திணை : குறிஞ்சி.

    துறை : இது, தோழியிற் புணர்ச்சிக்கண் தன்னிலைச்கொளீ இயது.

    (து - ம்,) என்பது, பாங்கியிற் கூட்டத்தின்கண்ணே குறியிடத்துத் தலைவியைக் கூடிய தலைவன் தன்னெஞ்சிற் கிடந்த கருத்தைக் கூறத்தொடங்கிக் கொடிச்சி, முருகனொடு வள்ளிநாச்சியார் சென்றது போல நீ எஞ்சிறு குடிக்கண் வந்திருக்குமாறு என்னொடு வருகின்றனையோ எனப் பரிவுற்று மெலிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பரிவுற்று மெலியினும்" (தொல்-கள- 12) என்னும் விதிகொள்க.

    
நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த 
    
வேய்வனப்பு உற்ற தோளை நீயே 
    
என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி 
    
முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போலநின் 
5
உருவுகண் எறிப்ப நோக்கலாற் றலனே 
    
போகிய நாகப் போக்கருங் கவலைச் 
    
சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் 
    
சேறாடு இரும்புறம் நீறொடு சிவண 
    
வெள்வசிப் படீஇயர் மொய்த்த வள்புஅழீஇக் 
10
கோள் நாய் கொண்ட கொள்ளைக் 
    
கானவர் பெயர்க்குஞ் சிறுகுடி யானே. 

    (சொ - ள்.) நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த வேய் வனப்பு உற்ற தோளை நல் நடைக் கொடிச்சி-யான்கொண்ட காமநோயும் அதனாலாய மெய்யின் தளர்ச்சியும் ஒழியுமாறு முயங்கிக் கிடந்த சிறப்புற்ற மூங்கில் போலும் அழகமைந்த தோளையுடையையாதலின் நல்ல நடையையுடைய கொடிச்சீ !; போகிய நாகப் போக்கு அருங் கவலை உயர்ந்த நாகமரங்களையுடைய செல்லுதற்கரிய கவர்த்த வழியினிடத்திலே; சிறுகண் பெருஞ்சின ஒருத்தல் பன்றி - சிறிய கண்ணும் பெரிய சீற்றமுமுடைய ஆண்பன்றி; சேறு ஆடு இரும்புறம் நீறொடு சிவண - சேற்றில் உழலுதலானே அச்சேறு பூசப்பெற்ற கரிய முதுகு புழுதி படிந்திருப்ப அப் புழுதியுடனே விளங்கச் சென்று; வெள் வசி படீஇயர் - சுருக்குவார் வைத்த வெறும் பிளப்பில் விழுந்துபட்டதாக; வள்பு அழீஇ மொய்த்த கோள் நாய் கொண்ட கொள்ளை - அங்ஙனம் படுதலும் வாரை அழித்து மொய்த்தனவாய்க் கொன்று நாய்கள் பற்றிக் கொண்ட மிகுதிப்பட்ட தசைகளை அவை கொண்டு போகாதபடி; கானவர் பெயர்க்கும் - கானவர் சென்று அவற்றை விலக்கிப் பன்றி யிறைச்சியைக் கொணரா நிற்கும்; சிறு குடியான் - சிறு குடியின்கண்ணே; முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நீ என் உள் வருதியோ - முருகவேளைக் கலந்துடன் சென்ற வள்ளிநாச்சியாரைப்போல நீ என்னுடன் வருகின்றனையோ?; நின் உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலன் - நின் வடிவின் ஒளி கண்ணில் வீசுதலானே யான் நின்னை நோக்கலாற்றல் ஆகாதேனாயினேன் அதனால் வேறொன்றனையும் எண்ணாதே கொள்; எ - று.

    (வி - ம்.) நீறு - புழுதி. வசி - பிளப்பு. வெள்வசி - வெறும்பிளப்பு. வெற்றிலை வெள்ளிலையென்பது போல, தோளையாதலால் யானென்று முய்ய வேண்டி என்னுள் வருதியோ வென்றானென்க. தோள் உய்வித்தலை, "உறுதோறுயிர் தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள்", என்ற (1106) குறளானுமறிக. முருகு-இளமை: வேளுக்குப் பண்பாகு பெயர். பிளப்புக்களிலே சுருக்குவார் வைத்து விலங்குகளைப் பிடிப்பது வழக்கு. வள்பு - வார். கொள்ளை - மிகுதி. மொய்த்தனவாய் நாய்கொண்ட கொள்ளை யென்க. முருகு தலைமகனுக்கும் வள்ளி கொடிச்சிக்கும் உவமை. இது சிறப்பு நிலைக் களமாக முதலொடு முதல்வந்த வினையுவமம் : தன்னுடன் வரவிளிப்பான் உடன்சென்ற வள்ளியாரை யுவமித்தலின்.

    உள்ளுறை :- பன்றி தலைவியாகவும், வாரினகப்படுதல் தலைவி காம நோயிலகப்பட்டதாகவும், பன்றியின் தசையை நாய்பற்றுதல் தலைவியினலத்தைப் பசலைபற்றி்க் கெடுத்ததாகவும், கானவர் பெயர்க்குதல் தலைவன் அப்பசலையை நீக்குவானாகவுங் கொள்க. இது வினையுவமப் போலி. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தன்னிலைமையை அவள் மனங்கொள்ளும்படி கூறல்.

    (பெரு - ரை.) உன்னுள் வருதியோ என்பதற்கு மாறாக என் உயவு அறிதியோ என்றும் பாடவேற்றுமை யுளது. இப்பாடமே சிறந்ததாகவுந் தோன்றுகின்றது. இப்பாடத்திற்குநின்னை நின் உருவு வள்ளி போலக் கண் எறித்தலான் நோக்கல் ஆற்றலன் என் துன்பத்தை நீ உணர்ந்து கொள்வையோ கொள்ளாயோ என்று பொருள் கூறிக் கொள்க, இது நலம் பாராட்டித் தன்னிலை உரைத்தது என்க.

(82)