(து - ம்.) என்பது, சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்டு வரையுமாற்றானே தலைவியைநோக்கி 'முன்பு யான் அன்னைக்கு அஞ்சுவேனாதலிற் பெயர்ந்து போவாயென்று கூறினும், நம்மைவிட்டு நீங்காத தலைவன் இப்பொழுது நம் ஆயம் அறியினும் என்ன ஏதம் வருமோ வென்று நடுங்குகின்றன னாதலின், நம்பால் அவன் வைத்த நட்பு இனி ஒழியுமென யானஞ்சுகின்றே'னென்று தோழி கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, களனும் பொழுதும் , , , , , , ,அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்” (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் வகை என்பதனால் அமைத்துக்கொள்க.
| பேணுப பேணார் பெரியோர் என்பது |
| நாணுத்தக் கன்றது காணுங் காலை |
| உயிரோர் அன்ன செயிர்தீர் நட்பின் |
| நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரிது |
5 | அழிதக் கன்றால் தானே கொண்கன் |
| யான்யாய் அஞ்சுவல் எனினுந் தானே |
| பிரிதல் சூழான் மன்னே இனியே |
| கானல் ஆயம் அறியினும் ஆனாது |
| அலர்வது அன்றுகொல் என்னும் அதனால் |
10 | புலர்வது கொல்லவன் நட்பெனா |
| அஞ்சுவல் தோழி என் நெஞ்சத் தானே. |
(சொ - ள்.) தோழி பெரியோர் பேணுப பேணார் என்பது அது காணும் காலை நாணுத் தக்கன்று - தோழீ பெரியோர்தாம் விரும்பி ஒழுகவேண்டுவனவற்றில் அங்ஙனம் விரும்பி யொழுகாரென்று கூறுவதுதான், அதனை ஆராய்ந்து நோக்குமிடத்து எனக்கே வெட்கம் உடைத்தாயிராநின்றது; உயிர் ஓர் அன்ன செயிர்தீர் நட்பின நினக்கு யான் மறைத்தல் யாவது மிகப்பெரிது அழிதக்கன்று - உயிர் ஒன்றாயிருந்தாலொத்த குற்றமற்ற நட்பினையுடைய நினக்கு யான் மறைப்பதானது எவ்வளவு பெரிய மானக் கேடாயிராநின்றது; யான் யாய் அஞ்சுவல் எனினும் தானே பிரிதல் சூழான் மன் - முன்பு, "யான் அன்னைக்கு அஞ்சுவேனாகலின் நீ அகன்று போவாய்" என்றாலும் அக்காலத்து நம் கொண்கன் நம்மைவிட்டுப் பிரியக் கருதுபவனல்லன், அது கழிந்தது; இனி கானல் ஆயம் அறியினும் ஆனாது அலர்வது அன்று கொல் என்னும் - இப்பொழுதோ எனின் இக்களவொழுக்கம் கானலின்கண் விளையாட்டயர்கின்ற தோழியர் கூட்டம் அறிவதாயினும் அடங்காமல் எங்கே வெளிப்படுமோ? என்று அஞ்சிக் கூறாநிற்பன்; அதனால் அவன் நட்பு புலர்வதுகொல் எனா என் நெஞ்சத்தான் அஞ்சுவல்-ஆதலின் அவனது நட்பு இல்லையாய் விடுமோவென்று என்னெஞ்சத்தில் அஞ்சாநிற்பேன்; எ - று.
(வி - ம்.) மன் - கழிவு. 'பேணுப. . . . . தக்கென்று' என்றது நம்பால் விரும்பியொழுகுந் தலைமகன் இப்பொழுது அப்படியொழுகவில்லையென்று நான் நினக்குச் சொல்லவருவது எனக்கே வெட்கமுடைத்தென்றவாறு. இது பிறிது மொழிதலணி, அன்னையறியின் ஏதம் பயக்கு மென்றறிந்துவைத்தும் நம்மை நீங்காமை காதல்மிகுதிபற்றி, இப்பொழுது தோழியர் கூட்டம் அறியினும் அஞ்சியகல்வது அக்காதல் குறைந்தமைபற்றி. இனி அவனட்பு அஃகியது போலுமென்றதாம். கேட்டிருந்த தலைமகன் இதனைத் தலைவியறியின் இறந்துபடுமோவென்று பிற்றைஞான்று வரைவொடு புகுவானவது. மெய்ப்பாடு -அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுடன் படுத்தல்.
(பெரு - ரை.) இச் செய்யுளை ஆசிரியர் நச்சினார்க்கினியர், "உயிராக்காலத்து உயிர்த்தலும்" (தொல்-கள- 20) என்னும் விதிபற்றித் தலைவி, தலைவனொடு தன்திறத்து ஒருவரும் ஒன்று உரையாதவழித் தனதாற்றாமையான் தன்னோடும் அவனோடும் பட்டன சிலமாற்றம் தோழிக்குக் கூறியது எனத் தலைவி கூற்றாகக் கொண்டனர்.
இனி ஆசிரியர் இளம்பூரண அடிகளாரும் தலைவி கூற்றாகவே கொண்டு இதனை "பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள் அருமை சான்ற நாலிரண்டு வகையிற் பெருமை சான்ற இயல்பின் கண்ணும்" (தொல்-கள- 20) என்புழிக் கூறப்பட்ட எண்வகைத் துறைகளுள் வைத்து அச்சத்தின் அகறல் என்னுந் துறைக்கு எடுத்துக்காட்டினர். "எனினுந் தானெற்பிரிதல் சூழான்" என்பதும் பாடம்.
(72)