(து - ம்.) என்பது, பகற்குறியின்கண்ணே தலைமகளை யத்துய்த்த தோழி, தலைமகன்பாற் சென்று அவனை 'இற்றைநாள் இங்குத் தங்கிப் போவா' யென்றலும், அவன் உடன்படாமை கண்டு 'அவனது செலவை நீக்குமாறு மாலைப்பொழுதிலே தனித்து வருந்தும்படி எம்மைக் கைவிட்டுப் பெயருஞ் சேர்ப்பன் ஏறுகின்ற தேர்க்குதிரைகள் ஒறுக்கப் படுவனவாக' வென்று குதிரைகளின்மேல் வைத்து வரைவுடன்படக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, 'என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அன்புதலையடுத்த வன்புறை' என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் |
| சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின் |
| கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக் |
| கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ |
5 | வீரை வேண்மான் வெளியன் தித்தன் |
| முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின் |
| வெண்கோ டியம்ப நுண்பனி அரும்பக் |
| கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து |
| அவல நெஞ்சினம் பெயர உயர்திரை |
10 | நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் |
| ஓடுதேர் நுண்நுகம் நுழைத்த மாவே. |
(சொ - ள்.) வீரை வேள்மான்வெளியன் தித்தன் முரசு முதல் வெள் கோடு இயம்ப நுண்பனி அரும்ப மாலை விளக்கின் - 'உறையூரின்' கண் அரசாண்ட, வீரைவேண்மான் வெளியன் என்னும் தித்தனுடைய முரசு முதலியவற்றோடு வெளிய சங்குகள் ஒலியாநிற்பச் சிறிய பனியுண்டாக வரிசையாக எடுக்கப்பட்ட விளக்குகளுடனே; கொளீஇய கையற வந்த பொழுதொடு - சென்று எதிர் கொள்ளுகின்ற பிரிந்துறை மகளிர் செயலறும்படி வந்த மாலைப்பொழுதிலே; மெய் சோர்ந்து அவல நெஞ்சினம் பெயர - மெய் சோர்ந்து வருந்திய மனத்தேமாகிப் பெயர்ந்து போகும்வண்ணம்; உயர்திரை நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் - ஓங்கி யெழுகின்ற அலைகளையுடைய நீண்ட நீர்வடிவாகிய கடலின் குளிர்ந்த துறையையுடைய சேர்ப்பனது, ஓடு தேர் நுண் நுகம் நுழைத்த மா - ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்திற் பூட்டப்பட்டுச் செல்லுகின்ற குதிரைகள் தாம்; பெறும் முது செல்வர் பொன் உடைப் புதல்வர் - முற்செய்த தவத்தாற் பெற்ற முதிர்ந்த செல்வரின் பொன்னணிகளையுடைய புதல்வர்; சிறுதோள் கோத்த செவ்அரிப் பறையின் கண் அகத்து எழுதிய குரீஇப் போல - சிறிய தோளில் மாட்டிய செவ்விதின் ஒலிக்கும் பறையின் கண்ணில் எழுதிய குருவி அடி படுதல் போல; கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் - கோலைக் கொண்டு அடிக்க அதனாலே துன்பப்படுவனவாக !; எ-று.
(வி - ம்.) பெருமுதிரென்ற பாடத்திற்குப் பெரிய முதிர்ந்த என்றவாறு.
கோயிலகத்து மாலையில் வாச்சியமொலிப்பித்தலை அம்மாலையை எதிர் கோடலாக உபசரித்தார். நுண்பனியரும்பு மாலையெனவே கூதிர்ப்பொழுதெனக் கருதலானே, இரவிடைமுயக்கம் இன்றியமையாதாயிற்று. இரவில் வெளிப்படையாகத் தங்கவேண்டின் வரைந்தன்றி இயலாமையின் வரைவுதோன்றக் கூறியதாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - குறிப்பினால் வரைவுகடாதல்.
(பெரு - ரை.) முரசு வெண்கோடுமுதல் இயம்ப மாலைக் கொளீஇய விளக்கின் பொழுது என இயைத்து வரிசையாக ஏற்றப்பட்ட விளக்கினையுடைய பொழுது என்றும் பொருள் கூறுதலாகும். கொளீஇய-கொளுத்திய; ஏற்றப்பட்ட.
(58)