(து - ம்.) என்பது, வரைபொருட்பிரிந்த தலைமகன் பகற்பொழுதையில் வெளிப்படையாக வருதலானே, வரையக்கருதினன்போலுமென்றுணர்ந்த தோழி, தலைவியை நோக்கிச் சேர்ப்பன் பகற்காலத்திலே பலருங்காண இங்கு வருதலை நீ யறிந்தனையன்றோவெனக் குறிப்பால் வரைவுமலிதலை மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "ஆங்கு அதன் தன்மையின் வன்புறையுளப் பட" என்பதன்கண் (தொல்-கள- 23) அமைத்துக்கொள்க.
| நீயுணர்ந் தனையே? தோழி வீயுகப் |
| புன்னை பூத்த இன்நிழல் உயர்கரைப் |
| பாடிமிழ் பனிக்கடல் துழைஇப் பெடையோடு |
| உடங்கிரை தேருந் தடந்தாள் நாரை |
5 | ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் |
| மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பைத் |
| தாய்ப்பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும் |
| கானலம் படப்பை ஆனா வண்மகிழ்ப் |
| பெருநல் ஈகைநம் சிறுகுடிப் பொலியப் |
10 | புள்ளுயிர்க் கொட்பின் வள்ளுயிர் மணித்தார்க் |
| கடுமாப் பூண்ட நெடுந்தேர் |
| நெடுநீர்ச் சேர்ப்பன் பகல்இவண் வரவே. |
(சொ - ள்.) தோழி வீ உக புன்னை பூத்த இன் நிழல் உயர்கரை - தோழீ ! மலர்கள் உதிரும்படி புன்னை பூத்திருக்கின்ற இனிய நிழலையுடைய உயர்ந்த கரையையுடைய; பாடு இமிழ் பனிக் கடல் துழைஇப் பெடையொடு உடங்கு இரைதேரும் தடதாள் நாரை - ஓசை முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலின் கண்ணே துழாவித் தன் பெடையோடு ஒருசேரச் சென்று இரையைத் தேடுகின்ற நீண்ட காலையுடைய நாரை; ஐய சிறு செங்கடைக்கண் சிறுமீன் மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும் - மெல்லிய சிவந்த சிறிய கட்கடையையுடைய சிறிய மீன்களைப் பிடித்து, மேலோங்கிய கிளையின்மேலுள்ள கூட்டின்கணிருந்து தாயைக் கூவியழைக்கின்ற தன் பிள்ளையின் வாயிற்படக் கொடுக்கின்ற; கானல் அம் படப்பை ஆனா வள்மகிழ் பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய - கடற்கரைச் சோலையையும் (அழகிய) கொல்லையையும் கெடாத வளவிய மிக்க உணவையும் பெரிய நல்ல கொடையையுமுடைய நமது சிறுகுடி யெங்கும் பொலிவு பெற; புள் உயிர் கொட்பின் வள் உயிர் மணிதார் கடு மா பூண்ட நெடுந்தேர் - புள் ஒலித்தாற்போன்ற சுழற்சியையுடைய பெரிய ஒலியையுடைய மணிகள் பிணைத்த மாலையணிந்த கடிதாகச் செல்லுங் குதிரைபூட்டிய நெடிய தேரின்மேல்; நெடுநீர் சேர்ப்பன் பகல் இவண் வரவு - நீண்ட கடற்கரைத் தலைவனாகிய நம் காதலன் பகற் பொழுதிலே பலருங் காண இங்கு வருவதனை; நீ உணர்ந்தனையே - நீ உணர்ந்தனையோ ?; இங்ஙனம் வெளிப்படையின் வருதலானே வரைவு கருதி வந்தனன் போலும்; எ - று.
(வி - ம்.) ஐது - மெல்லிது. பயிர்தல் - அழைத்தல். பிள்ளை - பறப்பவற்றிளமைப்பெயர். வள்ளுயிர் - பேரொலி. இங்ஙனமென்பது முதற்குறிப்பெச்சம். தமர் மறாது மகட்கொடை நேர்வரென்றதை யடக்கிப் 'பெருநல்லீகை நம் சிறுகுடி'யெனக் குறிப்பித்தாள்.
உள்ளுறை :- பெடை பாகன் முதலாயினோராகவும், நாரை தலைவனாகவும், கடலிற்சென்று இரைதேடுதல் வேற்றுநாட்டுச் சென்று பொருளீட்டியதாகவும், சொரிதல் அவர்க்கு இருநிதி யளிப்பதாகவுங் கொள்க. மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவியை மகிழ்வித்தல்.
(பெரு - ரை.) பெடையொடு உடங்கு பனிக்கடல் துழைஇ இரைதேரும் நாரை எனக் கொண்டு கூட்டுதல்நேரிதாம். செங்கடைச் சிறுமீன் என்புழி வால் சிவந்துள்ள சிறியமீன் எனினுமாம். பகல் இவண் வரவு நீ உணர்ந்தனையே என இயைத்துக்கொள்க.
(91)