(து - ம்.) என்பது, தலைவன் கொண்டுதலைக் கழிதலும் அவ்வுடன் போக்கினை யறிந்த நற்றாய் 'உண்மகிழ்வோடு அஃது அறனெனக் கொண்டிருந்தும் தனிமையில் வெஞ்சுரஞ்சென்றமை கருதி ஆற்றாளாய் என் மெல்லிய இளமகள் தன்னை விரும்பும் நல்ல காதலனைப் பெற்றனளாயினும், கொடிய சுரத்திற் செல்லுதலாலே மலர் போன்ற அவளுடைய கண்கள், சிவந்து ஒளி மழுங்கி யலமருங்கொல்'லென மனையகத்து மருண்டு வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "தன்னும் அவளும்" (தொல்-அகத்- 36) என்னும் நூற்பாவின்கண் அச்சம் என்பது பற்றி நற்றாய் கூறியது என்க.
| மிளகுபெய் தனைய சுவைய புன்காய் |
| உலறுதலை உகா அய்ச் சிதர்சிதர்த் துண்ட |
| புலம்புகொள் நெடுஞ்சினை யேறி நினைந்துதன் |
| பொறிகிளர் எருத்தம் வெறிபட மறுகிப் |
5 | புன்புறா உயவும் வெந்துகள் இயவின் |
| நயந்த காதலற் புணர்ந்தன ளாயினுஞ் |
| சிவந்தொளி மழுங்கி அமர்த்தன கொல்லோ |
| கோதை மயங்கினுங் குறுந்தொடி நெகிழினுங் |
| காழ்பெய் அல்குற் காசுமுறை திரியினும் |
10 | மாணலங் கையறக் கலுழுமென் |
| மாயக் குறுமகள் மலரேர் கண்ணே. |
(சொ - ள்.) மிளகு பெய்து அனைய சுவைய உலறு தலை உகா அய் புன்காய் - மிளகினை யிட்டுவைத்தாற் போன்ற சுவையுடைய காய்ந்த கிளைகளையுடைய உகாய் மரத்தினுள்ள புல்லிய காயை; சிதர் சிதர்த்து உண்ட புலம்பு கொள் புன் புறா வண்டுகள் நெருங்காதபடி போக்கி உண்டதனாலாகிய வருத்தமிக்க புல்லிய புறா; நெடு சினை ஏறி நினைந்து பொறிகிளர் தன் எருத்தம் வெறிபட மறுகி உயவும் - நெடிய கிளை மேலேறித் தான் தின்ற தவற்றைக் கருதி வரைகள் விளங்கிய தன் பிடரி சிலிர்த்துத் தின்ற வெறிப்பினால் மறுக்கமுற்று வருந்தாநிற்கும்; வெம் துகள் இயவில் நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும் - வெப்பங்கொண்ட புழுதிமிக்க நெறியின் கண்ணே தன்னை விரும்பிய காதலனைக் கூடிச் சென்றனளாயினும்; கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும் காழ் பெய் அல்குல் காசு முறை திரியினும் - சூடிய பூமாலை சிக்குண்டாலும் குறிய வளை கையினின்று நழுவினாலும் காஞ்சியணிந்த அல்குலின் மேல் நாலுகின்ற பொற்காசு இனம் முறை பிறழ்ந்து கிடந்தாலும்; மாண் நலம் கையறக் கலுழும் என் மாயம் குறுமகள் மலர் ஏர் கண் - அவற்றைத் திருத்துதற்குத் தெரிந்திலளாய்த் தனது மாட்சிமைப்பட்ட அழகானது அழிந்தொழியுமாறு கலுழாநிற்கும் என் அழகிய இளம் புதல்வியின் மலர்போன்ற கண்கள்; சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல் - வெய்ய சுரத்திற் செல்லுங் கடுமையாலே சிவந்து ஒளி மழுங்கி்க் கலக்க மடைந்தனவோ ? இவ்வொன்றற்கே வருந்தா நிற்பேன்; எ - று.
(வி - ம்.) உலறுதலை - காய்ந்த கிளை. சிதர் - வண்டு. இயவு - நெறி. காழ் - எட்டுக் கொத்துக்களையுடைய அரைப்பட்டிகை. புலம்பு கொள்புன்புறாவென இயைக்க. மாயம் - அழகு. குறுமகள்-இளமகள். மனைமருட்சி - இல்லகத்து மருண்டிருத்தல்.
"நயந்த காதலற் புணர்ந்தன ளாயினும்" எனத் தான் அதனை அறத்தாறெனக் கருதியது கூறினாள். நெகிழினும் திரியினும் கையறக் கலுழுமென்றது மிக்க இளமைப் பருவத்தைக் குறித்தது. இவ்வளவு இளம்பருவத்தாள் ஓராடவனைப் பெற்றுச் சென்றனளென அவளறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் வியந்து மகிழ்ந்தனளாம். கண் கலங்காமற் சென்றுழி முற்றுமே மகிழ்வாளாவது,
இறைச்சி :- புறா தின்னத்தகாத காயைத் தின்று கிளையிலேறி மறுக்கமுற்று வருந்தா நிற்றல் போல, என்மகள் ஏதிலாளனது மாயவின்பத்தினை நன்றெனக் கொண்டு சென்று பின்பு மறுக்கமுற்று வருந்தா நிற்குமோ வென்றதாம். மெய்ப்பாடு - உவகைக்கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.
(பெரு - ரை.) இனி, இச்செய்யுளை "நயந்த காதலற் புணர்ந்தனளாயினும் என் குறுமகள் கண் புன்புறா உயவும் வெந்துகள் இயவில் சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல் என இயைத்துக்கோடல் வேண்டும்". இங்ஙனம் இயைப்பின் 'வெய்ய சுரத்தில் செல்லும் கடுமையாலே' என மிகையாக ஓர் ஏது வருவித்துக் கொள்ளல் வேண்டாமை உணர்க.
மாயக்குறுமகள் என்றது வஞ்சமுடைய சிறுமி என்றவாறு. இஃது அவள் தன்னை வஞ்சித்தமை கருதிக் கூறியபடியாம் என்க.
புறாத் தின்னத்தகாத காயைத் தின்று கிளையிலேறி மறுக்கமுற்று வருந்தாநிற்றல்போல என்றது இறைச்சியன்று உள்ளுறையுவமையே ஆகும். என்னை ? உவமமும் பொருளுமாகக் கொள்ளவைத்தமையான் என்க. இறைச்சி அங்ஙனம் உவமமும் பொருளுமாகக் கோடற்கியலாவகை வரும்.
(66)