(து - ம்.) என்பது, பகற்குறிவந் தொழுகா நின்ற தலைமகனைத் தோழி 'புனத்திலே தினை கொய்யுங்காலம் அணுகியதாதலின், இனித் தலைவி மனையகம் புகுதா நிற்கும். அங்ஙனம் புக்கபின் நீ ஆண்டெய்துதற் கியலாமையின் அவள் தன்னலந் தொலைந்து வருந்துமென்று யான் மருளுகின்றே' னெனவும் உள்ளுறையால் அவன் விரைவில் வரைந்துகொள்ளுமாறுங் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் .. . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.
| தடங்கோட் டாமான் மடங்கல் மாநிரைக் |
| குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத் |
| துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி |
| கல்லென் சுற்றங் கைகவியாக் குறுகி |
5 | வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால் |
| கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும் |
| மாமலை! நாட மருட்கை யுடைத்தே |
| செங்கோற் கொடுங்குரற் சிறுதினை வியன்புனம் |
| கொய்பதங் குறுகுங் காலையெம் |
10 | மையீர் ஓதி மாணலந் தொலைவே. |
(சொ - ள்.) மடங்கல் மாநிரைக் குன்ற வேங்கை தடகோடு ஆமான் கன்றொடு வதிந்தென - சிங்க முதலாய விலங்கின் கூட்டம் நெருங்கிய மலையின்கணுள்ள வேங்கை மரத்தின் கீழ் வளைந்த கொம்பினையுடைய ஆமான் தன் கன்றொடு தங்கியுளதாக; துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி-அவை துயில்வதனைக் கண்ட பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி கல்லென வொலிக்கும் தன் சுற்றத்தை அவை ஒலியாவாறு தன்கையா லமர்த்திவிட்டு அருகிலே சென்று; வீங்கு சுரை ஞெமுங்க வாங்கித் தீம் பால் கல்லா வன்பறழ் கைந்நிறை பிழியும் - ஆமானின் பால் சுரந்த மடியை அழுந்தும்படி பற்றியீர்த்து இனிய பாலைக் கறந்து - தன்தொழிலையுங் கல்லாத வலிய குட்டியின் கையில் நிறையப் பிழியா நிற்கும்; மா மலை நாட - பெரிய மலை நாடனே !; செங்கோல் கொடுங்குரல் சிறு தினை வியன்புனம் - சிவந்த தாளையும் வளைந்த கதிரையுமுடைய சிறிய தினையின் பெரிய கொல்லை, கொய்பதம் குறுகும் காலை - முற்றுங் கதிர் கொய்யும் பதம் வந்துற்றது, வரவே, தலைமகள் மனையகம் புகுதாநிற்கும், புக்கபின் நீ அங்கே வருதற் கியலாமையின்; மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவு - எமது கரிய ஈரிய கூந்தலையுடையாளது மாட்சிமைப்பட்ட நலம் கெட்டொழியுங் கண்டாய்; மருட்கை உடைத்து - அங்ஙனம் கெடுவதை நோக்கி என்னுள்ளம் மருளுதலையுடையதாயிரா நிற்கும்; ஆதலின், நீ ஆய்ந்து ஏற்றபெற்றிப்பட ஒழுகுவாயாக ! எ - று.
(வி - ம்.) துய் - பஞ்சு. ஞெமுங்குதல் - அழுந்துதல். இஃது அவன் புணர்வு மறுத்தல்.
உள்ளுறை:- மந்தி கொடிய விலங்கிற்கஞ்சாது பதம்பெற்றுச் சென்று பாலைப்பிழிந்து ஊட்டிப் பறழைக் காக்குமாறு, நீயும் கொடிய சுரநெறியிற் சென்று பொருளீட்டிக் கொணர்ந்து கொடுத்து இவளை மணந்து பாதுகாப்பாயாகவென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை) இது, தினைக்கதி்ர் நன்கு முற்றினமையால் இனி இவை கொய்யப்படுதல் ஒருதலை, கொய்பதம் குறுகுங்காலை இவள் நலந்தொலைதல் ஒருதலை, அதனை எவ்வாறு தொலையாமே பாதுகாக்கவியலும் என்று நினைக்கின்றேன், அந்நினைவு எனக்குப் பெரிதும் மருட்கயைுடைத்து என்றபடியாம்.
(57)