திணை : பாலை.

     துறை : இது, முன்னொருகாலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவழுங்குவித்தது.

     (து - ம்.) என்பது, பொருள்வயிற் பிரியக்கருதிய தலைமகன் "யான் முன்பு சுரத்தின்கட் சென்றபொழுது, விசும்பிலெழுந்த திங்களை நோக்கி மலைமீது எம் காதலியிடத்து நிரம்பிய திங்களொன்று எம்முடையதென நினைத்திருந்தேனல்லனோ" வென்று முன்பு பொருள்வயிற் பிரிந்ததையும் நிலத்தின் கொடுமையையும், அங்கே சென்ற பொழுது காதலியைக் கருதுங் கவர்ச்சியையுங் கூறிச் செலவழுங்காநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத்தானும்" (தொல்-கற்- 5) என்னும் விதிகொள்க.

    
வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை 
    
கந்துபிணி யானை 1 அயர்வுயிர்த் தன்ன 
    
என்றூழ் நீடிய 2 வேய்பிறங் கழுவத்துக்  
    
குன்றூர் மதியம் நோக்கி நின்றுநினைந்து 
5
3 உள்ளினேன் அல்லனோ யானே முள்ளெயிற்றுத்  
    
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல் 
    
எமது முண்டோர் மதிநாள் திங்கள்  
    
உரறுகுரல் வெவ்வளி யெடுப்ப நிழற்ற 
    
உலவை யாகிய மரத்த 
10
கல்பிறங்கு 4 மாமலை உம்பரஃ தெனவே. 

     (சொ - ள்.) வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை- வேர்கள் ஒன்றோடொன்று பிணிப்புண்ட மூங்கில்களிலே காற்று மோதுதலால் உண்டாகிய ஒலிக்கின்ற ஓசையானது; கந்து பிணி யானை அயர்வுயிர்த்து அன்ன - தறியிலே கட்டப்பட்ட யானை வருந்தி நெட்டுயிர்ப்பெறிந்தாற் போன்றது; என்றூழ் நீடிய வேய் பிறங்கு அழுவத்து - கோடை நிலைபெற்ற மூங்கில் பிறங்கிய சுரத்து நெறியில்; குன்று ஊர் மதியம் நோக்கி நின்று நினைந்து-மலைவாய்ச் செல்லும் திங்களை நோக்கி நின்று சிறிது கருதி; முள் எயிற்றுத் திலகம் தைஇய தேம் கமழ் திருநுதல் ஓர் நாள் மதித்திங்கள் எமதும் உண்டு - முட்போன்ற பற்களையும் திலகமிட்ட மணங் கமழ்கின்ற அழகிய நெற்றியையும் உடைய நாள் நிரம்பிய மதித்திங்கள் என்பது ஒன்று எம்முடையதும் உண்டு; உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழல் தப உலவை ஆகிய மரத்த கல்பிறங்கு மாமலை உம்பர் அஃது என - அத்திங்கள் இப்பொழுது யாண்டையதோ வெனில் முழங்குகின்ற ஓசையையுடைய வெவ்விய காற்றானது வீசுதலாலே இலையுதிர்ந்து நிழல் செய்யும் தன்மை நீங்க வெறுங் கொம்புகளாய் நிற்கின்ற மரங்களையுடைய கற்கள் விளங்கிய கரிய மலை மீதுள்ளதாயிரா நின்றது என்று; உள்ளினேன் அல்லனோ - யான் நினைத்திருந்தேன் அல்லனோ ? எ - று.

     (வி - ம்.) என்றூழ்-கோடை. உரறுதல்-முழங்குதல். உலவை-காய்ந்த கிளையுமாம். உள்ளினேனென்பது முன்பு பொருள்வயிற் பிரிந்தது. என்றூழ் நீடிய அழுவமென்பது நிலத்தின் கொடுமை கூறியது. திருநுதல் முதலாயின காதலியைக் கருதிய கவற்சி. மெய்ப்பாடு - அழுகை. பயன் - செலவழுங்கல்.

     (பெரு - ரை.) நிழற்பல உலவை ஆகிய என்றும் பாடம். இது சிறப்புடையதன்று. இனி இச்செய்யுளை, குன்றூர் மதியம் நோக்கி நினைந்து உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழல்தப உலவையாகிய மரத்த கல்பிறங்கு (இம்) மாமலை உம்பரது நாள் திங்கள் (போன்று) முள் எயிற்றுத்திலகம் தைஇய தேம் கமழ் திருநுதல் ஓர்மதி எமதும் உண்டு என்று இயைத்து மலைவாய்ச் செல்லும் திங்களை நோக்கி நின்று சிறிது கருதி முழங்குகின்ற ஓசையையுடைய வெவ்விய காற்றானது வீசுதலாலே நிழல்கெட வெறும் கொம்புகளாய் நிற்கின்ற மரங்களையுடைய கற்கள் விளங்கிய கரிய மலைமீதுள்ள இந்த முழுத்திங்கள் போன்ற முட்போன்ற பற்களையும் திலகமிட்ட மணங்கமழ்கின்ற அழகிய நெற்றியையுமுடைய ஒரு திங்கள் எம்முடையதும் உண்டு என்று உள்ளினேன் அல்லனோ? என்று பொருள் கூறவேண்டும், இன்றேல் தலைவியின் முகம் மாமலை உம்பரஃது என்னல் பொருந்தாமை ஆராய்ந்துணர்க.

     இனி இச்செய்யுளை ஆசிரியர் நச்சினார்க்கினியர் “நிகழ்ந்தது நினைத்தற் கேதுவாகும்” (தொல்-அகத்- 43) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டினர். ஆசிரியர் இளம்பூரண அடிகளார் “நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே” (-- 44) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டினர்.

(62)
  
 (பாடம்) 1. 
அயா.
 2. 
வேர் பயில் அழுவத்து.
 3. 
உள்ளினான் அல்லனோ.
 4. 
உயிர் மலை.