(து - ம்.) என்பது, பகற்குறிவந்து புணர்ந்து நீங்குந் தலைமகனைத் தோழி நோக்கி "மாலைப்பொழுதாயிற்று, நெறி ஏதமுடைத்து, எமரும் வேட்டை மேற்சென்றனராதலால், எம்மூரின்கண் வந்து இன்றிரவு தங்கிச் செல்வாயாக'வெனப் பிரிவாற்றாமை கூறுவாள் போன்று குறிப்பினால் வரைவு தோன்றக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் வகை என்பதனால் அமைத்துக் கொள்க.
| சேய்விசும் பிவர்ந்த செழுங்கதிர் மண்டிலம் |
| மால்வரை மறையத் துறைபுலம் பின்றே |
| இற 1 வருந்தி யெழுந்த கருங்கால் வெண்குருகு |
| 2 வெண்குவட்டு அருஞ்சிறைத் தாஅய்க் கரைய |
5 | கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே |
| கணைக்கான் மாமலர் கரப்ப மல்குகழித் |
| துணைச்சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை |
| எல்லிமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஇ |
| எமரும் வேட்டம் புக்கனர் அதனால் |
10 | தங்கின் எவனோ தெய்ய பொங்குபிசிர் |
| முழுவிசைப் புணரி எழுதரும் |
| உடைகடற் படப்பையெம் உறைவின் ஊர்க்கே. |
(சொ - ள்.) சேய்விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் மால்வரை மறையத் துறை புலம்பின்று - சேய்மைக் கண்ணே ஆகாயத்திலேறி வந்த செழுவிய கிரணங்களையுடைய ஆதித்த மண்டிலம் பெரிய அத்தம் என்னும் சிலம்பினூடு சென்று மறைதலானே யாருமின்றி நமது கடற்றுறை தனிமையா யிராநின்றது; இற அருந்தி எழுந்த கருங்கால் வெள் குருகு-இறா மீனைத் தின்றெழுந்த கரிய காலையுடைய வெளிய நாரைகள்; வெண் குவட்டு அருஞ் சிறை தாஅய்க் கரைய கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டன - வெளிய உப்புக் குவட்டின் மேலாக அரிய சிறகை வீசிப் பறந்துசென்று கரையிலுள்ள கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களிலே தங்குதல் கொண்டன; கணைக் கால் மா மலர் கரப்ப மல்குகழித் துணைச் சுறா வழங்கலும் வழங்கும்-திரண்ட தண்டினையுடைய நெய்தல் (கரிய) மலர் மறையும் படியாக நீர் பெருகுங்கழியின் கண்ணே துணையோடு சுறாமீன் இயங்குதலுஞ் செய்யும்; ஆயிடை எல் இமிழ் பனிக் கடல் மல்கு சுடர்க் கொளீஇ - அவ்விடத்தில் இரவில் ஒலிக்கின்ற குளிர்ச்சியையுடைய கடலில் மிக்க விளக்கங்களைக் கொண்டு; எமரும் வேட்டம் புக்கனர் - எம் சுற்றத்தாரும் மீன்வேட்டையாடச் சென்றுவிட்டனர்; அதனால் பொங்கு பிசிர் முழவு இசை புணரி எழுதரும் உடை கடல் படப்பை - ஆதலால் பொங்குகின்ற பிசிரையும் முழவு போல ஒலித்தலையுமுடைய அலையெழுந்து உடைந்து விழுகின்ற கடற்கரையிலுள்ள நெய்தனிலத்தில்; எம் உறைவின் ஊர்க்குத் தங்கின் எவன் - யாங்கள் உறைதலையுடைய எம் மூரின்கண் இன்றிரவிலே தங்கிச் செல்லின் என்ன குறைபாடுண்டாகுமோ? எ-று.
(வி - ம்.) வெண்குவடு - வெளியமணற் குன்றுமாம். இறைகொள்ளல் - தங்குதல். வழங்கலும் வழங்கும், முழுவதூஉங் காரிய வாசகமாயே நின்றது. ஊர்க்கு : ஊரின்கண் : உருபுமயக்கம்.
துறைபுலம்பின்று என மக்களியங்காமையும் இயங்காதவழி ஆறலைப்போரால் ஏதநிகழுமென்பதுங் குறிப்பித்தாள். தலைவியோடுறைகவென்பாள், குருகுகள் மனையிலே தங்குதல் கொண்டன காணுதி ரென்றாள். நெறியிலே தன் கொம்பா லூறிழைக்குஞ் சுறாமீன் துணையோ டியங்கலுமாமென இதுவும் நெறியினது ஏதங்கூறித் தலைவியொடு தலைப் பெய்திருக்கப் பணித்ததாம். எமரும் வேட்டம்புக்கன ரெனத் தமரா லேதநிகழாமை கூறினவள் செல்லுதிரேல் நெறியில் அவர்கண்டு ஊறிழைப்பினும் இழைப்பரென அச்சுறுத்தினாளுமாம். இரவில் தலைவியின் மனையகத்துத் தங்குவதனை விரும்புதற்கு வரைந்தன்றி வெளிப்படையாகத் தங்கவீயலாததாதலாலிது வரைவுகடாதலாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) உறைவு இன் ஊர் எனக் கண்ணழித்துத் தங்குதற் கினிமையான ஊர் என அதனாலும் தங்குதற்கோர் ஏதுக் காட்டினள் எனக் கூறல் சிறப்பாம். எம்மூர் உறை இன்னூர் எனத் தனித்தனி கூட்டுக. இச் செய்யுளை ஆசிரியர் நச்சினார்க்கினியர் "இது இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது" என வேறொரு துறையாகக்கொண்டு இதனை, "புணர்ச்சிவேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் துறைக்கு எடுத்துக்காட்டுவர்.
செங்கதிர் என்றும், மாமலர் கனைப்ப என்றும், பொங்கதிர், முழவிசை என்றும் உழைகடல் என்றும் பாடவேற்றுமைகள் உள.
(67)
(பாடம்) 1. | அருந்தெழுந்த. 2. | வெண்கோட்டு. | |