(து - ம்.) என்பது, வரையாது நீட்டித்த தலைமகன் ஒருகால் வந்து ஒரு சிறைப்புறத்தானாதலையறிந்த தோழி அவன் கேட்டு விரைய வரைந்தெய்துமாற்றானே தலைவியை நம் அன்னை நின்னோய் அகலுமாறு கான்யாற்றி லாடிவரக் கூறினாளாதலால் நங் களவொழுக்கத்தை அறிந்தாள் அன்றி அருளினா லேவினள்கொல் அவள் கருதியது யாது கொல்லென மருண்டு கூறா நிற்பது.
(இ - ம்.) இதனை, 'களனும் பொழுதும் . . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண், வகையென்பதனுள் அமைத்துக் கொள்க. இது, தாய் அறிந்தனள் என்று அச்சுறுத்தி வரைவு கடாயது.
| யானஃது அஞ்சினென் கரப்பவுந் தானஃது |
| அறிந்தனள் கொல்லோ அருளினள் கொல்லோ |
| எவன்கொல் தோழி அன்னை கண்ணியது |
| வானுற நிவந்த பெருமலைக் கவாஅன் |
5 | ஆர்கலி வானந் தலைஇ நடுநாள் |
| கனைபெயல் பொழிந்தெனக் கானக் கல்யாற்று |
| முளியிலை கழித்தன 1முகிழிண ரொடுவரு |
| விருந்தின் தீநீர் மருந்து மாகும் |
| தண்ணென உண்டு கண்ணின் நோக்கி |
10 | முனியா தாடப் பெறினிவள் |
| பனியுந் தீர்குவள் செல்கென் றோளே. |
(சொ - ள்.) தோழி யான் அஃது அஞ்சினென் கரப்பவும் - தோழீ ! தலைமகன் வைவிடுதலானே நீ துன்புற்றிருந்தனை இன்ன காரணத்தால் நீதான் இங்ஙனமாயினை என்று கூறாமல் யான் அஞ்சி அதனை மறைத்திருப்பவும். அன்னை வான் உற நிவந்த பெருமலைக் கவாஅன் ஆர்கலி வானம் தலைஇ நடுநாள் கனைபெயல் பொழிந்ெ்தன. - அன்னை என்னை நோக்கி ஆகாயத்தில் மிகவுயர்ந்த பெரிய மலைப்பக்கத்தில் மிக்க இடியோசையையுடைய மேகம் மழைபெய்யத் தொடங்கி நள்ளிருளில் மிக்க மழை பொழிந்ததனாலே; கல்கான யாற்று முனி இலை கழித்தன முகிழ் இணரொடு வருவிருந்தின தீ நீர் - கற்கள் நிரம்பிய காட்டின் கண் ஓடும் யாற்றிலே மரங்கள்காய்ந்த சருகுகளோடு கழித்தனவாகிய முகிழ்த்த பூங்கொத்துக்களையும் அடித்துக்கொண்டு வருகின்ற புதிய இனிய நீரானது; மருந்தும் ஆகும் - இவளுக்குற்ற நோயைத் தீர்க்கும் மருந்துமாகும்; தண் என உண்டு கண்ணின் நோக்கி முனியாது ஆடப்பெறின் - அதனைக் குளிர்ச்சிபெறப் பருகி ஆண்டுள்ள காட்சிகளைக் கண்ணால் நோக்கி நீராட்டத்து வெறுப்பின்றி ஆடப்பெற்றால்; பனியும் தீர்குவள் செல்வ என்றோள் - இவள் மெய்யின் நடுக்கமுந் தீர்குவள், ஆதலால் ஆங்குச் செல்வீர்களாக என்று கூறினள்; தான் அஃது அறிந்தனள்கொல் அருளினள் கொல் கண்ணியது எவன் கொல் ? - ஆதலின் அவள் தான் நமது ஒழுகலாற்றை முன்னமே அறிந்து வைத்தனள் கொல் ? அன்றி அருளினாற் கூறினள் கொல் ? நம் அன்னை கருதியது யாது கொல்? ஆராய்ந்து காண் !: எ - று.
(வி - ம்.) முளியிலை - காய்ந்த சருகு. இணர் - பூங்கொத்து. மருந்து - காமநோய்க்கு மருந்து. பனி - அதனாலுண்டாய நடுக்கம்.
வரைவு நீட்டித்தமையால் இவையுண்டாயினவெனவும், அன்னையும் அறியலாயிற்றெனவே இற்செறித்து வெறியெடுக்குமெனவுந் தலைவன் கொள்ளும்படி கூறியவாறறிக. நோயுடைத் தென்றஞ்சி நீராடற்கு வெறாமே யாடுக வென்னுங் குறிப்பால் முனியாதாடப் பெறினென்றாள். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த அழுகை பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) இதன்கண் மரஞ்செடிகொடிகள் நிரம்பிய காட்டின்கண் மழைபெய்தமையால் அம்மழைநீர் பெருகி வரும் யாற்று நீரில் ஆடின் அது பல்வேறு மருந்துச் சேர்க்கையுடைமையான் ஆடுவாருடைய உடல் நோயைத் தீர்க்கும் என்னுமோர் அருமந்த கொள்கையைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் கொண்டிருந்தமை புலனாதல் உணர்க.
(53)
(பாடம்) 1. | முகிழ்மலரொடு வரு. |