திணை : குறிஞ்சி.

     துறை : இஃது இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடு்ங் கண்ட தலைமகன் சொல்லியது.

    (து - ம்.) என்பது, இயற்கைப் புணர்ச்சி இறுதியில் ஆயத்தொடு கூடிய தலைமகளை அவ் வாயத்தார் செய்யும் வழிபாடறிந்த தலைமகன், இவள் யார் மகளென வியந்து இவள் எனக்கு எய்தற்கரியளாமென ஆற்றானாகி, இத்தகைய புதல்வியைப் பெற்று எனக்குதவிய இவள் தந்தையும் தாயும் வாழ்க வென வாழ்த்தா நிற்பது.

     (இ - ம்.) இதனை, “மெய் தொட்டுப் பயிறல்”, (தொல்-கள- 11) என்னும் நூற்பாவின்கண் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுவழி என்பதன்கண் "சொல்லிய" என்ற மிகையான் தலைவி நீங்கியழிப் பிறந்த வருத்தத்தைத் தலைவன் கூறியதென அமைத்துக்கொள்க.

    
அல்குபட ருழந்த அரிமதர் மழைக்கண் 
    
பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குல் 
    
திருமணி புரையு மேனி மடவோள் 
    
யார்மகள் கொல்லிவள் தந்தை வாழியர் 
5
துயரம் உறீஇயினள் எம்மே அகல்வயல்  
    
அரிவனர் அரிந்துந் தருவனர் பெற்றுந்  
    
தண்சேறு தாஅய் மதனுடை நோன்தாள் 
    
கண்போல் நெய்தல் போர்விற் பூக்குந் 
    
திண்டேர்ப் பொறையன் தொண்டி 
10
தன்திறம் பெறுகஇவள் ஈன்ற தாயே. 

     (சொ - ள்.) அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண் - மிக்க துன்பமுழந்த செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்களையும்; பல் பூ பகைத் தழை நுடங்கும் அல்குல் - பலவாகிய பூக்களுடனே மாறுபடத் தொடுக்கப்பட்ட தழையுடையை அசையும்படி உடுத்த அல்குலையும்; திருமணி புரையும் மேனி மடவோள் - அழகிய நீலமணியொத்த மேனியையுமுடைய இவ் விளமகள்; யார் மகள் - யாவர் புதல்வியோ?; எம்மே துயரம் உறீஇயினள் -அசையாத உள்ளத்தையுடைய எம்மையே துயரஞ் செய்தனள்!; தந்தை வாழியர் - இத்திறம் வல்லவளைப்பெற்று எனக்குதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழ்வானாக!; இவள் ஈன்ற தாய் - இவளை ஈன்ற தாயும்; அகல் வயல் அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும் தண் சேறு தா அய் - அகன்ற வயலின்கண்ணே மள்ளரால் அரியப்பட்டும் அரிச்சூட்டை எடுப்போராற் கொண்டுவரப்பட்டும் தண்ணிய சேறு பரந்து; மதன் உடை நோன தாள் கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும் - அழகினையும் வலிய தண்டினையுமுடைய கண்போன்ற நெய்தல் நெற்போரின்கண்ணே மலரும்; திண் தேர்ப் பொறையன் தொண்டி தன் திறம் பெறுக - திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டி நகர் போன்ற சிறப்பினைப் பெறுவாளாக!; எ - று.

     (வி - ம்.) உழத்தல் - தன்போற் காட்சியிற் பெருவிதுப்புறுதல். அல்கல் - மிகுதல். உழந்த மடவோளென இயைக்க. அறிவனரென்பது முதல் நெய்தற்கு அடை, போர்வு - கதிர்ப்போர். பொறை - மலை: மலைநாடனாதலிற் சேரலன் பொறையனெனப்பட்டான். பெரிதுமோர் இன்பந் துய்த்தாலன்றிப் பயந்தோரை வாழ்த்தல் இயல்பின்மையின் இஃது இயற்கைப்புணர்ச்சி யிறுதிக்கட் கூறியதாயிற்று பொறையனது தொண்டி எல்லாவளனும் பெற்றுத் திகழ்தல்போல, ஈன்றதாய் எல்லா வளனும் பெற்றுத் துய்க்க வென்றானாம். நெய்தல் அரிவோரால் அரிந்து கொணரப்பட்டுக் கதிர்ப்போரினும் மலருமென்றதனாலே, இவள் யாண்டுச் செல்லுகினும் ஆண்டுச் சிறப்பெய்துக வென்றவாறு. மெய்ப்பாடு - உவகையைச் சார்ந்த மருட்கை. பயன் - பயந்தோர்ப்பழிச்சல். இதனைப் புணர்தனிமித்த மென்பர் நச்சினார்க்கினியர்; (தொ,பொ-14, உரை.)

     (பெரு - ரை.) எம்மே என்புழி ஏகாரம், தெளிவின்கண் வந்தது. அசையாத உள்ளமுடைய எம்மையும் என்பதுபட நின்றது. இயற்கைப் புணர்ச்சி எய்திய பெருமிதம் தோன்றக் கண்ணையும் அல்குலையும் மேனியையும் விதந்தோதினன். யார் மகள் என்றது இத்தகைய மாண்புடைய இவள் என்ப துபட நின்றது. தந்தையினும் காட்டிற் றாயே சிறந்தமையான் தந்தை வாழி என வாளா கூறித் தாய் தொண்டிதன் திறம் பெறுக என்று விதந்தோதினன். நெய்தல் பூக்கும் என்றது பெறுபவர் பெற்று, வளர்ப்பவர் வளர்த்து எனக்கு இன்பந்தந்தனள் என்பதையுங் குறிக்கும்.

(8)