திணை : முல்லை.

     துறை : இது, வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீள்வோன் தன் தேர்ப்பாகன் கேட்டு விரைந்து தேரைச் செலுத்துமாற்றானே, நம் தலைவியுறையும் மூதூரானது காட்டகத்ததாயிரா நின்றது. அத்தகைய புறவத்திடத்தளாய்ப் பொறுத்தலை மேற்கொண்டிருப்பினும் குறித்த பருவத்துப் புகுதாவிடின் அவள் துன்புறுமாலென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்குப் "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல்-கற்- 5) என்னும் விதி கொள்க.

    
உடும்பு 1 கொரீஇ வரிநுணல் அகழ்ந்து 
    
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி  
    
எல்லுமுய லெறிந்த வேட்டுவன் 2அம்சுவல் 
    
பல்வேறு பண்டைத் தொடைமறந் தில்லத்து 
5
இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும் 
    
வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து 
    
நம்வயிற் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து 
    
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை 
    
நுண்முகை யவிழ்ந்த புறவின் 
10
பொறைதலை மணந்தன்று உயவுமார் இனியே. 

     (சொ - ள்.) அன்பு கலந்து நம்வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து உள்ளினள் உறைவோள் ஊர் - அன்பு மிகுதலாலே உள்ளங் கலந்து நம்பால் விரும்பிய கொள்கையுடனே என்றுந் தன்னெஞ்சிலே எம்மை நினைந்துறையும் காதலியின் ஊர; உடும்பு கொரீஇ - பகற் பொழுதெல்லாம் சூழ ஆடைபரப்பி நின்று கலைத்தவழி வெளிவந்த உடும்பை ஈட்டியாலே குத்தி; வரிநுணல் அகழ்ந்து - மண்ணின் முழுகி மறைந்து கிடக்கும் வரிகளையுடைய நுணலையை மண் வெட்டியாலே பறித்தெடுத்து; நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி - நெடுகிய கோடுகளையுடைய புற்றுக்களை வெட்டிப் புகை மூட்டியை வைத்துழி வெளிவந்த ஈயலைத் தாழியிலே பெய்து கொண்டு; முயல் எறிந்த வேட்டுவன் - வளைதடியாலே முயலை எறிந்து பற்றிய வேட்டுவன்; எல்லு அம் சுவல் பல்வேறு பண்டத்தொடை மறந்து - இரவிடை அழகிய தோளிலே சுமந்து வந்த பல்வேறு வகையாகிய அப்பண்டங்களைப் பொதிந்த மூடையுடனே ஏனைய கருவிகளையும் மனையகத்தே போகட்டு மறந்து; இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் - ஆங்கு மிகுதியாகப் பருகிய கள்ளின் இனிய மயக்கத்தாலே செருக்குண்டு கிடவா நிற்கும்; வன்புலக் காட்டுநாட்டது - வன்புலத்ததாகிய காடு சூழ்ந்த நாட்டின்கண் உளதாயிரா நின்றது; முல்லை நுண் முகை அவிழ்ந்த புறவில் பொறைதலை மணந்தன்று இனி உயவும் - அங்ஙனம் முல்லையின் நுண்ணிய அரும்பு மலர்ந்த புறவின் கண்ணதாகிய ஊரிலிருந்தாலும் அவள் உள்ளம் பொறுமையுடையதாயிரா நின்றது; இன்று செல்லாவிடில் நனி வருந்தா நிற்கும்; எ - று.

     (வி - ம்.)1 கொருவுதல் - குற்றுதல்; குத்துதலென்று வழங்குகின்றது. கெண்டுதல் - வெட்டுதல், சுவல் - தோள்மேல். மடை- மடுக்கப்படுவது. உயவும் - வருந்தும். ஆடைசூழ விரிப்பது கலைக்கப்பட்ட உடும்பு ஆடைமேலோடினால் அதன் வளைந்த உகிர் துகிலிலே சிக்கிக்கொண்டு விழுமாதலிற் பற்றுதற் கெளிதாதற் பொருட்டு. ஈயல்பிடிப்பது :-கோடுகளை ஒழுங்குபெறச் சிதைத்து மேலேவிழலால் மூடி மீது சேற்றைப்பூசி ஒரு துளைவைத்து அதில் புகைமூட்டியை வைத்தூதினால் உள்ளிருந்த ஈயல் வெளிவரும், அங்கே வேறொரு புழைசெய்து புகைபோகும் வழியுண்டாக்கி அதில் ஒரு தாழியை வைத்திருந்தால் வந்த ஈயலெல்லாம் தாழியிலே படியுமென்றதாம். ஏனைய பற்றுதல் வெளிப்படை.

     உள்ளுறை :- உடும்பு முதலாயவற்றைக் கொண்டுவந்த வேட்டுவன் அவற்றை இல்லின்கண்ணே போகட்டுக் கள்ளின் செருக்கினால் மயங்கிக்கிடக்கு மென்றது, அயல்நாடு சென்று பலவகையாலே பொருளீட்டிவந்த யான் அவற்றை இல்லின்கண்ணிட்டு நம் காதலி நலனையுண்டு காமக்களியாலே செருக்கெய்தி மயங்கிக்கிடப்பேனென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - பாகன் தேர்கடாவல்.

     (பெரு - ரை.) கார்ப்பருவத் தொடக்கத்தே ஒருதலையாக மீண்டு வருகுவல் கவலற்க என்று போயினன் ஆகலின், அப்பொழுது கார்ப்பருவம் வந்துவிட்டமையையும் தான் பருவம் கடந்து வருகின்றமையையும் பாகற்குணர்த்துவான், அவள் ஊர் காட்டு நாட்டது, ஆண்டுப் புறவில் முல்லை நுண்முகை அவிழ்ந்த ஆதலால், இனி அவள் நெஞ்சம் பொறாது பெரிதும் உயவும் ஆதலால் விரைந்து செலுத்துக என்றான் என்க. புறவின் நுண்முகை யவிழ்ந்தமை பொறைதலை மணவாமைக்கும் உயவுதற்கும் ஏதுவாதல் நுண்ணிதின் உணர்க. முல்லை முகையவிழ்ந்த தென்றது - கார்ப்பருவம் வந்துவிட்டதுகாண் என்றுணர்த்தியவாறாம்.

(59)
  
 (பாடம்) 1. 
கொலீஇ.
 2. 
அம்சுவல.