாகும் என்று கூறினால்; உமணர் வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றிக் கணநிரை கிளர்க்கும் - உப்பு வாணிகர் வெளிய கல்லுப்பின் விலை கூறிக் கூட்டமாகிய ஆனிரையை எழுப்புகின்ற; நெடுநெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஓசை - நெடிய நெறியிற் செலுத்தும் பண்டிகள் மணலின் மடுத்து முழங்கும் ஓசையைக் கேட்டு; கழனி கருங் கால் வெண் குருகு வெரூஉம் - வயலிலுள்ள கரிய காலையுடைய வெளிய நாரைகள் வெருவா நிற்கும்; இருங்கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கு - கரிய கழி சூழ்ந்த நெய்தனிலத்தின்கணுள்ள தம் உறைவிடமாகிய ஊருக்கு; கொண்டும் செல்வர்கொல் - நம்மை யழைத்துக் கொண்டும் போவரோ? எ - று.
(வி - ம்.) அசைதல் - தங்குதல். பதம் - கொந்தளிப்பு. காற்று மாறியடித்தல் முதலாயின இல்லாத காலம். இவணுறை வாழ்க்கை - புலாலுணக்கல், புள்ஓப்பல் காரணமாக ஆண்டுத் தங்கியவழிநிகழ்ந்த களவொழுக்கத்து வாழ்தல். நிரை-நெறியிற் படுத்திருக்கும் ஆனிரை. கிளர்த்தல் - எழுப்புதல். உரறுதல் - முழங்குதல். துறைவனோடு கூறில் தம்மூர்க்குக் கொண்டுஞ் செல்வர்கொலென மாறிக்கூட்டுக. அன்னையறியின் வாழ்க்கையரிய என்றது ஏதம் ஆய்தல்.
உள்ளுறைகள் :-(1) பரதவர் புன்னையின் கீழிருந்து, கடலிற் செல்லுதற்குப் பதநோக்கி அதுகாறும் வலையை யுணக்குந் துறைவனென்றது, தலைவன் சிறைப்புறத்திலிருந்து, தலைவியைக் கூடுதற்கு யாருமில்லாத பதம் பார்த்து, அதுகாறும் ஆராய்ந்து கொண்டிருப்பனென்றதாம்.
உள்ளுறைகள் :- (2) சகடம் மணலில் மடுத்து முழங்கு மோசைக்குக் கழனி நாரை வெருவுமென்றது, தலைவன் சான்றோரை முன்னிட்டு அருங்கலன் தந்து வரையவரு மணமுரசொலி கேட்பின், அலரெடுக்கும் ஏதிலாட்டியர் வாய்வெருவி யொடுங்காநிற்ப ரென்றதாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுகடாதல். இதனைத் தலைவி கூற்றாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்; (தொ-பொ- 113 உரை.)
(பெரு - ரை.) அம்கண் அரில்வலை எனக் கண்ணழித்து-அழகிய கண்களையும் பின்னலையும் உடைய வலை எனினும் ஆம். அரில்-பின்னல். அன்னை அலர் அறியின் நமக்கு இவணுறை வாழ்க்கை அரியவாகும் எனக் கூறின் என இயைத்துக் கோடலுமாம். மேவும் என்னும், செய்யும் என்னும் எச்சத்து ஈற்றுயிரும் மெய்யுங்கெட்டுமேம் என நின்றது.
(4)