(து - ம்.) என்பது, தோழியை மதியுடம் படுக்கச் சென்ற தலைமகன், அவள்பாற் குறையுற்று நிற்றலைக் கண்டு இவனொரு குறையுடையான்போலுமென அத்தோழி ஆராயுங் காலத்து அதுவரையும் பொறாத தன்னெஞ்சை நோக்கி நெஞ்சே, நமது காதலியினோக்கமே நம்மை இவள்பாலிரந்துபின் னிற்கும்படி செலுத்துகின்றதாகலின், இவள் உடன்படுங்காறும் நீ வருந்தாதே யென்று அஃது ஆற்றுமாறு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "தோழி குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்." (தொல்-கள- 11 ) என்னும் விதி கொள்க.
| மலையமா ஊர்ந்து போகிப் புலையன் |
| பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கவர் |
| அருங்குறும்பு எருக்கி அயாவுயிர்த் தாஅங்கு |
| உய்த்தன்று மன்னே நெஞ்சே செவ்வேர்ச் |
5 | சினைதொறுந் தூங்கும் பயங்கெழு பலவின் |
| சுளையுடை முன்றில் மனையோள் கங்குல் |
| ஒலிவெள் ளருவி ஒலியின் துஞ்சும் |
| ஊரலஞ் சேரிச் சீறூர் வல்லோன் |
| வாளரம் பொருத கோண்ஏர் எல்வளை |
10 | அகன்தொடி செறித்த முன்கை ஒண்ணுதல் |
| திதலை அல்குல் குறுமகள் |
| குவளை யுண்கண் மகிழ்மட நோக்கே. |
(சொ - ள்.) நெஞ்சே செவ் வேர்ச் சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் சுளையுடை முன்றில் மனையோள் - நெஞ்சே ! சிவந்த வேர்களையுடைய கிளைகடோறும் தூங்கும் பழங்கள் மிக்க பலாவின் சுளைகளையுடைய முன்றிலின்கண் மனையோளானவள்; கங்குல் ஒலி வெள் அருவி ஒலியில் துஞ்சும் ஊர் அல் சேரிச் சீறூர் - இரவில் நெருங்கி விழுகின்ற வெளிய அருவியின் ஒலியைக் கேட்டு உறங்காநிற்கும் பேரூரல்லாத (சிலவாய) சேரிகளையுடைய சீறூரின்கண்ணே; வல்லோன் வாள் அரம் பொருதகோண் ஏர் எல்வளை அகன் தொடி செறித்த முன்கை-கைவல் வினைஞன் வாளரத்தா லராவிய வளைந்த அழகிய ஒளியையுடைய வளையும் அகன்ற தொடியும் அணிந்த முன்னங்கையையும்; ஒள்நுதல் திதலை அல்குல் குறுமகள் குவளை உண்கண் மகிழ் மட நோக்கு - ஒள்ளிய நெற்றியையும் தித்தி படர்ந்த அல்குலையும் இளமையையுமுடைய நம் காதலியின் குவளைபோன்ற மையுண்ட கண்களின் மகிழ்ச்சியையுடைய இளம் பார்வையானது; மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கு அவர் அருங் குறும்பு எருக்கி அயாவுயிர்த்து ஆங்கு - மலை போன்ற யானைமீது ஏறி நடத்திச்சென்று புலையனால் முழக்கப்படும் பெரிய துடியானது ஒலிக்க வேற்றுநாட்டிற் புகுந்து அப்பகைவரது கடத்தற்கரிய அரணை அழித்து அயாவுயிர்த்தாற்போல; உய்த்தன்று மன்னே - நம்மை இவள் பால் மிகச்செலுத்தாநின்றது; ஆதலின் இவள் உடன்பட்டுக் கூறுங்காறும் நீ முயன்று வருந்தாதே கொள் !; எ - று.
(வி - ம்.) குறும்பு - அரண். எருக்குதல் - அழித்தல். மன் - மிகுதி. வேரின் பகுப்புக்கடோறும் பழந்தூங்கு மென்றதூஉமாம். மலை, அம், மா -மலையமா; சாரியை. சீறூர்க்குறுமகளென இயைக்க : பல வீடுகள் சேர்ந்திருப்பது - சேரி. மடநோக்கு - உள்ளொன்றுகொள்ளாத நோக்குமாம்.
எனவே, அரிய அரணையழித்து இளைத்ததுபோல யாமும் இவளது மனத்தி னிலையை நெகிழ்த்தி யிளைத்தனம், தலைவியின் கண்ணோக்கம் நம்மைச் செலுத்துகின்றமையான் இனி யெய்தவும் பெறுமாதலின் நீ வருந்தற்க வென்றதாயிற்று.மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாதுரைத்தல்.
(பெரு - ரை.) மலையன் மாவூர்ந்து போகி . . . . .அயாவுயிர்த்தாங்கு என்றும் பாடம். இதற்குச் சேரமன்னன் மாவூர்ந்து போகி . . . . . அயாவுயிர்த்தாங்கு என்க. மலையன்-சேரன் மலையமான் திருமுடிக்காரி என்னும் வள்ளற் பெருமானுமாம். கூட்டமுண்மையைக் குறிப்பான் உணர்த்துவான், தலைவியின் ஒண்ணுதல் திதலையல்குல் குவளையுண்கண் மகிழ்மடநோக்கு என அவளுறுப்புக்களை விதந்து ஓதினன் இதன் பயன் தனக்கும் தலைவிக்கும் உண்டாய காதற்கேண்மையைக் குறிப்பாலுணர்த்துதலாம். ஆற்றாதுரைத்தல் அன்றென்க.
இனி, இதன்கண் புறத்தே முள்ளும் அகத்தே இனிய சுனையையுமுடைய பலா நின்ற முன்றிலுடைய சீறூர் என்றது புறத்தே என்னைக்கடியும் சுற்றத்தார் சூழ்ந்திருப்பினும் என் அகத்தே உறையும் இனிய தலைவியை உடைத்து இவ்வூர் என இறைச்சிப் பொருள் தோன்றக் கூறியபடியாம் என்க.
(77)