திணை : குறிஞ்சி.

     துறை : இது, சிறைப்புறமாகத் தோழி தலைமகளுக்குரைப்பாளாய்ச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பிரிந்து நீட்டித்துச் சென்ற தலைவன் மீண்டு வந்து சிறைப்புறத்தானாதலை யறிந்த தோழி, அவன்கேட்டு விரைய வரைந்துகொள்ள வேண்டித் தலைவியை நோக்கி அன்னையெடுத்த 'வெறி நின் பசலையைத் தீர்த்திலதே ! இதனைக் கானக நாடனுக்குச் சொல்லுதுமோ'வென உள்ளுறையால் தாங்கள்படுந் துன்பமுஞ் சேரக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்பதனால், வெறியச்சுறுத்தி வரைவு கடாயது எனக் கொள்க.

    
பெருங்களிறு உழுவை அட்டென இரும்பிடி 
    
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல்செல் லாது 
    
நெய்தற் பாசடை புரையும் அஞ்செவிப் 
    
பைதலங் குழவி தழீஇ ஒய்யென 
5
அரும்புண் ணுறுநரின் வருந்தி வைகுங் 
    
கானக நாடற் கிதுவென யானது 
    
கூறின் எவனோ தோழி வேறுணர்ந்து 
    
அணங்கறி கழங்கிற் கோட்டங் காட்டி 
    
வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து 
10
அன்னை அயரும் முருகுநின் 
    
பொன்னேர் பசலைக் குதவா மாறே. 

     (சொ - ள்.) தோழி வேறு உணர்ந்து அணங்கு அறிகழங்கின் கோட்டம் காட்டி வெறி என உணர்ந்த உள்ளமொடு - தோழீ ! தலைவனைப் பிரிந்ததனாலாகிய நின் மெய்வேறுபாட்டைப் பிறிதொன்றாகக் கருதித் தெய்வத்தான் அறியப்படுகின்ற கழங்கில் அம்மாறுபாட்டைக் காட்டுதலாலே வெறி எடுத்தவழித் தீருமென்றறிந்த வுள்ளத்துடனே, மறி அறுத்து அன்னை அயரும் முருகு - யாட்டை அறுத்து அன்னையால் வணங்கப் படாநின்ற முருகவேள்; நின் பொன் நேர் பசலைக்கு உதவாமாறு - நினது பொன் போன்ற பசலையைப் போக்குதற்குப் பயன்படாமையினாலே; உழுவை பெருங்களிறு அட்டு என இரும்பிடி - புலியானது பெரிய களிற்றியானையைக் கொன்றதேயென்று அதன் கரிய பிடி யானை; உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது - வாடிய துன்பத்தோடும் வருத்தத்தோடும் இயங்க மாட்டாமே; நெய்தல் பாசடை புரையும் அம் செவிப்பைதல் அம் குழவி தழீஇ - நெய்தலின் பசிய இலையை ஒக்கின்ற அழகிய செவியையுடைய துன்புற்ற தன் (அழகிய) கன்றினை அணைத்துக்கொண்டு; ஒய்யென அரும்புண் உறுநரின் வைகும் கானக நாடற்கு - விரைவாகத் தீர்த்தற்கரிய புண்ணுற்றாரைப் போல வருத்தமுற்றிருக்கும் கானக நாடனை நெருங்கி; இது என யான் அது கூறின் எவன் ? - நீ தலையளி செய்யாமை காரணமாக இப் பசலை தோன்றிற்றுக் கண்டாய் என்று யான் அதனைக் கூறின் அதனால் ஏதேனும் குற்றப்பாடுளதாமோ? உளதாயிற் கூறிக்காண்; எ - று.

     (வி - ம்.) உழுவை-புலி. அகஞ்செவியுமாம். பைதல்-வருத்தம். ஒய்யென- விரைவாக, கோட்டம்-மாறுபாடு. காட்டி-காட்டவெனத்திரிக்க. முருகு : பண்பாகுபெயர். கழங்கு-கழற்சிவித்துப் பலவற்றை முருகன்முன் போகட்டு வேலன் தன் தலையில் ஆடைசூடிக் கையிற் பல தலைகளிற் சிறு பைகளைக் கட்டிய கோலொன்றேந்தி அக்கோலாற் கழங்கு வித்துக்களை வாரியெடுப்புழிக் குறிப்புக்காணுகின்ற ஒரு வகைக் குறி. இதனை "அருஞ்சுரம்" (அகம் 195 என்ற செய்யுளாலறிக).

     அன்னை வெறியெடுத்தாளெனத் தலைவன் பிரிந்ததனானாய தலைவியின் வேறுபாடு கூறினாள். வெறியெடுப்புப் பசலையைத் தீர்த்தில தென்றதனால் அவளுக்குப் பசப்புத் தோன்றினமை யறிவுறுத்தினாள். நாடனுக்குச் சொல்லுவாமென இதுகாறும் அவன் தம்மைக் கருதாதிருந்தமை யறிவுறுத்தினாள்.

     உள்ளுறை : களிற்றைப் புலி கொன்றதனாலே பிடியானை தன் கன்றொடு நின்று உயங்கா நிற்குமென்றது நம் பெருந்தகைமையை அலர் கெடுத்தலாலே வருந்தி யான் நின்னுடன் சேரநின்று உயங்கா நிற்பே னென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - வரைவுடன்படுத்தல்.

     (பெரு - ரை.) உழுவை பெருங்களிறு அட்டென மாறுக. இது - இப்பசலை, அது - நீ தலையளி செய்யாமையாகிய அது.

(47)