திணை : பாலை.

     துறை : இது, தலைவனைத் தோழி செலவழுங்குவித்தது.

     (து - ம்.) என்பது, தலைவன் தான் பொருள்வயிற் பிரிவதைத் தலைவிக்குணர்த்தும்படி வேண்டத் தோழி, 'நும்பாலுள்ள கண்ணோட்டத்தால் அவள் விடுவிப்பினும் புறாக்கள் ஒன்றனையொன்று புணர்ச்சிக்கு அழைக்கின்ற குரலைக் கேட்டு அவள் பெரிதும் ஆசையாலழிந்து தேயுமாறு அவளைத் தைவந்து விடுத்துப் போதற்கும் வன்மையுடையீரோ' வென்று அவன் செலவழுங்கக் கூறாநிற்பது,

     (இ - ம்.) இதற்கு, "பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்," (தொல்-கற்- 9) என்னும் விதிகொள்க.

    
மன்னாப் பொருட்பிணி முன்னி இன்னதை 
    
வளையணி முன்கைநின் இகுளைக்கு உணர்த்தெனப் 
    
பன்மாண் இரத்தி ராயிற் சென்மென 
    
விடுந ளாதலும் உரியள் விடினே 
5
கண்ணும் நுதலும்நீவி முன்நின்று 
    
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர் 
    
வகையமர் நல்லில் அகவிறை உறையும் 
    
வண்ணப் புறவின் செங்காற் சேவல் 
    
வீழ்துணைப் பயிருங் கையறு முரல்குரல் 
10
நும்மிலள் புலம்பக் கேட்டொறும் 
    
பொம்மல் ஓதி பெருவிதுப் புறவே. 

     (சொ - ள்.) ஐய மன்னாப் பொருள் பிணி முன்னி இன்னதை வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என - ஐயனே ! நிலையில்லாத பொருளைத் தேட ஆசை பிணித்தலானே அதன்கண்ணே கருத்தைச் செலுத்தி இக்காரியத்தை வளையணிந்த முன் கையையுடைய நின் தோழிக்குக் கூறுவாயாக என்று; பல் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என விடுநள் ஆதலும் உரியள். பலவாக மாட்சிமைப்பட இரந்து கூறுகின்றனிராதலால், யான் சென்று கூறின் நீயிர் செல்லுவீராக என்று உம்மை விடுத்தலும் செய்வாள்; விடினே - அங்ஙனம் அவள் நும்மை விடுப்பினும்; செல்வர் வகை அமர் நல் இல் அக இறை உறையும் வண்ணம் செங் கால் புறவின் சேவல் - செல்வருடைய பலகட்டுக்கள் அமைந்த வீட்டின்கண்ணே உள் இறப்பிலிருக்கும் அழகிய சிவந்த கால்களையுடைய சேவற்புறா; வீழ்துணைப் பயிரும் கையறு முரல் குரல் - தான் விரும்பிய பெண்புறாவைப் புணர்ச்சிக்கு அழைக்கும் காமத்தால், செயலறவு கொண்டு ஒலிக்கின்ற அக்குரலோசையை; நும் இலள் புலம்பக் கேள் தொறும் - நும்மைப் பிரிந்து தனிமையாயிருந்து கேட்குந்தோறும்; பொம்மல் ஓதி பெருவிதுப்புற - எம் பொலிவு பெற்ற கூந்தலையுடைய தலைவி பேரவாவால் நடுங்கி வருந்துமாறு; முன் நின்று கண்ணும் நுதலும் நீவிர் பிரிதல் வல்லிரோ - அவளுக்கு முன்பு நின்று நீயிர் அவளுடைய கண்ணையும் நெற்றியையும் தைவந்து பிரிந்து போதற்கு வன்யைுடையீரோ ? உடையீராயின் சென்று சொல்லுவேன்; எ - று.

     (வி - ம்.) செல்வரக இறையுறையும் புறவு - செல்வமாந்தரால் வளர்க்கப்பட்டு அவரது உள்ளிறப்பில் விளையாட்டயரும் புறவு. பயிர்தல் - புணர்ச்சிக்கழைத்தல், பலபடிபயிர்தலால் கையற்ற முரல்குரலுமாம். விதுப்பு - ஆசையினால் வருந்துகின்ற வருத்தம்.

     இன்னே நிலையுற்ற இவளது காமவின்பத்தை இகந்து நிலையில்லாத பொருளை விரும்பிய நும்மறிவிருந்தபடிதா னென்னையென்பாள் மன்னாப் பொருட்பிணி முன்னினிரென்றாள். புறாக்கள் இடைவிடாது புல்லிப் புணருமியல்பின. அவற்றை நோக்குவார்க்குக் காமவின்பமீதூருமாதலின் அதன் பொருட்டும் புறாவளர்ப்பது மக்களுக்கியல்பு. மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - செலவழுங்குவித்தல்.

     (பெரு - ரை.) செல்வர் என்றது முன்னிலைப் புறமொழி எனினுமாம். செல்வராகிய நும் நல்லில் என்பது பொருள். மன்னாப்பொருன் என்றது பொருண்மேற் காதல் உணர்ந்தோர்க்குத் தகாது எனத் தகுதியது அமைதியை எடுத்துக்காட்டியபடியாம். முன்னின்று பிரிதன் வல்லீரோ? என்றது அன்பினது அகலத்தையும் அகற்சியது அருமையையும் ஒருங்கே உணர்த்தியபடியாம்.

(71)