திணை : பாலை.

    துறை : இது, பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைவன் வினைவயிற் பிரிவதறிந்து உடம்பு வேறுபட்ட தலைவி தோழியைநோக்கி நாம் தலைவர்பாற்சென்று பிரியா திருக்கும்படி கூறி நமது காமத்தன்மையையுஞ் சொல்லுகிற்போம். அவர் பிரியின் யானிறந்துபடுவது திண்ணமாதலின் அங்ஙனஞ் சொல்லி அவர் செலவை மாற்றுவதன்றி வேறெவ்வகைச் சூழ்ச்சியாலே தடுப்பதென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.)இதனை, "அவனறிவு ஆற்ற அறியும்" (தொல்-கற்- (9.) ) என்னும் நூற்பாவின்கண் "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீ 
    
கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர் 
    
மணலாடு கழங்கின் அறைமிசைத் தாஅம் 
    
ஏர்தரல் உற்ற இயக்கருங் கவலைப் 
5
பிரிந்தோர் வந்துநப் புணரப் புணர்ந்தோர் 
    
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ 
    
என்றுநாங் கூறிக் காமஞ் செப்புதுஞ் 
    
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று 
    
அம்ம வாழி தோழி 
10
யாதனின் தவிர்க்குவங் காதலர் செலவே. 

    (சொ - ள்.) தோழி வாழி அம்ம - தோழீ வாழி ! இதனைக் கேட்பாயாக !; ஈங்கை சிறை உறை நனிதிரள் நாள்வீ - ஈங்கையின் மூடியிருக்கின்ற தேன் துளி மிகத்திரளும் (புதிய) மலர்களானவை; கூரை நல் மனை குறுந் தொடி மகளிர் மணல் ஆடு கழங்கின் அறைமிசைத் தாஅம்-கூரையையுடைய நல்ல மனையின்கணுள்ள குறிய தொடியையுடைய மகளிர் தம் முன்றிலின் மணலிடத்து விளையாடுதற்கிட்ட கழங்குபோலக் கற்பாறையின்மேல் உதிர்ந்து பரவாநிற்கும்; ஏர் தரல் உற்ற இயக்கு அருங் கவலை - அழகு பொருந்திய மக்கள் இயங்குதற்கு அரிய கவர்த்த நெறியிலே; பிரிந்தோர் வந்து நம் புணர - பிரிந்து போயினீ ரெனினும் இப்பருவத்து வந்து எம்மைக் கூடி முயங்கியுறைய வேண்டியிருக்க; புணர்ந்தோர் பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ என்று நாம் கூறி - எம்மைக் கூடியிருந்த நீவிர் இப்பொழுது பிரிந்து போதற்கு நினைந்திருப்பதினுங்காட்டில் அரிய கொடுமை பிறிதுமொன்றுண்டோ? என்று நாம் அவர்பாற் சென்று கூறி; காமம் செப்புதும் - நமது விருப்பத்தைச் சொல்லுகிற்போம்; செப்பாதுவிடின் - சொல்லாதிருப்பின் அவர் அகலினும் அகன்று போவார்காண் !; உயிரொடும் வந்தன்று - அங்ஙனம் அகல்வாராயின் திண்ணமாக என்னுயிருக்கே ஏதம் வந்துற்றது; காதலர் செலவு யாதனில் தவிர்க்குவம் - ஆதலின் நாம் நேரிற் கூறி நிறுத்துவதன்றி நம் காதலருடைய செலவை வேறெத்தகைய சூழ்ச்சியாலே தவிர்க்கிற்போம்? ஆராய்ந்துகாண் !; எ - று.

    (வி - ம்.) உறை-தேன்றுளி. அறை - பாறை. ஏர் - அழகு. வந்தன்று : தெளிவு பற்றிய காலவழுவமைதி. பிரிந்தோர், புணர்ந்தோர் இடவழுவமைதி.

    பிரிவுணர்தலும் உடம்பு வேறுபட்டதாதலிற் பிரியின் இறந்துபடுவது திண்ணமெனக் கொண்டு உயிரொடும் வந்தன்றென்றாள்.

    இறைச்சி :- தேனிறைந்தமலர் கற்பாறைமிசைத் தாம் என்றது வேட்கை நிறைந்த என்னெஞ்சம் அவர்வயிற் சென்றொழிந்த தென்றதாம். மெய்ப்பாடு -அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) சிறை ஈங்கை என்றது தம் நன்மனைக்கு வேலியாக அமைந்த ஈங்கை எனக் கோடலும் கூடும். நாள்வீ என ஒட்டுக. தோழி இது பிரியத் தகுந்த பருவமன்றென்ப துணர்த்திச் செலவழுங்குவித்தபடியாம். மெல்லியல்புடைய என்னெஞ்சம் வன்மைமிக்க தலைவன்பாற் செல்கின்றது என்பாள் நாள்வீ அறைமிசைத் தாம் என்றாள்.        

(79)