(து - ம்.) என்பது, தலைவன் தான் வினைவயிற் பிரிதலை அறிவிப்பக்கேட்ட தோழி, நீயிர் பிரிந்து சுரம்போகுதல் நுமக்கு உவகையுடைத்தாயிராநின்றது, அங்ஙனம் பிரிதலைக் கேட்டவுடன் இவட்குப் பெரியதோ ரழிவு வாராநின்றது, ஆதலின், ஏற்றது செய்ம்மினெனச் செலவழுங்கக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல்-கற்- 9) என்னும் விதி கொள்க.
| துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின் |
| என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் |
| ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி |
| ஆர்ந்தன வொழிந்த மிச்சில் சேய்நாட்டு |
5 | அருஞ்சுரஞ் செல்வோர்க்கு வல்சி யாகும் |
| வெம்மை யாரிடை இறத்தல் நுமக்கே |
| மெய்ம்மலி யுவகை யாகின்று இவட்கே |
| அஞ்ச லென்ற இறைகை விட்டெனப் |
| பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்தலின் |
10 | களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் |
| ஓரெயில் மன்னன் போல |
| அழிவுவந் தன்றால் ஒழிதல் கேட்டே. |
(சொ - ள்.) துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் - வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் விளங்கிய வெப்பத்தையுடைய கோடை நீடிய மலைப்பக்கத்தில்; ஓய் பசிச் செந்நாய் உயங்கு மரை தொலைச்சி - நுணுகிய பசியையுடைய செந்நாய் வாடிய மரையாவைக் கொன்று போகட்டு; ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் - தின்றொழிந்த மிச்சில்; சேய் நாட்டு அருஞ் சுரஞ் செல்வோர்க்கு வல்சியாகும் - நெடுந்தூரத்திலுள்ள வேற்று நாட்டினின்று செல்லுதற்கரிய பாலைநிலத்தின்கண்ணே செல்லுகின்ற மாந்தர் உண்ணும் உணவாயிருக்கும்; வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கு மெய்ம்மலி உவகை ஆகின்று - வெப்பமுற்ற அரிய வழியிலே செல்லுதல் நுமக்கு உடம்பு நிறைவுற்ற மகிழ்ச்சியுடைத் தாயிராநின்றது; இவட்கு ஒழிதல் கேட்டு அஞ்சல் என்ற இறைகைவிட்டென - இவட்கோவென்றால் நீயிர் பிரிந்து போதலைக் கேட்டவுடன் - 'அஞ்சாதே கொள்' என்ற துணைவயின் வந்த அரசன் கைவிட்டானாக; பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலில் - அப்பொழுது பைங்கண்ணையுடைய யானைப் படையையுடைய பகைவேந்தன் தன் மதிற்புறத்து வந்து தங்கலும்; களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் ஓர் எயில் மன்னன் போல - தனக்கு வந்த துன்பத்தைப் போக்குபவரைக் காணாமல் கலக்கமுற்ற உறுப்புக்கள் அமைந்த உடைந்த ஒரு மதிலையுடைய அரசனைப் போல; அழிவு வந்தன்று - அழிவு வராநின்றது; ஆதலின் ஏற்றதொன்றனைச் செய்ம்மின்; எ - று.
(வி - ம்.)உருப்பு - வெப்பம். என்றூழ் - கோடை. ஒய்பசி - நுட்பமாகிய பசி. ஆரிடை - அரிய வழி. ஆகின்று - ஆகிற்று. எயில் - மதிலுறுப்பு; துணையரசன் காதலனாகவும், அவன் கைவிட்டவுடன் பகையரசன் புகுதல், தலைவன் பிரிந்தவுடன் காமந் தலையெடுத்துப் புகுதலாகவும், ஓருடைமதில் ஏனைய கழிந்து எஞ்சிய நாணமொன்றே அதுவுஞ் சிதைந்து நின்றதாகவும், மன்னன் தலைவியாகவும் உவமையும் பொருளு மொத்தவாறறிக.
இறைச்சி :- செந்நாய்தின்ற மரையாவின் தசை நெறியிற் செல்வோர்க்கு உணவாகுமென்றதனானே, நீயுண்டெஞ்சிய தலைவியினது நலனைப் பசலை யுண்டொழிக்கு மென்றதாம். எனவே முற்பட இறைச்சியாற் பொருள் கொள்ளுமாறு கூறக்கேட்டும் தலைவன் பிரிதலே மேற்கோடலின் வெளிப்படை யுவமத்தானுங் கூறிச் செலவழுங்குவித்தாளாயிற்று. மெய்ப்பாடு - பிறன் கட்டோன்றிய அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.
(பெரு - ரை.) மெய்ம்மலிதற்குக் காரணமான உவகை உண்டாகா நின்றது எனினுமாம். கலங்கிய மன்னன், ஓரெயில் மன்னன் எனத் தனித்தனி கூட்டுக.
(43)